ஒரு தந்தை மகளின் உரையாடல்

ஒரு தந்தை மகளின் உரையாடல் !!!

பெண்ணைப் பெற்றவர்கள் அவசியம் படிங்க.
அவர் சிரித்துக்கொண்டே என்னிடம் சொன்னார் “ குளிர்காலம் பாருங்க,

இருட்டா இருக்குன்னு பொண்ணோட ஸ்கூல் பஸ் வர்ற இடம் வரைக்கும் நான் காலேல துணைக்குப் போறேன். அப்போ நாங்க தனியா எங்களுக்குள்ள பேசிக்குவோம். Father - daughter talks.

அவ , ஒரு வாரம் முன்னாடி இப்படி ஒரு காலை நடையில் , “அப்பா , ஒண்ணு சொன்னா கோவிச்சுக்க மாட்டீங்களே?”ன்னா.

“மாட்டேன், தாராளமாச் சொல்லு”

”அந்த 304ல இருக்கானே, அன்ஷுல் ? அவன் என்னப் பாத்து சிரிக்கறான்”

“சரி” என்றேன் கொஞ்சம் எச்சரிக்கையாக. அவனுக்கு இவளை விட ஒரு வயசு கூட இருக்கும். 10ம் வகுப்பு.

”மொதல்ல அந்த பையா கிட்ட ஒழுங்காத்தான்ப்பா பேசிட்டிருந்தேன். நாலுநாள் முன்னாடி, திடீர்னு அவன் ‘நீ எனக்கு ஸ்பெஷல் ப்ரெண்டு’ன்னான்.”

“நீ என்ன சொன்னே?”

“ம்ம். .. நானு.. ஷட் அப்னு முதல்ல சொல்லிட்டேன். ஆனா, அவனைப் பாக்கறப்போ என்னமோ ஒரு மாதிரி படபடன்னு வருதுப்பா. “

நான் மவுனமாக இருந்தேன்.

“இது தப்பாப்பா? எனக்கு ரொம்ப பயம்ம்மா இருக்கு. நான் தப்பு பண்றேனோ?”

நான் இன்னும் அமைதியாக நடந்தேன்.

“அப்பா” என்றாள் பெண் குரல் உடைந்து. ரோடு என்றும் பார்க்காமல் திரும்பி, என் கைகளைப் பிடித்துக்கொண்டு “ சாரிப்பா, நான் தப்பா சொல்லிட்டேனோ? சாரி சாரி” என்று அழுதாள்.

“இல்லேம்மா” என்றேன். “ நினைச்சுப் பாத்தேன். நீ ஒன்ணாங் கிளாஸ்ல
இருக்கறச்சே, ஸ்கூல்ல க்ளாஸ்லயே மூச்சா போயிட்டே. ஸ்கர்ட் எல்லாம் நனைஞ்சு .. it was a mess you know?. அந்த வயசுக் குழந்தைக்கு இயற்கை உபாதையை அடக்கத் தெரியாது. இப்ப நீ எவ்வளவு பெரிய , பொறுப்பான பெண்ணாயிட்டேன்னு நினைக்கறச்சேயே, பெருமையா இருக்கு”

“அப்பா?” என்றாள் அவள் குழம்பிப்போய்.இதுக்கும், அவள் சொன்னதுக்கும் என்ன தொடர்பு?ன்னு நினைச்சிருக்கலாம்.

“இப்போ கிளாஸ்ல இருக்கறச்சே பாத்ரூம் வந்ததுன்னு வைச்சுக்கோ. அது இயற்கைன்னு க்ளாஸ்லயே போயிறமுடியுமா? “

“சீ.ச்சீய்” என்றாள் அவள். வெட்கமாக,என் கையைக் கிள்ளினாள்.

“கிளாஸ் முடியற வரை அடக்கி வைச்சிருந்து, இண்டெர்வெல்ல ஓடிப்போறேல்ல? அதுமாதிரிதான். இந்த பையன் பத்தின உணர்ச்சியெல்லாம், இயற்கையோட வேலை.நாம படிக்கறச்சே இதைத் தவிர்த்திறணும். அப்புறம் காலம் வந்தப்போ அதும்பாட்டுக்கு நடக்கும்.”

அவள் கலங்கிய கண்களோடு ஒரு நிம்மதியுடன் என்னைப் பார்த்தாள்.

“ஸோ, இனிமே அந்தப் பையனைப்பார்த்தா பாத்ரூம்னு ஞாபகம் வரும் இல்லையா?”

“உவ்வே” என்றாள் போலியாக வாந்தி எடுப்பதாகக் காட்டி. பஸ் திருப்பத்தில் வந்திருந்தது. “

நண்பர் சொல்லி முடித்தார்.

எப்படி ஒரு நாசூக்கான விசயத்தை,”நாயே, அதுக்குள்ள காதல் கேக்குதோ?”என்றெல்லாம் பொங்காமல், மிக அமைதியாக ஒரு நகையுணர்வுடன் கையாண்டிருக்கிறார்?

வளர்ப்பதில் நாமும் வளர்கிறோம்...
பொறுப்பு தெரிந்திருந்தால்
இது தான் உண்மை

நல்ல அனுபவ பாடம்!!!!!
நம் அனைவருக்கும்.

எழுதியவர் : கவிழகி செல்வி (21-Mar-17, 5:12 pm)
சேர்த்தது : selvi sivaraman
பார்வை : 865

சிறந்த கட்டுரைகள்

மேலே