ஆண்டவனும் - நட்பும்
ஆண்டவனும் - நட்பும்
ஆண்டவனின் சபையிலே
அவசரக் கூட்டமாம்
அகிலத்தை ஆள்பவன்
ஆர்வமாய் இருக்கிறான்
இன்று....
புவிதனில் யாவரும்
மகிழ்ச்சியில் திளைக்க
என்ன காரணம்
தெரிந்து சொல்லுங்கள்
என்று சபையிலே
வினவினான் அவனுமே
உடன் இருந்தவர்
பட்டென்று சொல்லினர்
நண்பர்கள் தினமாம்
நட்பும், தோழமையும்
கட்டுக் கோப்பாக
உலா வரும் நாளாம்
ஓஹோ .. அதுதான்
ஆனந்த கூட்டம்
ஆர்ப்பரிக்கிறதோ
படைப்பது என் தொழில்
உறவை அறிவேன்
நட்பை நானும்
இதுவரை அறியேன்
யாரிடம் கேட்பது
யாரை அழைப்பது
தூதுவர் விரைந்தனர்
பூலோகம் வந்தனர்
நோட்டம் விட்டனர்
என்னைப் பார்த்தனர்
என்ன மாயமோ
அகிலத்து சபைதனில்
நிறுத்தப்பட்டேன்
பரம்பொருளை தலை வணங்கி
என்ன விஷயம் என்றேன்
நட்பைப் பற்றி
சற்றே சொல்லேன்
அதன் மகிமை பற்றி
அறியத் துடிக்கிறேன்
வியப்போடு பார்த்தேன்
ஜகத்தை ஆள்பவனுக்கு
தெரியாத ஒன்றா
இருந்தாலும்
கேள்விக்கு பதிலை
நானும் தந்தேன்
நட்பு என்பது
மனதால் அறிவது
உணர்வில் கலப்பது
அறிவும் அங்கே
அமைதி ஆவது
இன்பம் துன்பம்
சகலமும் பகிர்வது
இன்னல்கள் வந்தால்
கடவுளுக்கு முன்பே
அங்கே இருப்பது
ஒளிவு மறைவு
இல்லாதிருப்பது
நட்பின் சுவாசம்
பலத்தை தருமே
ஆண்பால் பெண்பால்
இருவருக்கும் இடையே
தோன்றும் நட்பே
தோழமையாகும்
இது புனிதம் வாய்ந்தது
தெய்வத்தின் சன்னதிக்கு
நிகரானது
நட்பு இருந்தால்
வாழ்வு முழுமையாகும்
மனதினில் இருக்கும்
சுமைதனை பகிர்ந்திட
மானிட ஜாதியில்
நட்பு அவசியம்
இதை
படைப்பதும் நாங்களே
காப்பதும் நாங்களே
நட்பின் வீரியம்
சொல்லில் அடங்காது
தினமும் தொடர்பில்
இருத்தல் வேண்டாம்
இதுவே நட்பின்
இனிய தத்துவம்
மனித இனத்தில்
நட்பிடம் மட்டும்
சகலத்தையும் பகிரலாம்
சரணாகதி அடையலாம்
இன்னும் சொல்லவா
என்றேன் நானும்
கண்மூடி அனைத்தையும்
அமைதியாய் கேட்டான்
பின் அவன் உதிர்த்த
வார்த்தையை கேட்டு
சிலிர்த்துப் போனேன்
உரைந்தும் விட்டேன்
"எனக்கு நட்பாய்
நீ இருப்பாயா"
என்றே வினவினான்
அந்த ஆதி மூலமே
என்னருகினில் வந்து
தோளோடு அணைத்து
தன் மனதின் எண்ணங்களை
என்னோடு பகிரத் தொடங்கினான்
அனைத்து...
நட்பிற்கும்
தோழமைக்கும்
இனிய "நண்பர்கள் தின" வாழ்த்துக்கள்
ஆனந்த் சுப்ரமணியம்
தேதி – 06.08.2017 நேரம் - மாலை 4.29 மணி