பெண் மகவு
என் நெஞ்சில் தவழ்ந்தாடும். . .
பாவையொருவள்கை பிடித்தேனானதடி பல்லாண்டு
பலஆண்டாய்ப் பிள்ளை யிலையெனும் கவலையிலே
ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டாகப்
பத்தாண்டுகடந்ததடி, பலனொன்றுமில்லையடி!
ஒருவருக்குத்துணை யொருவர் மட்டும்தானா?..
ஏனிந்தக்கொடுமையடா? யெனும்குறையை இறைவன்கேட்பானா!
குழந்தைவேண்டி கும்பிடாத கடவுளில்லை
குழவியொன்றுபிறக்க ஜாதகத்தில் வழியுமில்லை.
அரசமரத்தையொரு ஆயிரமுறை சுத்திவாரு மென்றானொருவன்
ஆடும்தொட்டிலதில் கட்டென்றான் அயலாரொருவன்
மருத்துவரைப் பாரென புத்திசொன்னானொருவன்,
சோதனைக்குழாய் சோதனைக்கு தீர்வாகுமென்றானொருவன்
ஆளுகொரு வழிசொல்லஅத் துணைவழிகேட்டு
அலையாய் அலைந்தேன் அனுதினமும் திரிந்தேன்..
நன்றியுள்ள நாயும், அழுக்கைக்களைந்துண்ணும்
பன்றியையும். . .பரிவோடு பார்க்கும்போதெல்லாம். . .
வாயில்லா ஜீவனுக்கே வாரிவழங்கும் எம்பெருமான்
வாய்விட்டு அலரினாலும் குழவிவரம் கொடுப்பானில்லை!
நாம்கொண்டவிரதமும், நாம்பெற்றஞனமும் எப்பொதும்
நல்வழிக்கே என்பார்கள் பெரியோர்கள்!
வேண்டுவோருக்கு வேண்டுவன பலகொடுக்கும் பரமன்..
எனக்குமொன்று கொடுத்தான் வேண்டுமதைத் தவறாமல்!
நல்லதொரு நன்னாளில் எனக்கொரு மகள் பிறந்தா ளவளெனைத்
தேன்தமிழில் கவிபாடும் திறன்கொடுத்தாள்!
இறைவனிட மிரைந்துயான்பெற்ற இளயநிலாச்சிரிப்பதனில்
இவ்வியதார்த்த வாழ்வனைத்தும் மகிழ்ச்சி பொங்குதடி!
வரம்பெற்று வாராதுபோல்வந்த வளருமென் இளமதிக்கு
சிரி(ஶ்ரீ)மதி எனப்பெயரிட்டு சீராட்டி வளர்த்தேனே.
புண்ணியம்பல செய்தேனுனை ஈன்றெடுக்க
புதுப்பிறவி எடுத்தாலும் நீயே எனக்கு மகளாவாய்
சூரியனைப் போன்றயுன்முகம் பார்ப்பின்
தாமரை போன்றுஎன்முகம் விரிந்துமலரும்
பட்டாம்பூச்சியின் இறக்கைபோன்ற மென்மையுன் விரல்களின்
பட்டுப்போன்ற ஸ்பரிசத்தால், உடல்ரத்தம் உறையுதடி
கனிந்த உன்முகம் காணுகையில், கவலையெல்லாம்
காற்றடித்த மேகம்போல் கரையுதடி
இருகையால் தூக்கியுனை உச்சி மோர்ந்தால்
இருதயமும் மூச்சுமொருநொடி பூரிப்பால்நிக்குதடி
என்னிதயம் துடிக்க அடைப்பிதழேதும் தேவையில்லை
உன்னிமைத்துடிப்பில் என்னிதயம் சீராக இயங்குமன்றோ.
உன்மழலைப் பார்வையொன்றே போதும்
என்நாவி சைக்கும் பலபாக்கள் நொடிப்பொழுதில்
என் நெஞ்சில்தவழ்தாடு முனைப்பார்க்கும் போதெல்லாம்
"என்நெஞ்சில்பள்ளிகொண்டவன்" பாடல் பலமாகக்கேட்குதப்பா!
மறுபதிவு:: பரிசு பெறாவிடினும் பாராட்டுப்பெற்று வந்தது மின் இதழொன்றில்
அன்புடன்
பெருவை பார்த்தசாரதி