அரவணைக்கிறது

முன்பு வாழ்ந்த மூதாதையர்
மண்ணுயிரை தன்னுயிர் போலக்
காத்த காலமது
வறுமையில் வாடியபோதும்
வறுமையெனக் கருதாமல்
சிரமமெனக் கொண்டார்கள்

வனத்திலே மேய்ந்தாலும்
இனத்தோடு மேயும் உயிரினம்போல்
வளமை மிக்கவர்கள்
வாடித்தவிக்கும் ஏழைகளுக்கு
உதவிகள் பல செய்து
வாழவைத்து மகிழ்ந்தார்கள்

மாடுகளே அன்றைய
மனிதர்களை வளர்த்தன
அதை மறக்காத மனிதன்
அவற்றின் பசி தீர்க்க
கொல்லையிலேயே வைத்தான்
குன்றுபோல் வைக்கோல் போர்

மனிதனே மனிதனை
மதிக்காத இப்பூவுலகில்
மாடுகள் தெய்வமானதும்
மாட்டுக்கு மனிதன் கடவுளானதும்
ஒன்றையொன்று மதித்து
வாழ்வதும் இங்கு தான்

முன்னோர்களின்
உயரிய நேர்மையையும்
நெறி தவறா வாழ்க்கையையும்
இலக்கிய பதிவுபோல
இன்றைய தலைமுறையினர்
நினைவில் கொள்ளவேண்டும்

ஈசனுக்கு ஒப்பான
ஈகைக் குணமுடையோர்
இன்றும் வேர்கள் போல்
அங்கங்கே இருப்பதால்தான்
ஆலமரம்போல சமூதாயம்
அகல விரிந்து அரவணைக்கிறது.

எழுதியவர் : கோ. கணபதி. (14-Sep-17, 8:25 am)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 53

மேலே