மாணிகக்கூடை - சென்மாட்டமி_இசைப்பாடல்
நேற்று இரவு நேரத்தில் என் விரல் தீட்டிய விசித்திர வாசுதேவன் என் காதுகளில் இதைத்தான் பாடிக்கொண்டிருந்தான். காலை எழுந்ததும் கண்ணணே இதனை என்னுள்ளிருந்து எழுதிக்கொண்டான்...இதோ
எடுப்பு:
கூடையி லேயொரு மாணிக்கத்தைக்
கூட்டிக் கொண்டு செல்லுகிறேன்
கூட வாருங்கள் - உயிர்களே
கூடி வாருங்கள் !
உடனெடுப்பு:
வாடையி லேகரும் வேளையிலே இந்த
வானைப் பிளக்கும் மழையினிலே
வாழ்த்த வாருங்கள் - கண்ணன்முக
வண்ணம் காணுங்கள் !
முடிப்புகள் :
ஆலால நிறங்கொண்டான்
ஆண்டவனின் உருகொண்டான்
நாலாயிர நாயகனும்
நமக்கருள வந்துதித்தான் !
பட்சிகளே வாருங்கள்
பாட்டெழுதித் தாருங்கள்
உச்சிதொடும் தென்றலிலே
உரையெழுதிப் போடுங்கள் ! (கூடையிலே...)
வாசுதேவன் நடக்கையிலே
வான்பிளந்து சிரிக்கையிலே
வாசுகியின் குடையினிலே
வண்ணமோடு துஞ்சுகின்றான் !
நந்தகோபன் வீட்டினிலே
நாளுமொரு சேட்டையெனத்
தொந்தரவு செய்துவந்தால்
தொல்லையெனக் கருதாதீர் !! (கூடையிலே...)
-விவேக்பாரதி