ஏனடி தயக்கம்

விண்மீன் தோட்டத்தில் பூப்பறித்து
மணமாலை நமக்காய் தொடுத்து வைத்தேன்.

வெண்ணிலா சுரங்கத்தில் பொன் எடுத்து
தாலி ஒன்றை செய்து வைத்தேன்.

ஆகாயம் முழுக்க பந்தலிட்டு
உறவுகளுக்கு சொல்லி விட்டேன்.

சூரியனை தூது விட்டு
மணவோலையை நானும் கொடுத்து விட்டேன்.

சந்திரனை சமைக்கச் சொல்லி
அறுசுவை விருந்து நான் படைத்தேன்.

இடி முழக்கம் வானைப் பிளக்க
மங்கள தாளம் இசைக்கச் செய்தேன்.

மேகங்களைத் தூறச் செய்து
அர்ச்சனைகள் போடச் செய்தேன் .

இத்தனையும் உனக்காய் செய்ய
உனக்கு மட்டும் ஏனடி தயக்கம்.

எழுதியவர் : தங்கமணிகண்டன் (19-Sep-16, 12:43 am)
சேர்த்தது : தங்கமணிகண்டன்
Tanglish : aenadi thayakkam
பார்வை : 88

மேலே