பணமதிப்பு நீக்கம் மோடியின் நாடகமா அல்லது பயனுள்ள நடவடிக்கையா- மாறுபடும் அமெரிக்க நிபுணர்கள் கருத்து

ஹார்வர்ட் பல்கலைக் கழக பொருளாதார நிபுணர் கென்னத் ரோகாஃப்:

பழைய நோட்டுகளை புழக்கத்திலிருந்து விடுவித்து புதிய நோட்டுகளை அறிமுகம் செய்வதென்பது முற்றிலும் இயல்பானதொரு நடவடிக்கையே. ஆனால் இவை பொதுவாக படிப்படியாகவே அமல்படுத்தப்படும். மெதுவாக அமல்படுத்தும் இந்த திட்டம் பற்றி நான் எனது கர்ஸ் ஆஃப் கேஷ் (“Curse of Cash") நூலில் தெரிவித்துள்ளேன், ஆனால் இந்தத் திட்டங்கள் முன்னேறிய பொருளாதார நாடுகளுக்கே.

இந்தியாவின் இந்த அவசர நடவடிக்கை ஊழல் அரசியல்வாதிகளுக்கு தக்க தண்டனை அளிக்கவும், குற்றவாளிகள் மற்றும் வரி ஏய்ப்போருக்கான சரியான அதிரடி நடவடிக்கையாகும், இதனை நான் கூறும் படிப்படியாக அறிமுகம் செய்யும் திட்டம் மூலம் செய்ய முடியாது.

இந்தத் திட்டம் நல்ல முன் தயாரிப்புடன் செய்திருக்க வேண்டும் என்றாலும் அப்படிச் செய்தாலும் சாமானிய மக்களுக்கு ஏற்படும் கடினப்பாடுகளை தவிர்த்திருக்க முடியாது. நீண்ட கால அடிப்படையில் ஊழல், குற்றம், வரி ஏய்ப்பு விவகாரம் இந்த நடவடிக்கையினால் சீரடையும். ஆனாலும் இது எப்படி நடைமுறையில் அமல்படுத்தப்ப்டுகிறது என்பதைப் பொறுத்தே தீர்மானமாகும், என்றார்.

இவர் தனது ’கர்ஸ் ஆஃப் கேஷ்’ என்ற நூல் பற்றி தனது வலைப்பதிவில் சமீபமாக தெரிவிக்கும் போது, பெரிய மதிப்பு நோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை வளரும் நாடுகளை நோக்கி எழுதப்பட்டதல்ல. காரணம் இந்நாடுகளில் மக்கள் தொகையில் வங்கிக் கணக்கு இல்லாதோர் எண்ணிக்கை மேலதிகமாக உள்ளது. ஆனாலும் வளரும் நாடுகளும் வளர்ந்த நாடுகளும் எதிர்கொள்ளும் சில பிரச்சினைகளை எதிர்கொள்ளத்தான் செய்கின்றன. ஊழல் மற்றும் கள்ள நோட்டு விவகாரம் இருதரப்பினரையும் பாதிக்கும் விவகாரமே.

பழைய நோட்டுகளுக்குப் பதிலாக புதிய நோட்டுகளினால் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடாது, பெரிய மதிப்பு நோட்டுகளை முற்றிலும் செல்லாததாக்கி விட வேண்டும். மோடியின் யோசனை என்னவாக இருக்குமெனில், குற்றவாளிகள் நிச்சயம் அச்சப்படுவர், அதாவது ஒருமுறை இதனைச் செய்தவர் மீண்டும் செய்யமாட்டார் என்று கூறுவதற்கில்லை என்ற அச்சம் இருக்கும்.

கலிஃபோர்னியா பல்கலைக் கழக பொருளாதார பேராசிரியர் பிரணாப் பர்தன்:

பெரும்பாலான வர்த்தகர்கள் தங்கள் கறுப்புப் பணத்தை பணமாக வைத்திருப்பதில்லை. தங்கம், ரியல் எஸ்டேட் சொத்து, சரக்கு, வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் என்றே வைத்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட தொகையை அன்றாட செலவுகளுக்காக அவர்கள் ரொக்கமாக வைத்திருக்கலாம் ஆனால் இது ஒரு சிறிய சதவீதமாகவே இருக்கும்.

இந்த நடவடிக்கையினால் சாதாரண மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளதோடு, இந்த அடியினால் முறைசாரா அல்லது வெகுஜன பொருளாதாரம் மீண்டு எழ கால அவகாசம் பெரிய அளவில் எடுக்கும். இப்படிப்பட்ட முறைசாரா, வெகுஜன பொருளாதாரம் வீழ்ச்சியடைவது நல்லதென் நினைப்பவர்கள், இவர்கள் உடனே கடன் அட்டைகள், பற்று அட்டைகளை பயன்படுத்த தொடங்கிவிடுவார்கள் என்று நினைக்கிறார்கள், இது அவ்வளவு எளிதில் நடக்காது. மேலும் வெகுஜனப் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்வதன் மூலம் வேலையிழப்பவர்களுக்கு முறை சார்ந்த பொருளாதாரத் துறையில் உடனடியாக வேலை கிடைக்குமா?

இந்த நடவடிக்கையை அமல்படுத்துவதில் ஏற்பட்டுள்ள நிர்வாகச் சீர்கேடுகள் ‘அதிகபட்ச அரசு தலையீடு, குறைந்த நிர்வாகம்’ என்ற கொள்கையைப் போன்று தெரிகிறது. .இது 2014-ல் பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிக்கு நேர் எதிரானது. மக்கள் வர்க்கி சாப்பிட டிஜிட்டல் மயமாக வேண்டும் என்று பிரதமரும் அவரது நிதியமைச்சர் சகாவும் தொடர்ந்து ஏழை மக்களை வலியுறுத்தி வருகின்றனர்.

கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்கு இது முறையான நடவடிக்கை அல்ல. அமெரிக்காதான் அதிகபட்ச கள்ள டாலர்கள் புழங்கும் பொருளாதாரமாகும். ஆனால் இதனை ஒழிக்க அமெரிக்கா படிப்படியாகவும் அமைதியாகவும் செயல்படுகிறது. திரும்ப வராத பணம் மூலம் அரசுக்கு வருவாய் பெருகும் என்று சிலர் கூறலாம் ஆனால் மெதுவே வளர்ச்சியடையும் பொருளாதார நாடான இந்தியாவில் வருவாயில் ஏற்படும் இழப்பு அதிகம் என்றே கருத இடமுள்ளது.

பிரதமராக வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனதை மக்கள் மனதிலிருந்து திசைத் திருப்ப மோடியின் நாடகமே இந்த நோட்டு நடவடிக்கையாகத் தெரிகிறது.

எழுதியவர் : (3-Dec-16, 2:51 am)
பார்வை : 48

மேலே