வெளிநாட்டு நிதி மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள்

ஆர்.வைத்தியநாதன்- தமிழில் :பாஸ்டன் பாலா | இதழ் 109 | 16-07-2014|

இந்தியா ஒரு விசித்திரமான நாடு. அதிகாரபூர்வமாக இங்கு 20 பங்குச் சந்தைகள் இருக்கின்றன. ஆனால் இவற்றுள் இரண்டு மட்டுமே செயல்படுகின்றன. மும்பை பங்கு சந்தையில் [பி.எஸ்.ஈ] பட்டியலிடப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை மட்டும் கிட்டத்தட்ட 9,000. இவற்றில் 3,500 பங்குகள் மட்டுமே வருடத்திற்கு குறைந்தது ஒரு முறையாவது விற்கப்படுகின்றன.

அதிகம் வாங்கி/விற்கப்படும் 50 பத்திரங்கள் மட்டும் கிட்டத்தட்ட மொத்த சந்தையின் சுழற்சியில் மூன்றில் இரண்டு மடங்காக உள்ளன. உண்மையில் 250 முதல் 300 பங்குகள் மட்டுமே ‘சுறுசுறுப்பாக’ வாங்கி, விற்கப்படுகின்றன. இதில் சுவாரசியம் என்னவென்றால், இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) மூலம் வெளியிடப்பட்ட இந்திய பத்திரச் சந்தை பற்றிய புள்ளிவிபரங்களின் சமீபத்திய கையேட்டில், மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட பங்குகளின் எண்ணிக்கையைத் தெரிவிக்கும் நெடும்பத்தியையே நீக்கி விட்டது! எண்ணிக்கை தெரிவதால் வரும் பிரச்சினையைத் தீர்க்க இப்படியும் ஒரு வழி இருக்கிறது.

இதே பாணியில், நாங்கள் இந்தியாவில் இயங்கும் இலாபத்திற்காக இயங்காத அல்லது அரசு சாரா நிறுவனங்களை (என்.ஜி.ஓ) ஆய்வு செய்ய முடிவு செய்தோம். கல்வியாளர்களாக இருப்பதால், எமக்குச் சாதாரணமாக ஆராயப்படாத விஷயங்களை விசாரணைக்கு எடுக்கும் பழக்கம் இருக்கிறது! இந்த விஷயங்களில் தன் போக்கில் போகிற நரியின் பாதையில் இடற வேண்டாம் என்பதுதான் தேசிய வழக்கு.

என் ஜி ஓக்கள் என்பவை தன்னார்வ நிறுவனங்கள் (VOs- த நி-க்கள் ) அல்லது தன்னார்வ முகமைகள் (Voluntary agencies- VAs) என்று அறியப்படுகிறார்கள். வேறு விதமாக இவையே வளர்ச்சிக்கான தன்னார்வ நிறுவனங்கள் (VDOs) மற்றும் வளர்ச்சிக்கான அரசு சாரா நிறுவனங்கள் (NGDOs) அல்லது இலாப நோக்கற்ற நிறுவனங்கள் (NPIs) என்ற பிரிவிலும் வருகிறார்கள். பல இந்திய மொழிகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மேற்கண்ட பெயர்களுக்குச் சமமான சொற்கள் உள்ளன. ஹிந்தியில் தொண்டு நிறுவனங்கள் சுயம்சேவி சன்ஸ்தாயேன் அல்லது ஸ்வயம்ஸேவி சங்கத்தன் என அழைக்கப்படுகின்றன.

