பல்லாண்டு வாழியே

முகநூலின் குழுக்களிலே முத்திரையுந் தான்பதித்தே
அகத்தினிலே இனித்திருக்கும் அமுதமென கவிநிறைத்தே
முகமறியா நட்புகளை முதல்விழாவில் காணவைத்துச்
சுகமான நினைவுகளைச் சுழலவிடும் படைப்புவிழா !

விருதுகளும் விதவிதமாய் மேடையினை அலங்கரிக்க
விருந்தினர்தம் சிறப்புரையும் வெகுமதியாய் மனம்நிறைக்க
பெருமைமிகு மகாகவியும் பிரியமுடன் வழங்கிடவே
விருப்புடனே பெற்றேன்யான் விருது,கவிச் சுடரென்றே !

படைப்பென்ற குழுமத்தைப் பாராட்ட விழைந்துவிட்டால்
மடைதிறந்த வெள்ளம்போல் வார்த்தைகளும் வந்துவிழும் !
நடைபெற்ற விழாவிற்காய் நன்றிகளை நவில்கின்றேன்
படைத்தோனே ஜின்னா!நீ பல்லாண்டு வாழியவே !

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (13-Sep-17, 8:48 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 57

மேலே