ஏனோ நீயும் எனைமறந்தாய்

இசையில் மயங்கி விட்டேனடா - நான்
இதயம் நெகிழ்ந்து நின்றேனடா
அசையா விழியால் பார்த்தேனடா - நீ
அருகில் வந்தால் பூப்பேனடா!

ஊமைக் கனவாய் ஆனதடா - என்
உள்ளமும் கனன்று எரியுதடா
ஆமை யாய்ப்புலன் அடங்கிடுமோ - உன்
அன்பே என்னை மாற்றுமடா!

கொடியில் படர்ந்த மலர்களுமே - உன்
கோலம் காண ஏங்கிடுதே
துடிக்கும் பெண்மை நிலையுணர்ந்தே - நீ
தோளில் தாங்க வந்திடடா!

காற்றின் உறவில் அரும்பவிழ - அதில்
களிப்புடன் வண்டு மதுசுவைக்கும்
ஏற்றுக் கொண்டிட வருவாயா - கண்ணா
ஏனோ நீயும் எனைமறந்தாய்!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (4-Apr-17, 12:04 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 77

மேலே