1860ல் சங்கங்கள் பதிவு சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னதாக, தன்னார்வ நடவடிக்கை, அனேகமாக மத மற்றும் கலாச்சாரப் பண்பாட்டால் வழிநடத்தப்பட்டது. பின்னர், இலாப நோக்கற்று இயங்கும் துறையைக் குறித்து பல்வேறு சட்டங்கள் அமலாகின. இதன் தொடக்கப் புள்ளியாக இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் 19வது ஷரத்தில் குடிமை உரிமைகள் பல அங்கீகரிக்கப்பட்டன. அதில் ஒன்றாக, “அமைப்புகள் அல்லது சங்கங்கள் அமைக்கும் ….” உரிமை ஏற்கப்பட்டது . இது இலாபம் ஈட்டாத் துறைக்குப் பொருத்தமான சட்ட விதிகளை அமைக்கும் சட்ட அடிப்படை. இலாப நோக்கற்ற, தன்னார்வ அல்லது தருமப்பணியைத் தொடங்கும் நோக்கம் கொண்ட எந்த ஒரு குழுவும், தம்மைச் சட்டப்படி பதிவு செய்து கொண்ட சங்கமாக இயங்கவும், சட்ட ரீதியாகக் கட்டாயமற்ற விதிகளும் இதில் உள்ளன. இந்த விதிகள் என்.ஜி.ஓ.வின் விருப்பத்துக்கு ஏற்ப இயங்கச் சுதந்திரம் தருகின்றன. இந்த நெகிழ்வுத்தன்மையால், பதிவு செய்யாத தன்னார்வ அமைப்புகள் ஏராளமாக இருக்கின்றன.

இந்தியாவிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டம் (UNDP) மற்றும் ஐ.நா. தன்னார்வத் தொண்டர்கள் (UNV) திட்டமும் UNDP யின் தில்லி அலுவலகத்தில் ஜனவரி 2006 ல் ஒரு கருத்துக் களத்திற்கு ஏற்பாடு செய்தன. இந்திய தேசிய வருமானக் கணக்கு முறையின் கீழ் இலாபம் ஈட்டாத நிறுவனங்களுக்கான ஐ.நா. கையேட்டின் வரையறைகளைச் செயல்படுத்துவதில் உள்ள பிரச்சினைகள் பற்றி பேசக் கூடினார்கள்.

இந்த அரங்கில், ஐ.நா. குடியுரிமை ஒருங்கிணைப்பாளரும், UNDP இந்தியா குடியுரிமை பிரதிநிதியும் தேசிய பொருளாதாரத்திற்கு NPIகளின் பங்களிப்புகளை அறியும் பொருட்டு ஐ.நா. கையேட்டை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். தன்னார்வத் துறை நாட்டின் பொருளாதார மற்றும் சமூக மாற்றத்திற்கான முக்கிய பங்கை ஆற்றுகின்றது என்றும்; கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளின் வளர்ச்சியில் என்.பி.ஐ.க்களுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, கருத்துக்களத்தில் இந்தியாவில் இயங்கும் NPIக்களுக்கு ஐ.நா. கையேட்டை அமல்படுத்த வேண்டும்; மற்றும் நாட்டில் செயல்படும் NPI கணக்குகளை தொகுக்க பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

தேசிய ஆலோசனை கவுன்சிலின் மறைமுகமான வழிகாட்டுதலின் கீழ், மே 2007 ல் தன்னார்வத் துறைக்கான தேசிய கொள்கை உருவானது. சுயாதீனமாக இயங்கவும், சொந்தமாக வழிவகுத்து தீர்க்கமாக இயங்கும் தன்னார்வ துறையை ஊக்குவித்தது. மாறுபட்ட இந்திய சமூகத்தைப் போலவே, மாறுபட்ட மனிதர்களை அதிகாரத்திலும், வடிவத்திலும் பதவி செயல்பாடுகளிலும் கொண்டு, அதைச் செய்ய முடியும் என்று நம்பியது. இந்திய மக்களின் சமூக, பண்பாட்டு, பொருளாதார முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் என உறுதி மொழி கோரியது. இது தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சி மற்றும் அடையாளத்திற்கு பங்கம் இல்லாமல், அரசாங்கம் மற்றும் தன்னார்வத் துறைக்கு இடையே ஒரு புதிய உறவு கண்டுபிடிக்க ஒரு செயல்முறை தொடக்கமாக அமைகிறது (GOI / திட்டக்குழு, 2007) . அதன்படி, இதை செயல்படுத்தினால் இலாபம்-சாரா துறையின் செயலில் ஈடுபடும் தன்மையினால், தொண்டுச்சூழல் பரவலாகப் பெருகி, சமூக விவகாரங்கள் மற்றும் மேம்பாட்டு முயற்சிகளில் , இந்திய வளர்ச்சியை ஊக்குவிக்கும் செயல்களை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) ‘ன் இரண்டாவது ஆட்சிக்கால தொடக்கத்தில், தன்னார்வ அல்லது அரசு சாரா நிறுவனங்கள் தன்னிச்சையாக முடிவெடுக்கவும் நிதி நடவடிக்கைகளில் சுதந்திரமாக இயங்கவும் முழுமையான அதிகாரம் இருந்தன என்பதை அறியலாம்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பல சட்டங்களின் கீழ் பதிவு செய்யலாம் அல்லது எந்தவொன்றிலும் பதிவு செய்யாமல் இயங்கலாம் – எதிலும் பதிவு செய்யாமல் இயங்குவதே அதிகமாக காணப்படுகிறது.

