மனசு பேசுகிறது வாழ்க்கைத் துணை

வாழ்க்கை....
பள்ளிக் காலத்தில் மனசுக்குள் சந்தோஷம் மட்டுமே குடி கொண்டிருக்க ஏதுமறியா வண்ணத்துப் பூச்சியாய் வாழ்க்கை பயணப்பட்டது. பெரிய ஊதாப் பை, அது நிறைய புத்தகம் அதோடு மதிய சாப்பாட்டுக்கான தட்டு... இப்ப பசங்க டிபன் பாக்ஸ் எடுத்துப் போகவே சங்கட்டப்படுறாங்க... அன்னைக்கு தட்டுத் தூக்க வருத்தப்பட்டதில்லை... அதுவும் மதியத்துக்கு மேல் மழை வரும் என்றால் கிராமத்துப் பிள்ளைங்களுக்கு விடுமுறை, அப்போது ரமணனும் இல்லை தூர்தர்சன் தவிர மற்ற தொலைக்காட்சிகளும் கிராமங்களுக்குள் எட்டிப் பார்க்கவும் இல்லை... அதனால் லேசான மழை காற்று அடித்தாலே சனி மூலையில இருண்டுக்கிட்டு வருது கிராமத்துப் பிள்ளைங்க போகலாம் என்ற எங்க தலைமை ஆசிரியரின் ஒலை வகுப்பறைக்கு வர, காத்திருந்தவர்கள் கணப் பொழுதில் மழை வந்தால் புத்தகம் நனையும் என்பதால் பள்ளியில் வைத்து விட்டு தட்டை மட்டும் தலையில் கவிழ்த்துக் கொண்டு ரெண்டு கிலோ மீட்டருக்கு ஆனந்த நடை... மறுநாள் தட்டோடு பள்ளிக்குப் பயணம்... அதுவும் மழை இல்லை என்றால்தான்... லேசான மழை என்றாலும் அன்றும் விடுமுறைதான். இப்ப யாராச்சும் போவாங்க... ஏன் நானே தட்டைத் தூக்கிட்டுப் போவேனா தெரியலை... நமக்கு வெட்கமெல்லாம் இல்லைங்கிறது வேற விஷயம். என்ன இருந்தாலும் அது சந்தோஷத்தைச் சுமந்த சுகமான வயசு... அதுவும் ஒன்பதாம் வகுப்புக்கு தே பிரித்தோ போகும் வரைதான்... அங்கும் ஜாலியான வாழ்க்கைப் பயணம்தான்... என்ன சாப்பாடு டிபன் பாக்சில் கொண்டு போனேன் அவ்வளவே...
இப்ப எதுக்கு தம்பி இதெல்லாம்ன்னு யோசிக்கிறீங்களா... இருங்க சொல்றேன்... எதுக்குமே படிப்படியா ஏறித்தான் போகணும்..
கல்லூரிக் காலம் அது கனவுகளைச் சுமந்த பருவம்.. நல்ல நட்புக்கள், அருமையான வழிகாட்டி என எனக்கு சற்றல்ல நிறைய மாற்றத்தையும் வாழ்வின் பக்கங்களை எப்படி அணுக வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுத்தது. இதைப் பற்றி நிறைய பதிவுகளில் நிறைவாய் பேசிட்டேன்.. நட்புக்களுடன் இணைந்து 'மனசு' கையெழுத்துப் பிரதி, அதற்கான உழைப்பு... மாலை நேரங்களின் ஐயா வீட்டில் எங்களின் அரட்டை... மூன்றாண்டுகள் எங்கள் வீட்டில் இருந்ததை விட, சாப்பிட்டதை விட ஐயா வீட்டில்தான் அதிகம்... ஞாயிற்றுக் கிழமை கூட அங்குதான்... மதியம் பத்துப் பதினைந்து பேருக்கு சாப்பாடு... ஐயாவும் அம்மாவும் சைவம்... நாங்க அசைவம்... எங்களுக்காக கறி வாங்கி வந்து சமைப்பார்கள்... இப்படி ஒரு வாழ்க்கை யாருக்கு அமையும் சொல்லுங்க... சந்தோஷமாகச் சொல்வேன் எனக்கு ஐயாவும் அம்மாவும் இன்னொரு பெற்றோர்... இவர்கள் மட்டுமல்ல இன்னும் சில அம்மாக்களுக்கும் மகனாய் இந்த நாட்களில் இருந்து இன்று வரை...என் வாழ்க்கை மிகுந்த அன்பின் பிடிக்குள் ரசனையாய் நகர்கிறது.
