தாயும் சேயும்

திங்கள் பத்துச் சுமந்தவளின்
***தியாகம் சொல்லில் அடங்கிடுமோ ?
மங்கை யவளின் அன்பிற்கு
***மண்ணி லுண்டோ ஈடுயிணை ?
கங்கை போலும் வற்றாத
***கருணை மனத்தைக் கொண்டிடுவாள்
பொங்கு முவகைப் பெருக்கோடு
***பொறுமை காப்பாள் இறுதிவரை !

குடலைப் புரட்டி எடுப்பதுபோல்
***குமட்டிக் கொண்டு வந்தாலும்
உடலும் வலியால் வதைத்தாலும்
***உள்ளம் சோர்ந்தே போனாலும்
இடரைச் சற்றும் கருதாமல்
***இனிமை நினைவைச் சுமந்திடுவாள்
தடவி வயிற்றைப் பிரியமுடன்
***தாய்மை உணர்வால் பூரிப்பாள் !

பிஞ்சு காலால் கருவறைக்குள்
***பிள்ளை எட்டி உதைத்தாலும்
நெஞ்சம் குளிர்ந்து நெகிழ்ந்திடுவாள்
***நித்த மதற்காய்த் தவமிருப்பாள்
கொஞ்சு மொழியைக் கேட்டிடவே
***குழந்தை முகத்தைப் பார்த்திடவே
வஞ்சி யவளும் துடித்திருப்பாள்
***வருகை கண்டே உயிர்நனைவாள் !

உதிரப் பாலைப் புகட்டிடுவாள்
***உணர்வி லொன்றிக் கலந்திடுவாள்
எதிலும் தாய்மை யுணர்வோடு
***இனிமை வாழ்வில் கூட்டிடுவாள்
புதிராய் விளங்கும் பிள்ளையையும்
***புத்தி புகட்டித் திருத்திடுவாள்
துதிக்கும் தெய்வம் அவளாகத்
***துணையா யிருப்பாள் துணிவாக !

தாய்க்கும் சேய்க்கு முள்ளபந்தம்
***தகைமை மிக்க உறவாகும்
தேய்ந்து வளரும் பிறையல்ல
***தேயாக் கதிர்போல் நிதமொளிரும்
ஓய்த லில்லாக் கடலலைபோல்
***உரிமை யோடு தொடர்ந்துவரும்
சாய்ந்து கொள்ள தாய்மடியே
***சக்தி கொடுக்கும் வாழ்வினிலே !


சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (19-May-17, 12:39 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 96

மேலே