நினைவின் மயக்க நிலை
நினைவின் மயக்க நிலை...
*********************************
இந்த அறையில்
வார்த்தைகள்
நெருப்பைச் சாப்பிடுகின்றன.
தாளில் கட்டப்பட்டிருக்கும்
அந்த அறை,
காட்டில் உள்ளது.
காட்டின் விளிம்பில்
சாலை தொடங்குகிறதென
வேறு எந்த அர்த்தமும்
இதற்கு இல்லை...
பறவையை மட்டும் விட்டு
தாளைக்கிழிக்கிறது குழந்தை.
அருகிலிருந்தவர்
குழந்தைக்கு அடிக்கிறார்
பறவையைக் கிழிக்கவில்லை
என்பதனால் அது,
என பரவுகிறது கதை.
இந்தக் கதையை
அந்த அறையில்
இருவர் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
அந்த வார்த்தைகள்
அங்கெரியும் மெழுகுவர்த்தியின்
நெருப்பை சாப்பிடுகின்றன.
திடீரென, நினைவிலிருந்த
ஒருவர் வெளியே வந்து
நெருப்பை அணைத்துவிட்டு
திரும்பிச் செல்கிறார்.