சரி... கல்லூரிக்கு பொயிட்டே... காதல் கீதல்ன்னு போயிடாதே... சொல்ல வந்ததைச் சொல்லு அப்படின்னுதானே 'மனசு'க்குள்ள நினைக்கிறீங்க... இருங்க சொல்றேன்...
அப்புறம் அமைந்த வாழ்க்கை... ரொம்பப் பெரிதாய் எதையும் சாதித்து விடவில்லை... கணிப்பொறி ஆசிரியனாய் ஆரம்பித்து அங்கும் இங்கும் ஓடி.. இதில் என்ன விசேசம் என்றால் இனி கம்ப்யூட்டர் பக்கமே போகக் கூடாது வேற எதாவது ஒரு வேலைக்குப் போயிடணும்ன்னு முயன்றால் மீண்டும் கணிப்பொறியோடுதான் குப்பை கொட்டுவேன்... அங்கங்கு சுற்றி, முருகனுடன் கணிப்பொறி மையம் ஆரம்பித்து கல்லூரியிலும் சொற்ப சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்த நேரத்தில் வீட்டில் திருமணத்துக்கான பேச்சு எழுந்தது. உருப்படியா ஒரு வேலை இல்லை கல்யாணமா என்ற கேள்விகள் வீட்டில் எழுந்தன... இருப்பினும் வாழ்க்கை திருமணம் என்ற பக்கத்துக்குள் எப்படியோ அடி எடுத்து வைத்துவிட்டது. தனி ஒருவனாய் இருந்தவனை நம்பி ஒரு உயிர், அதுவும் சில நாளிலேயே நீ நள்ளிரவுல கூட வருவே... தேவகோட்டை பக்கமே வீடு புடிச்சி இருந்திரு என்று வீட்டில் சொல்ல, ஒரு சிறிய செட்டிய வீட்டில் செட்டில் ஆனோம்.
பள்ளிக் கூடத்தில் ஆரம்பித்து நிச்சயித்த திருமணம் வரைக்கும் வந்துட்டே... இனி குழந்தை குட்டியின்னு ஆரம்பிச்சி எங்கப்பா போயி முடிக்கப் போறேன்னு தோணியிருக்குமே.... இருங்க சொல்றேன்...
என்னோட வாழ்க்கையில் இணைந்து தட்டுத் தடுமாறி வாழ்க்கை வண்டி ஒட்டிய ஆரம்ப நாட்களில் எல்லாவற்றிலும் எனக்கு உறுதுணையாய் இருந்து என்னை உயிர்ப்பித்தவர் அவர்தான்... சோதனைகளின் சோர்வில் துவழும் பொதெல்லாம் எல்லாம் சரியாகும் விடுங்க என்ற நம்பிக்கை விதை விதைத்தவர் அவர்தான்... நான் இங்கு வந்த பின்னர் வீடு கட்டும் பணியை தேவகோட்டையில் ஆரம்பித்த போது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு காரைக்குடியில் இருந்து தேவகோட்டைக்கு ஸ்கூட்டியில் தினம் தினம் சென்று வீட்டு வேலையை பார்த்து வந்தவர் அவர்தான். எங்க ஊரில் திருவிழாவுக்கு முன்னர் சின்னதாக ஒரு வீடு கட்ட வேண்டிய சூழல் வந்த போது தானே பொருட்கள் வாங்கிக் கொடுத்து இரவு பகல் பாராமல் தேவகோட்டைக்கும் எங்க