இலாப நோக்கற்ற நிறுவனங்களைப் பதிவதற்கு, பல்வேறு வகையான சட்டங்கள் இருக்கின்றன:

சங்கங்கள் பதிவு சட்டம், 1860;
இந்திய அறக்கட்டளைகள் சட்டம், 1882;
பொது அறக்கட்டளை சட்டம், 1950;
இந்திய நிறுவன சட்டம் (பிரிவு 25), 1956

இலாப நோக்கற்ற மத நிறுவனங்கள் கீழ் பதிவு செய்யும்போது:

சமய அறநிலைய சட்டம், 1863;
தொண்டு மற்றும் சமய அறக்கட்டளை சட்டம், 1920;
முஸல்மான் வக்ஃப் சட்டம், 1923;
வக்ஃப் சட்டம், 1954
பொது Wakfs (வரம்பு நீட்டிப்பு) சட்டம், 1959

“சங்கங்களின் சங்கங்கள் பதிவு சட்டம் / மும்பை பொது அறக்கட்டளை சட்டத்தின் கீழ் பதிவு” அடியில் 2009 ஆம் ஆண்டு வரை மட்டும், மொத்தம் 33 லட்சம் சங்கங்கள் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவற்றில் 22.58 லட்சம் சங்கங்களைப் பற்றி பொருளியல் மற்றும் புள்ளியியல் மாநில இயக்கம் [DESs] தகவல் சேகரிக்க முடிந்திருக்கிறது அவற்றுள் 21 லட்சம் சங்கம் தொடர்பான தகவல்களை கணினிமயமாக்க முடிந்திருக்கிறது.

மாநிலங்கள்தோறும் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனங்களைத் தேடி மத்திய புள்ளியியல் அலுவலகம் (சி.எஸ்.ஓ) மக்களை அனுப்பிய போது, அது அவர்களில் இலட்சக்கணக்கானோரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தான் சரிபார்க்க முயன்ற 22 லட்சம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில்,வெறும் 6.95 லட்சம் பேரை மட்டுமே காண முடிந்தது.

இந்த புள்ளிவிவர கணக்குகளில், தொண்டு மற்றும் சமய அறக்கட்டளை சட்டம், 1920ன் கீழ் பதிவு செய்த இலாப நோக்கற்ற நிறுவனங்களை சேர்க்கவேயில்லை. அதையும் கூட்டிக்கொண்டால், இன்னும் சில பல ஆயிரங்களை சேர்க்க வேண்டும். அதன் பின்னர் இந்திய கம்பெனி சட்டம் 1956 இருக்கிறது. அதன் மேல் அறக்கட்டளைகள் அமைக்க உதவும் மற்ற சட்டங்களின் கீழ் இலாபமடையா நிறுவனங்கள் நிறுவப்பட்டு உள்ளன.

