இசையில் வந்த காதல்
காற்றில் மிதந்து வந்தது ஓர் உன்னத வீணை இசை
அத்துடன் இழைந்து குழைந்து வந்தது
ஒரு மெல்லிய குயில் ஓசை இல்லை
ஒரு பெண்ணின் வாய்ப்பாட்டு
என் உடலை உலுக்கி எழுப்பிய அந்த இசை
என் மனதைத் தொட்டு அதையும் தாண்டி
என் உயிரை தொட்டது
முன்னிரவு நேரம் முழு நிலவும் வந்து
மண்ணும் விண்ணும் வெள்ளி நிறமாய் மாறியது
எழுந்தேன் நடந்தேன் அந்த இசை வந்த திசை நோக்கி
சென்றடைந்தேன் எளியந்தோர் இல்லத்தை
உள்ளே நோக்கில் அதிர்ச்சி உற்றேன்
அழகிய இள மங்கை அவள்
கை விரல்கள் மீட்ட மீட்ட
நாத மழை விண்ணை நிரப்ப
அத்துடன் லயமாய் சேர்ந்தது
அவள் வாய்ப்பாட்டு .............
அருகில் சென்றேன்
அவளை பார்த்து சற்றே அதிர்ந்தேன்
அத்தனை அழகும் ஞானமும் தந்த இறைவன்
அவள் பார்வையை மட்டும் எடுத்து கொண்டான்
என் கால் ஓசைக்கு கேட்டு யார் அங்கே என்றாள்
இசையும் நின்றது சற்றே ,
நான் சொன்னேன் ' மங்கையே உன் இன்னிசை
காற்றாய் என்னை இங்கு உன்னிடம் தூக்கி வந்தது என்றேன் '
அந்த இசைக்கு காணிக்கையாய் என் மனதையே
அவள் பாதத்தில் சமர்ப்பித்தேன்
அவள் என்னை காதலனாய் ஏற்பாளா
இதோ அவளையே கேட்டும் விட்டேன்
பதிலுக்கு ஓர் இசைக்க கலந்த அழுகை ஓலி
சம்மதம் தெரிவித்தது அந்த சஹானா ராகம்
இசையும் ரசிகனும் சங்கமம் அங்கே !