பெண்ணறியும் என்பதாலோ

ஈரைந்து மாதங்கள்
கருவறையில் சுமந்து
மகப்பேறு காண
மருத்துவரை நாடுவது
மானுட இயல்பு

புதிய வரவெண்ணி
பொங்கி வரும் கணவுகளில்
அள்ளி அணைத்திட
அன்பு மனம் தவித்திடும்—அதில்
மரண வேதனையும்
மறைந்து போகும்

பொறுப்பற்ற மருத்துவரின்
தரமற்ற மருத்துவத்தால்
நாலாறு வருடங்கள்
கருவென சுமக்கலானாள்
கத்தரிக்கோல் எனும் ஆயுதத்தை

பாவம் மகராசி
காலனவன் கூப்பிடுமுன்
காலமெல்லாம் அவள் பட்டதுயர்
சொன்னாலும் புரியாது
வார்த்தையிலும் அடங்காது

இத்தனை நாள் வாழ்ந்த கதை
அற்புதந்தான் என்றாலும்
ஆயுதத்தை பிரசவிக்க
கோர்ட்டாரை நாடியதில்
குறையொன்றுமில்லை தாயே!

கோவிலில் வீற்றிருக்கும்
ஆண்டவனை வேண்டாமல்
ஆள்பவரை வேண்டியது
பெண்ணின் வேதனை
பெண்ணறியுமென்பதாலோ!

எழுதியவர் : கோ. கணபதி. (18-Sep-17, 12:39 pm)
பார்வை : 54

மேலே