மேலும் இந்தத் தொகைகளில் கிராமங்களில் இயங்கும் பல குழுக்கள் மற்றும் சங்கங்களையும், வழக்கமாக குறிப்பிட்ட நோக்கத்திற்காக அல்லது பிரச்சாரங்களுக்கு பெரிய நிறுவனங்களில் ஒரு அங்கமாக அவ்வப்போது தோன்றுவதையும் சேர்க்கவில்லை. இவை அந்தந்த நேரங்களில், தொகுதி மற்றும் கிராம மட்டங்களில் இயக்க, வெகுஜனம் சார்ந்த குழுக்கள் என குறிப்பிடப்படுகிறது. PRIA மற்றும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் செய்த ஆய்வின்படி இந்தியாவின் மொத்த தன்னார்வ நிறுவனங்களில் கிட்டத்தட்ட 50% எந்த சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்படவில்லை.

இந்த பதிவு குழுக்கள் வகைப்படுத்தும் போது பழமையான சங்கங்கள் பதிவு சட்டம் குருடாகிறது. அனைத்துப் பதிவு சமூகங்களையும் ஒரே வழியில் நடத்துகிறது. இந்த அட்டவணையில் அதி இலாபகரமான பள்ளிகளும், கொள்ளையாக சம்பாதிக்கும்கல்லூரிகளும், மிகுகொழிப்பில் இருக்கும் மருத்துவமனைகளும் நாட்டின் விளையாட்டு சங்கங்களும் அடங்கும். இந்திய கிரிக்கெட் (பிசிசிஐ) கட்டுப்பாட்டு வாரியம் தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு அரசு சாரா என்ஜிஓ என்பதை நினைவில் கொள்ளவும். இந்தியத் தொழில் கூட்டமைப்பும் (சிஐஐ) ஒரு அரசு சாரா என்.ஜி.ஓ.

சி.எஸ்.ஓ. சர்வேயில் இருக்கும் முக்கிய கண்டுபிடிப்புகள்

சி.எஸ்.ஓ. கருத்துக்கணிப்பு மூன்றே மூன்று பிரிவை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொண்டன:

ஆய்வு சங்கங்கள் பதிவு சட்டம் 1860
பம்பாய் பொது அறக்கட்டளைகள் சட்டம், 1950
இந்திய நிறுவனங்கள் சட்டம் 1956 – 25 பிரிவு

– இவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே ஆய்வில் இடம்பிடித்தன.

முதல் கட்டத்தில் இருந்து கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் பார்த்தால் 31.7 லட்சம் NPIகள் இந்தியாவில் பதிவாகின. இதில் 58.7% கிராமப்புறங்களில் உள்ளன. பெரும்பாலான NPIகள் சமுதாய, சமூக மற்றும் தனிப்பட்ட சேவைகள், கலாச்சார சேவைகள், கல்வி, சுகாதார சேவைகளில் ஈடுபட்டுள்ளன.

1990 ஆம் ஆண்டுக்கு பிறகு உருவாக்கப்பட்ட NPIகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. பொருளாதார சீர்திருத்தத்திற்கு பிந்தைய காலகட்டமான அந்த நேரத்தில், உலக வல்லரசுகளும் இந்தியாவில் ஆர்வம் காட்டத் தொடங்குகிறன.

1970 ம் ஆண்டு வரை 1.44 லட்சம் சங்கங்கள் மட்டுமே பதிவு செய்திருந்தன.
அதன் பிறகு 1971 ல் இருந்து 1980 வரையான காலத்தில் 1.79 லட்சம் சங்கங்கள் பதிவு செய்துகொண்டன.
1981 இல் இருந்து 1990 வரை காலத்தில் 5.52 லட்சம் பதிவானார்கள்.
1991 இல் இருந்து 2000 வரையிலான காலத்தில் 11.22 லட்சம் பதிவு பெற்றார்கள்.
2000 ஆம் ஆண்டிற்கு பிறகு மட்டும் 11.35 லட்சம் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

செயல்படாத சங்கங்களின் பதிவை ரத்து செய்ய எந்த ஷரத்தும் இல்லை. எனவே முதல் கட்ட கணிப்பில் சங்கங்கள் எண்ணிக்கை மற்றும் பதிவு அதிகாரிகளிடமிருந்து கிடைக்கின்ற பதிவேடுகள் அடிப்படையில் ஆய்வு அமைகிறது.

