நினைவலைகள்

நினைவலைகள்

சுற்றிலும் பச்சைப்பசுமையான வயல்களைக் கொண்ட அந்தப் புளியாநல்லூர் கிராமத்தின் நடுவே வந்து நின்ற பேருந்தில் இருந்நு இறங்கிய சுமதிக்கு தனக்காக அங்கு காத்துக்கொண்டிருந்த தன் அண்ணன் பாலாவை கண்டவுடன் கண் கலங்கியது.
” நீ எப்படிம்மா இருக்க … ” என்றான் பாலா.

” நா … நா … நல்லாயிருக்கேண்ணா … ” என்று சொல்லும்போதே சுமதியின் தொண்டையை சோகம் அடைத்தது.

” என்ன மன்னிச்சிரும்மா … இந்தக்கேள்விய நான் ஒன்கிட்ட கேட்டிருக்கக்கூடாது ” என்றான் பாலா.

” போகட்டுண்ணா … நீ எப்படி இருக்க , அண்ணி எப்படி இருக்காங்க ” — சுமதி.

” எல்லாரும் நல்லாயிருக்கோம்மா … ” — பாலா.

” நீ காலேலேந்து ஏதாவது சாப்டியாம்மா … ” என்றான் தொய்ந்த குரலில் பாலா.

” அரசம்பட்டியில டிஃபன் சாப்டுட்டுதாண்ணா பஸ் ஏறினேன் ” — சுமதி.

அரசம்பட்டியிலிருந்து புளியாநல்லூர் வருவதற்கு ஒன்றரை மணிநேரம் பயணம் செய்ய வேண்டும் . இருவரும் வீட்டை நோக்கி நடக்கிறார்கள் . வழியில் தென்னந்தோப்பைப் பார்த்ததும் சுமதியின் கண்களில் நீர் கோர்த்துக்கொண்டன.

ஒரு காலத்தில் மாந்தோப்பு , புளியந்தோப்பு , தென்னந்தோப்பு , கால்வாய் , ஆறு , குளம் , நீரோடை ஆகியவற்றில் இவர்களின் கால்கள் பதிந்ததால்தான் அவ்விடங்களுக்கு மதிப்பே ஏற்பட்டது.

அவ்வூரில் இவர்களின் கால்தடம் பதியாத இடமே கிடையாது என சொல்லலாம் . அப்படியும் அவ்வூரில் இவர்களின் பாதம் படாத இடங்கள் எந்தக் காலத்திலோ பாவம் செய்தவை.

மாலை பள்ளி முடிந்து வீடு வந்தவுடன் இவர்கள் இருவரும் வீட்டுப்பாடங்களை முடித்த மறுகனமே வெளியே விளையாடச் சென்று விடுவார்கள் . விளையாடி முடித்து இரவுதான் வீடு திரும்புவார்கள் .

ஒரு முறை மாந்தோப்பில் இருக்கும் ஒரு மாமரத்தை சிலர் வெட்டிக்கொண்டிருக்கும்போது அதில் குடிகொண்டிருந்த இரு காதல் பறவைகளை எடுத்து அந்தக் காதல் ஜோடியைக் காப்பற்றி அப்போதே காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாள் சுமதி.

வீட்டை நெருங்க நெருங்க சுமதியின் மனம் கணக்க ஆரம்பித்தது . அவள் மனதில் இனம் புரியாத சோகம் ஒன்று தாக்கியது.

வீட்டில் இருந்த பாலாவின் மனைவி மகேஸ்வரி , சுமதியை வரவேற்றாள்.

” வாம்மா … சுமதி … எப்படிம்மா இருக்க … ” என்றாள் மகேஸ்வரி.

” நல்லாயிருக்கேன் அண்ணி … ” என்றாள் சுமதி வாய்வார்த்தைக்காக.

வீட்டிற்குள் நுழைந்தவுடன் அப்பாவின் நிழலைப் புகைப்படத்தில் மாலையுடனும் , அம்மாவை ஒரு மூலையில் முடங்கியபடியும் பார்த்த சுமதியின் மனது குமுற ஆரம்பித்தது.

இவற்றைப் பார்த்தவுடன் நினைவலைகள் அவள் கண் முன் ஓடத்தொடங்கியது.

ஒரு காலத்தில் , ” அழகான குடும்பம் … அளவான குடும்பம் … ” என்று ஊர்மக்கள் அனைவராலும் போற்றப்பட்ட குடும்பம் , இன்று இப்படி இருப்பதற்கு சுமதியும் ஒரு காரணம்.

வீட்டின் முற்றத்தில் அமர்ந்து எல்லோரும் ஒன்றாக பல்லாங்குழி , ஆடுபுலி ஆட்டம் மற்றும் பல ஆட்டங்கள் விளையாடிய காலம் ஒரு காலம்.

