வாழ்க்கை எதுவோ??
வாழும் சிறிது காலத்தே எண்ணமதில்
எழும் சிந்தனைகள் ஞாலத்தினும் அதிகம்
சூழும் கற்பனைகளில் கோட்டைகள் கட்டப்பட்டு
நாளும் கழிகிறது நகைப்புடனே நாட்கள் !!!
ஆயினும் ;
வாழத்தான் வேண்டும் வாழ்க்கையை !!
எழத்தான் செய்தது என்னுள்
எண்ணமும்
வாழ்க்கையின் வனப்பரிய !!!
வாழ்க்கை ஒரு புதிர் என்கிறான்
விடை இல்லா வினாவோ ??
வாழ்க்கை ஒரு பந்தயம் என்கிறான்
வெற்றி மட்டும் தான் இலக்கோ ??
வாழ்க்கை ஒரு பயணம் என்கிறான்
பாதை அறிந்தால் பயம் இல்லையோ ??
வாழ்க்கை ஒரு பாடம் என்கிறான்
அறிந்தவர் மட்டும் தேர்ச்சி பெறுவரோ ???
வாழ்க்கை ஒரு வரம் என்கிறான்
தவம் செய்தால் பலன் கிட்டுமோ ??
வாழ்க்கை ஒரு புதையல் என்கிறான்
ரகசியம் அறிந்தவன் ராசியானவனோ ??
வாழ்க்கை ஒரு கலை என்கிறான்
வித்தை கற்றவன் இன்புற்றிருப்பானோ ??
வாழ்க்கை ஒரு போராட்டம் என்கிறான்
புனையப்படா விதிக்கும் புரிந்துவிடும்
மதிக்கும் இடையிலோ??
வாழ்க்கை ஒரு புத்தகம் என்கிறான்
புதினமா இல்லை ஆய்வு கட்டுரையா ??
வாழ்க்கை ஒரு மேடை என்கிறான்
பாத்திரங்கள் சித்தரிக்கப்பட்டவையோ ??
வாழ்க்கை ஒரு வெற்றிடம் என்கிறான்
நிரம்பி வழியும் ஆசைகள்
நிலையாததாலா?
நன்றோ தீதோ அறிந்தவர் யாரோ ??
என்றோ எழுதிவைத்த நியதி எதுவோ ??
மெய்யும் உயிரும் சேர்ந்தே செய்யும்
வினையது விலக்கிடும் வாழ்வதை
உய்யும் பொழுதே உற்றோர்க்கு உதவிட்டால்
உயிர்மெய் இழந்தாலும் சூட்டிடுவர் வாகைதனை !!!
முயன்று தான் பார்த்திட்டேன் அறிந்திட
முற்றும் உணர்ந்தே முற்றுப்புள்ளி வைத்திட
காற்புள்ளி வைத்தே கடக்கிறேன் முற்றுப்பெறா முடிவிலி இதுவோ ???