18 லட்சம் சங்கங்களை இரண்டாம் கட்ட ஆய்வில் விஜயம் செய்தோம். இந்தத் தொகை பதிவு செய்தவர்களில் 57.6% சதவிகித சங்கங்கள் ஆகும். இவற்றில், 4.65 லட்சம் சங்கங்களுக்கு தகவல் கிடைக்கும். அவர்கள் பின்வரும் தலை மூன்று துறைகளில் ஈடுபட்டனர்:

சமூக சேவைகள் (35%)
கல்வி மற்றும் ஆராய்ச்சி (21%)
கலாச்சாரம் & உல்லாசம் (15%).

முதல் மூன்று நடவடிக்கைகளில் மட்டும் 71% பதிவு செய்த சங்கங்கள் பங்களிக்கின்றன.

தரவுகளின் அடிப்படையில் மொத்த ஜனசக்தியில் தொண்டர்களும் இருக்கிறார்கள்; சம்பளத்திற்கு அமர்த்தும் தொழிலாளர்களும் அடங்குவார்கள். மொத்தம் 144 லட்சம் பேர் உழைக்கிறார்கள். இவர்களில் 11 லட்சம் பேருக்கு சன்மானம் வழங்கப்படுகிறது. சி.எஸ்.ஓ. கணக்குப்படி அவர்களின் செயல்பாட்டு செலவுகளுக்காக பயன்படுத்தப்படும் தொகையைக் கொண்டு பொருளாதார உற்பத்தியை மதிப்பிட்டால் ரூ. 41, 292 கோடி அளவிற்கு வரும்!

லாபம் ஈட்டா நிறுவனங்களை இந்திய நிறுவன சட்டம் (பிரிவு 25), 1956 கீழும் பதியலாம். நிறுவன விவகார அமைச்சகத்தினால் பட்டியலிடப்பட்ட 2,595 நிறுவனங்கள் தொடர்பான நிதித் தரவுகள் பெறப்பட்டு, அவையும் பகுப்பாய்வு செய்யப்பட்டன. எனினும், இந்த நிறுவனங்களின் செயல்பாடுகளில் எத்தனை தொழிலாளர் ஈடுபட்டனர் என்ற தகவலையும் அந்த அமைப்புகளின் நோக்கங்களுக்காக எவ்வளவு ஊதியம் கிடைத்தது போன்றவற்றையும் அறிய முடிவதில்லை.

சங்கங்கள் பதிவு சட்டம் 1860 , மும்பை டிரஸ்ட் சட்டம் மற்றும் இந்திய நிறுவனங்கள் சட்டம் (பிரிவு 25), 1956 கீழ் இயங்கும் சங்கங்களை மட்டும் ஆய்வுக்குட்படுத்த சி.எஸ்.ஓ. முடிவு செய்தது. பெரும்பாலான NPIகள் சங்கங்கள் பதிவு சட்டம் 1860ன் கீழ் பதிவு செய்யப்படுவதுதான் இதற்கு காரணம். பல்வேறு மத இலாப நோக்கற்ற நிறுவனங்கள் என்னும் குடையின் அடியில் இருக்கும் என்.ஜீ.ஓ.க்களை இந்த ஆய்வில் சேர்க்கவில்லை. அவர்கள் தொகை பூதாகரமானது.

