புதிய வடிவம்

தீயிடல் இல்லை
கல்லெறிதல் இல்லை
ஆனாலும்
அரசுகள் அசைகின்றன

அடிதடி இல்லை
ஆபாச வசவுகள் இல்லை
எனினும்
காளைகளின் பேரிறைச்சல்
கடல் தாண்டியும் கேட்கிறது

தலைவர்கள் எவருமில்லை
ஆனாலும்
தலைவர்களாகவே
எல்லோரும் தெரிகிறார்கள்

ஊழல்வாதிகளும்
ஊடக நரிகளும்
கபட வேஷதாரிகளும்
கரையேற்றப்படுகிறார்கள்
ஆனாலும்
பகலிலும் இரவிலும்
இவர்கள் மீதுதான்
வெளிச்சம் பாய்ந்து கொண்டே இருக்கிறது

மகாத்மாவின் அறப்போராட்டம்
மெரினா மண்வெளியில்
புதுவடிவம் பெறுகிறது

இவர்களது கோரிக்கை மீது
இருவேறு கருத்து இருக்கக்கூடும்
ஆனாலும்
இவர்களது போராட்ட வடிவத்தை
எவராலும் புறந்தள்ள முடியாது

உரிமைக்கானக் குரலை
ஒலிப்பது எவ்வாறென்று
அரிச்சுவடியை ஆத்திச் சூடியாய்
அடுத்தத் தலைமுறைக்குத் தந்திருக்கிறார்கள்

இனிவரும் போராட்டங்கள் எல்லாம்
இவர்கள் போட்ட
இராஜப் பாதையிலேயே
எவருக்கும் இடையூரின்றிப்
பயணிக்க வேண்டும்
இல்லையெனில்
இந்திய அரசியல்வாதிகளே
ஈ எறும்பும் உங்களை மதிக்காது

கற்று கொடுப்பது எங்கள் இனம்
எங்களுக்கு கற்று கொடுக்க நினைப்பது
அறிவீனம் என்பதை
மெரினா மணல் துகள்கள்
எதிரியாய் வரும் எவருக்கும்
இனி உரக்க சொல்லும்

வாடி வாசல் வழியாகப்
புதிய வரலாற்றைப்
படைத்திருக்கிறார்கள்
எங்கள் இளம் காளைகள்!

எழுதியவர் : கொ வை அரங்கநாதன் (22-Jan-17, 11:25 pm)
Tanglish : puthiya vadivam
பார்வை : 306

மேலே