நீலக்குருதி

மண்ணில் முளைத்து மறைந்திருக்கும் கொடுமைகள்
கண்களின் திரையினில் காட்சிகளாய்ப் பதிந்து
எண்ணங்களின் கொதிப்பில் எரிமலைகள் வெடித்து
உண்மைக்கு உயிரூற்றி உலகிற்கு வெளிச்சந்தரும்......


கொள்ளை அடித்து குவிந்திடும் செல்வத்தில்
வெள்ளைப் புறாக்கள் வீதியில் ஊர்வலம்
கள்வடியும் பூவிலும் காமந்தேடும் வண்டுகளை
முள்ளில் வழிந்து முகத்திரைக் கிழித்திடும்......


மேதினியில் பிறந்து மேன்மையாய் வளர்ந்தாலும்
சாதியில் பலியாக்கி சமத்துவ காதலரையும்
ஓதிடும் வேதத்தில் ஒதுக்கிடும் உயிர்களை
நீதியின் கூண்டிற்குள் நிறுத்திட விரைந்திடும்......



தேகத்தின் விரலில் தூரிகை அமர்ந்திட
மேகத்தின் நீலத்தை மையாய் ஊற்றியிங்கு
காகிதங்களின் களத்தினில் கசிந்திடும் மொழிகள்
நோகிடாது படையெடுத்து நேர்மையில் வென்றிடும்......


ஆலகால விசமது ஆளைக் கொல்வதாய்
ஆலமரமாய் விரிந்து ஆகாயம் தாண்டும்
கோலத்தில் இருக்கும் கொடிய நோயினை
நீலக்குருதி புவியிலிருந்து நீங்கிடச் செய்திடும்......

எழுதியவர் : இதயம் விஜய் (5-Mar-17, 11:06 am)
பார்வை : 61

மேலே