நிதி அறிக்கைகளை சமர்ப்பிக்கும் ஏற்பாட்டை பெரும்பாலான மாநிலங்கள், ஒழுங்காக அமலாக்குவதில்லை என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. சங்கங்களே பதிவாளர் அலுவலகத்தில் நிதி அறிக்கைகளை சமர்ப்பித்தாலும் கூட, அந்த தகவல்களை பராமரிக்க எந்த நடைமுறையும் கிடையாது.
அரசு சாரா அமைப்புகளின் மஹாராஜாக்கள்

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் ஒரு வகையினர் உள்துறை அமைச்சகத்துடன் பதிவு செய்து கொள்ள வேண்டும். அயல்நாட்டு பங்களிப்பு விதிமுறைகள் விவகார சட்டம் [FCRA] கீழ் இந்த தனியார் அறக்கட்டளைகள் வரும். அதே போல் வெளிநாட்டு அரசு நிறுவனங்களின் நிதி கிடைக்கும் என்.ஜி.ஓ.க்களை யூரோ அல்லது டாலர் தொண்டு நிறுவனங்கள் என அழைக்கிறார்கள்.

2011-2012 ஆம் சிறப்பம்சங்கள்

1. FCRAவின் கீழ் 31 மார்ச் 2012 வரை மொத்தம் 43,527 சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2011-12 ம் நிதியாண்டில், இரண்டாயிரத்திற்கும் மேலான கூட்டமைப்புகள் பதிவு பெற்றன. 304 நிறுவனங்களுக்கு வெளிநாட்டு பங்களிப்புகளை பெற முன் அனுமதி வழங்கப்பட்டது.

2. 22,702 அமைப்புகளில் இருந்து ரூ. 11,546.29 கோடிகளுக்கு வெளிநாட்டு பங்களிப்பு என மொத்தம் ரசீது பதிவாயின. [இவற்றில் கணக்கில் வராமலும் குறைவாகக் கணக்கு காட்டும் நோக்கும் பொதுவானது]

கடந்த பத்தாண்டு போக்கு:
வருடம் பதிவு செய்த அமைப்புகள்

அறிவிக்கும் அமைப்புகள்


வெளிநாட்டு வருமானம்
[ரூ. ₹ கோடிகளில்]
2002-2003 26404 16590 5,046.51
2003-2004 28351 17145 5,105.46
2004-2005 30321 18540 6,256.68
2005-2006 32144 18,570 7,877.57
2006-2007 33937 18,996 11,007.43
2007-2008 34803 18796 9,663.46
2008-2009 36414 20088 10,802.67
2009-2010 38,436 21,508 10,337.59
2010-2011 40,575 22,735 10,334.12
2011-2012 43,527 22,702 11,546.29

மொத்தமாக 2002 -2012 97,383.53

ஆதாரம்: உள்துறை அமைச்சகம் –வெளிநாட்டினர் துறை, FCRA பிரிவு

3. அயல்நாட்டு நிதியில் மிக அதிகமான நன்கொடைகள்

தில்லி – ரூ. 2,285.75 கோடி
தமிழ்நாடு (ரூ. 1, 704,76 கோடி)
ஆந்திர பிரதேசம் (ரூ. 1, 258,52 கோடி)

4. மாவட்டங்களிடையே மிக அதிகமான நன்கொடைகள்

சென்னை – ரூ. 889.99 கோடி
மும்பை (ரூ. 825.40 கோடி)
பெங்களூர் (ரூ. 812.48 கோடி)

5. கொடை நாடுகளின் பட்டியலில்

அமெரிக்கா (ரூ. 3, 838.23 கோடி)
இங்கிலாந்து (ரூ. 1, 219,02 கோடி)
ஜெர்மனி (ரூ. 1, 096,01 கோடி).

6. வெளிநாட்டு நன்கொடையாளர்கள் பட்டியலில்

Compassion International, அமெரிக்கா (ரூ. 183.83 கோடி),
Church of Jesus Christ of Latter day Saints, பிந்தைய நாள் புனிதர்களின் இயேசு கிறிஸ்துவின் திருச்சபை (எல்.டி. சர்ச்), அமெரிக்கா (ரூ. 130.77 கோடி)
Kinder Not Hilfe (KNH), ஜெர்மனி (ரூ. 51.76 கோடி).

7. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் (என்.ஜீ.ஓ.) மத்தியில் அதிக அளவு வெளிநாட்டு நன்கொடைகளைப் பெற்றவர்கள்

இந்திய உலக பார்வை, சென்னை, தமிழ்நாடு, (ரூ. 233.38 கோடி)
நம்பிக்கை சர்ச் இந்தியா பத்தனம்திட்டா, கேரளா (ரூ. 190.05 கோடி)
கிராமப்புற மேம்பாட்டு அறக்கட்டளை, அனந்தப்பூர், ஆந்திரா (ரூ. 144.39 கோடி)

8. வெளிநாட்டு பங்களிப்பு பெற்ற துறைகளில்

ஊரக வளர்ச்சி (ரூ. 945.77 கோடி)
குழந்தைகள் நலன் (ரூ. 929.22 கோடி)
கட்டுமானம் மற்றும் பள்ளி / கல்லூரிகளில் பராமரிப்பு (ரூ. 824.11 கோடி)
ஆராய்ச்சி (ரூ. 539.14 கோடி)
மேலே குறிப்பிட்டுள்ளதைத் தவிர மற்ற செயல்பாடுகள் – ரூ. 2, 253,61 கோடி

நடைமுறை செலவுகளுக்குத்தான் [கட்டிடம் / கார்கள் / ஜீப்புகள் / கணினி / கேமராக்கள் முதலியன] தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மிகவும் செலவு செய்கின்றன என்பது இதில் கவனிக்க வேண்டிய தகவல்.
காலத்தின் தேவை:

வெளிநாட்டு நிதி பெறும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக புலனாய்வு பணியகம் (IB) அறிக்கை தெரிவிக்கிறது. இதன் பின்னணியில், இந்தத் துறையை முழுமையான அலசலுக்குள்ளாக்க அறிஞர் சபை தேவை. இந்த நிபுணர்கள் குழுவில் IBயைச் சேர்ந்தவர்களும் இருக்கலாம். மேலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை கையாள்வதில் அனுபவம் வாய்ந்த ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்க போன்ற பிற நாடுகளின் அனுபவங்களை பயன்படுத்தலாம். என்.ஜி.ஓ.க்களுக்கான ஆட்சி கட்டுப்பாடுகளை உருவாக்கலாம். இந்திய நிறுவனங்களுக்காக 2013-ல் அறிமுகப்படுத்தப்பட்ட கட்டாய சமூக பொறுப்புணர்வு பங்களிப்புகளின் பின்னணியில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை மீள்பார்வைக்குட்படுத்தலாம். வெள்ளையனின் சுமையாக இல்லாமல் இருப்போம்!

நன்றி: சொல்வனம்: படைப்பு: ஆசிரியர் ஐஐஎம் பி நிதித்துறை பேராசிரியர்

(ஆர் வைத்தியநாதன், நிதி மற்றும் ஆளுகை பேராசிரியர், மூன்று தசாப்தங்களாக ஐ.ஐ. எம் பெங்களூர் பல்கலையில் கற்றுத்தருகிறார். தொடர்ச்சியாக மிகவும் பிரபலமான ஆசிரியர்களுள் ஒன்றாக மதிப்பிடப்படுகிறார். இந்திய பொருளாதாரத்தின் மிகப் பெரிய அங்கமாக சிறிய தொழில் முனைவோர்களும் குடும்பங்களும் அடங்கியிருப்பதைக் கொண்டு, பேராசிரியர் வைத்தியநாதன் இந்தியா Uninc என்னும் கூற்றை உருவாக்கினார். பேராசிரியர் வைத்தியநாதன் செபி மற்றும் ரிசர்வ் வங்கி ஆலோசனைப் பலகைகளில் அமர்ந்திருக்கிறார்.)

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (29-Sep-16, 10:26 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 130

சிறந்த கட்டுரைகள்

மேலே