எப்ப வருவீங்க

"சீக்கிரம் கிளம்புங்க.டைம் ஆகறது உங்க கண்ணுக்கு தெரியலையா? "

"சரி,சரி கத்தாதே.நீ எல்லாத்தையும் எடுத்து வச்சிட்டியா?"

"அதெல்லாம் எப்பவோ ரெடி பண்ணிட்டேன்.இங்க பாருங்க.பிரஷ்,பேஸ்ட் வச்சிருக்கேன்.யூஸ் பண்ணிக்குங்க"

"சரி"

"தலைவலி மாத்திரை எடுத்து வச்சிருக்கேன்.போட்டுக்கங்க"

"சரி"

"மத்தியானத்துக்கு தயிர் சாதம்,ஊறுகாய் வச்சிருக்கேன். சாப்பிடுங்க."

"சரி"

"பிபி,சுகர் மாத்திரை வச்சிருக்கேன். கரெக்ட் டைமுக்கு போட்டுக்குங்க"

"சரி"

"தண்ணீர் பாட்டில்,பெட் ஷீட் எடுத்து வச்சிருக்கேன். தூக்கம் வந்தா பின்னாடி நிக்கறவர் கிட்ட சொல்லிட்டுப் போய் கொஞ்ச நேரம் தூங்குங்க."

"சரி"

"சீக்கிரம் கிளம்புங்க.எதிர் வீட்டுக்காரர் விடியற்காலை 5 மணிக்கே போயிட்டாரு தெரியுமா?"

"அடப்பாவி.என்கிட்ட 8 மணிக்கு போறதா தானே சொன்னான்."

"ம்க்கும்.அவர் பொழைக்கத் தெரிஞ்சவர்.உங்களை மாதிரியா"

" சரி.சரி.அலுத்துக்காதே."

"இங்க பாருங்க.ஒரு எடத்துல இல்லைன்னா வேற எங்க இருக்கும்னு விசாரிச்சுப் பாருங்க.யாராவது அரசியல் பேசினா அவங்க வாயைப் பார்த்துக்கிட்டே நிக்காதீங்க.புரியுதா."

"சரி"

"சரி.எப்ப வருவீங்க?"

"ஏண்டி, நான் என்ன ஏற்காடு டூரா போறேன்? இத்தனாந்தேதி திரும்ப வருவேன்னு சொல்ல? ஏடிஎம்ல பணம் எடுக்கப் போறேன்டி.திரும்ப எப்ப வருவேன்னு கடவுளுக்குத் தாண்டி வெளிச்சம்"
....கிளம்பினார் அந்த அப்பாவி !!!!

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (7-Jan-17, 11:45 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 590

மேலே