வாழ்த்தும் உள்ளம்
புக்ககம் கிளம்பும் புதல்வியைக் கண்டு
பொங்கிடும் விழிகளில் வெள்ளம்!
அக்கறை யுடனே ஆறுதல் சொல்லி
அணைத்திடும் அன்னையின் உள்ளம்!
துக்கமும் வலியும் தொண்டையை அடைக்கத்
துடித்திடும் தந்தையின் நெஞ்சம்!
முக்கனிச் சுவையாய் வாழ்க்கையும் இனிக்க
முழுமன நிறைவுடன் வாழ்த்தும்!