திருவிழா என்று வந்துவிட்டால் , ஊர்மக்கள் அனைவரும் ஒன்று கூடி விழாவை நடத்த , ஊரே களை கட்டும் . அதேபோல் வீட்டில் விசெஷம் என்று வந்தால் அனைவரும் வரிந்து கட்டிக்கொண்டு விசெஷத்தில் பங்கேற்பர்.

சிறு வயதில் , சுமதி சமைக்கிறேன் பேர்வழி என்று சமையற்கட்டில் அடித்த ரகளைக்குப் பரிசாக , அவள் அம்மாவிடமிருந்து செல்லமாக வாங்கிய அடியை அவளால் இன்றளவும் மறக்கமுடியாது.

சுமதி பருவத்தை எட்டியவுடன் ஊரே வந்து அவளது விசெஷத்தில் கலந்து கொண்டது.

இப்படி சந்தோஷமாக இருந்த அவர்களது குடும்பத்தின் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை . வாழ்வில் பௌர்ணமி மட்டுமே ஒளி வீசிக்கொண்டிருக்காது , அமாவாசையும் வரும் என்பது போல அவர்களது வாழ்க்கையிலும் இருள் பற்றத் தொடங்கியது.

சுமதிக்கு அசலூர்க்காரன் ஒருவன் மீது காதல் வர , ஒரு கால கட்டத்தில் அக்காதல் பெற்றோர்களுக்குத் தெரிய வர , சுமதிக்கு சிறைவாசம் வீட்டிலேயே …

அதையும் மீறி சுமதி பெற்றோர்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்து கொண்டு அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க வர , அவர்கள் சுமதியையும் , அவள் கணவனையும் , வசைமாறி பொழிந்ததுடன் , அவமரியாதையாகவும் பேசி தலைமுழுகி விட்டனர் . இதனைத் தாங்க முடியாமல் , சுமதியின் கணவர் குடும்பத்திற்குச் சென்றால் , அவர்களும் இவர்களை தலைமுழுகி விட இவர்கள் சென்னைக்கு வந்து தனியாக குடியெறினர்.

சுமதி போனதற்குப் பின் நோய் வாய்ப்பட்ட அவளின் தந்தை , சில மாதங்களிலேயே இயற்கை எய்த , அந்த சோகத்திலேயே அவளது அம்மாவிற்கு பித்து பிடித்துவிட்டது.

தந்தையின் ஈமைச்சடங்குகளுக்கூட சுமதியை அனுப்பவில்லை அவளது கணவன் . சுமதிக்கு ஒரே துணையாக இருந்த அவளது கணவனும் விபத்து ஒன்றில் உயிரிழந்து விட , தனி மரமானாள் சுமதி . அவள் சோகத்திற்கு அளவே கிடையாது.

இந்த நினைவுகள் , ஒரு கனவு போல அவள் மனத்திரையில் ஓடி முடிந்தது.

சுமதியின் கணவன் இறந்தவுடன் , அவள் அண்ணன் பாலா , இங்கு வரச்சொல்லி கடிதம் போட்டு வற்புறுத்த பல மாதங்களுக்குப் பின் இங்கு வந்திருக்கிறாள் சுமதி.

” அம்மா … என்ன மன்னிச்சிரும்மா … ” என்று கதறி அழுகிறாள் சுமதி , தன் அம்மாவிடம்.

சுமதியின் முகத்தைக்கூடப் பார்க்காமல் தலையைக் குனிந்தபடியே அவளது அம்மா , ” என் புருஷன் போயிட்டாரு … என் புருஷன் போயிட்டாரு … ” என்று சொல்லியபடியே கைகளில் உள்ள கணவரின் புகைப்படத்தில் தன் முகத்தைப் புதைத்துக்கொண்டு தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்தாள்.

” என்னம்மா … இன்னும் சின்னக்கொழந்த மாதிரி அழற … ” — பாலா.

” போய்க்குளிச்சிட்டு வாம்மா … சாப்புடலாம் … ” என்றாள் அண்ணி.

சுமதி குளித்துவிட்டு அனைவரும் சாப்பிட்டு முடித்த பின் பாலாவும் , அவன் மனைவியும் , சுமதியை தனியே கூப்பிட்டனர்.

” சுமதி … இன்னும் எத்தனை நாளும்மா இப்படியே இருக்கப்போற … நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டு குடியும் குடித்தனமுமா இருக்கறத நான் பாக்கனும்மா … ” — பாலா.

” என்ன மன்னிச்சிருண்ணா … என் புருஷனோட கனவலைகள்ளயும் , நம்ம அப்பா அம்மாவோட நினைவலைகள்ளயும் வாழ்ந்தே என் காலத்த தள்ளிடறேண்ணா … தயவு செஞ்சு என்ன வற்புறுத்தாத … என் உயிர் போனா அது இந்த வீட்டுலதான் போகனுண்ணா … ” என்று கண் கலங்க பாலாவின் தோள்களில் சாய்கிறாள் சுமதி.

– வி.ல.நாராயண சுவாமி

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (7-Sep-16, 1:58 pm)
Tanglish : ninaivalaigal
பார்வை : 185

மேலே