கவிதைத் திருவிழா - உன்னில் மிக பிடித்தது உன்னை

"உன்னில் மிக பிடித்தது
உன்னை" என்று சொல்லி
"என்னில் மிக பிடித்தது
எது? "என்று எனை கேட்டாய்.

உன் பேச்சு
எனக்கு பிடிக்கும் ...
அழகாக பேசுவதால்
மட்டும் அல்ல...
அளவாக பேசுவதால்...

ஓரக்கண்ணால் நீ
பார்ப்பது பிடிக்கும் ...
உற்று என்னை
நோக்கலும் பிடிக்கும் ...

மார்கழி பனித்துளி
பொழிவது போல
உன் ஈர இதழின்
முத்தம் பிடிக்கும் ...

பொய்களை அள்ளி
பூசி வந்தாலும்
எனை வருணித்து சொல்லும்
கவிதைகள் பிடிக்கும் ..

தோல்வியில் சலிக்காத
உன் வெற்றிகள் போல
வேர்த்து வழியா
உன் நெற்றியும் பிடிக்கும் ..

இன்னும்... இன்னும்..

அடியோடு சாய்க்கும்
உன் மகிழ்ச்சி பிடிக்கும்..,
மடியோடு சாயும்
உன் சோகம் பிடிக்கும் ...

ஊடல் பொழுதினில்
கெஞ்சல் இல்லாது
இழுத்து அணைக்கும்
உன் வேகம் பிடிக்கும்..

வெள்ளை சிரிப்பின்
பால் மணம் பிடிக்கும் ...
கள்ளச் சிரிப்பின்
மோகம் பிடிக்கும் ...

கண்ணில் தெரியும்
ஆண்மை பிடிக்கும்.
என்னில் புரியும்
உரிமை பிடிக்கும் ...

நான் மார்பில் சாய்ந்திட
மிகச்சரியாக
வளர்ந்து நிற்கும்
உன் உயரம் பிடிக்கும்...

இவை அனைத்தையும்
விட மிக பிடித்தது ...
எதிர்பாராது நீ தந்த
முதல் முத்தத்தில்
அதிர்ந்து போய்
நான் எழுந்து நிற்க
செய்வதறியாது
திகைத்த உன் முகம் ...!

எழுதியவர் : கார்த்திகா லட்சுமி (21-Sep-17, 5:22 pm)
பார்வை : 137

மேலே