ஊருக்குமா அலைந்து திரிந்து எங்களுக்கான வீட்டை பார்த்துப் பார்த்துச் செதுக்கியவர் அவர்தான்... என் வாழ்வில் இணைந்து பெரிதாக எதையும் அனுபவிக்காமல் தான் கொண்டு வந்த நகைகளை எல்லாம் வீட்டுப் பணிகளுக்காக வங்கியில் வைத்து விட்டு புன்னகையோடு வாழ்பவர் அவர்... எல்லாருக்கும் ஓடி ஓடி உதவி செய்வதால் என்னைப் போல் (நான் அந்தளவுக்கு உதவி செய்வதில்லைதான் இருப்பினும் எனக்கு நட்பு வட்டம்தான் அதிகம்) அவருக்கும் உறவுகள் அதிகம்... என்ன கஷ்டம் இருந்தாலும் வெளியில் காட்டாமல் சிரிப்பால் எல்லோரையும் கவர்ந்து விடுவதில் அவருக்கு நிகர் அவர்தான்.
நட்புக்கள் எல்லாம் ஒட்டி நிற்க, எங்க ரத்த உறவுகள் எட்டியே நிற்கிறார்கள்... எல்லாருக்கும் நல்லதுதான் செய்யுறோம்... யாரையும் நான் பிரிச்சிப் பார்ப்பதில்லை... அது என்னவோ நமக்கிட்ட விலகியே இருங்காங்களே ஏன் என்று அவர் கேட்கும் போது அவர்களுக்கு புரியும் போது வருவார்கள் விட்டுத் தள்ளு என்று சொல்லி நகர்ந்தாலும்... ஏன் அவர்கள் இப்படியிருக்கிறார்கள் என்ற எண்ணம் எனக்குள்ளும் இருக்கத்தான் செய்கிறது.. சரி விடுங்க... எங்கெங்கோ பயணித்த என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாய் ஆக்கி, என்னை ஆட்கொண்டவரைப் பற்றி பேசும் போது இதெல்லாம் எதற்கு...
என்னது... என்ன சொல்ல வந்தேன்னு புரிஞ்சிக்கிட்டீங்களா..? ம்... ஆமாங்க அதுதான்...
நாங்க ஆதர்ஷ தம்பதிகள்ன்னு சொல்லமாட்டேன்... சின்னச் சின்ன சண்டைகள் இல்லாத வாழ்க்கை சலிப்பாயிரும் இல்லையா... அப்படி சின்னச் சின்ன சண்டைகள் வந்து மறைந்தாலும் இருவருக்குமான நேச முடிச்சி ரொம்பப் பலமானது என்பதால் ஆத்மார்த்த தம்பதிகல் நாங்கள் என்பேன்.
என்னில் பாதி... என் வாழ்க்கைத் துணை மட்டுமல்ல... வாழ்வின் வழித்துணை... என் அன்பு மனைவிக்கு இன்று பிறந்தநாள்.... உங்களோட வாழ்த்துக்களும் ஆசிகளும் அவருக்கு கிடைக்கட்டும்...
இந்த நாளில் இறைவனிடம் நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்... என்னை வழி நடத்த அவருக்கு நோய் நொடியற்ற நீண்ட ஆயுளைக் கொடு... எட்டாண்டுகளாக பிரித்து வைத்து வேடிக்கை பார்ப்பதை விடுத்து நாங்க நாலு பேரும் ஒரு கூட்டுக்குள் வாழும் வழி செய் என்பதே... நடக்கும் என்ற நம்பிக்கையுடன்..

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்ம்மா...









-'பரிவை' சே.குமார்

எழுதியவர் : சே.குமார் (6-Jan-17, 12:01 pm)
பார்வை : 322

சிறந்த கட்டுரைகள்

மேலே