செத்தான்
ஊருசனம் கண்மூடி
உறங்கும் நடுசாமம்,
கரெண்ட்டும் இமைமூட
கைவரிசை காட்ட கூடிவந்த
கொலைகாரப் பாவிகள்
பதுங்கி, பதுங்கி வந்தவர்கள்
பசி போக்கவா—எசமான்
பணம் பார்க்கவா?
தொழுது வந்தாலும்
தெய்வம் துணை வருமா?
நின்றிருந்த என்னை
நிலைகுலைய செய்ய
ஆயுதம் ஏந்தி என்
அங்கங்கள் சிதைய
தலை வேறு, உடல் வேறாய்
வெட்டிக் கொலை செய்து
வெளியேறும் செங்குருதியோடு
மண்ணில் இழுத்து வந்து
மூடி புதைக்காமல்—கட்டியெடுத்து
கரையேற வந்தபோது
கூக்குரலிடுவதுபோல்
காவலர்களின் துப்பாக்கி
சரமாக ஒலியெழுப்ப
செம்மரத்திருடன்
சரிந்து விழுந்து செத்தான்