வேதனைத் தீயினில் வேரறுந்து பூங்கொடிகள் --- அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

வேதனையாம் தீயினிலே மூழ்கியுமே
------ வேரறுந்து நிற்கின்றார் பூங்கொடிகள் .
மாதங்கள் வருடங்கள் வயதுகளும்
------ மாறிமாறி வந்தாலும் தீர்வில்லை.
பாதங்கள் வலமாக வைத்திடவும்
------ பண்பான சமுதாயம் ஈங்கில்லை .
சாதனைகள் செய்வதற்கு மறுக்கின்ற
------ சாக்கடைகள் தள்ளுவரே நெருப்பினிலே !!!


பூங்கொடிகள் மழலையிலே கருகின்ற
------- புவிதனிலே வாழ்கின்றோம் அவலம்தான் !
ஓங்குபுகழ் இல்லையினி உலகத்தில்
------- ஓலமிடும் நாள்விரைவில் காண்பீரே !
தாங்குவரோ பெண்டிருமே கொடுமைதனை
-------- தரமான துணையாக மாறுவீரே !!
மூங்கிலினால் செய்ததொரு இசைக்கருவி
------- முழுமையுமாய் ஓசைதரும் கேட்பீரே !!!


காதலினால் வேதனையில் தவிக்கின்றார்
------- காலமதை எதிர்பார்த்தே பூக்கின்றார் .
தீதலுமா காதலுமே சொல்வீரே
------- தீயாகிச் சுட்டெரிக்கும் இதயத்தை .
மோதலுக்குப் பிறக்கவில்லை பூங்கொடிகள்
------- மோகத்தைத் தீர்த்திடுவார் அறிவீரே !
சாதலுமே வேண்டாமே வேரறுந்தே
------- சாற்றுகின்றேன் மருந்தாகும் காதலுமே !!!



ஆக்கம் :- பைந்தமிழ்ப் பாமணி . சரஸ்வதி பாஸ்கரன்

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (29-Mar-17, 2:10 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 43

மேலே