ஜெயலலிதாவை மிகவும் வலிமையானவராகப் பார்க்கிறேன் என்று ரசிகர்களோடு கலந்துரையாடும் போது ஜோதிகா

பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா, சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுப்ரியா, மாதவன், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் 'மகளிர் மட்டும்'. விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இப்படத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் ஃபேஸ்புக் லைவ் வழியாக ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தார். இதனை ரம்யா தொகுத்து வழங்கினார்.

வீடியோ வடிவில் ஜோதிகா பேசிய பதில்களின் தொகுப்பு:

'மகளிர் மட்டும்' வெற்றியடையும் என்ற நம்பிக்கையில்தான் நடித்தேன். ஆனால், கிடைத்த வரவேற்பில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். அந்த வரவேற்பால் ஒரு நாயகன் போல் உணர்கிறேன். அதற்கு காரணமான பெண்கள் அனைவருக்கும் நன்றி.

நானும், சூர்யாவும் இணைந்து நடிக்க ஆசை இருக்கிறது. ஆனால், அதற்கு தகுந்தாற் போன்று கதை அமைய வேண்டும். மிகவும் குறைந்தளவிலேயே நல்ல கதைகள் வருகின்றன. சூர்யாவோடு இணைந்து நடிக்க நல்ல கதைகளாக காத்திருக்கிறேன். 'மகளிர் மட்டும்' படத்தில் சூர்யா நடித்திருந்தால் வழக்கமாக இருந்திருக்கும். ஆகவே, சிறு ஆச்சர்யம் இருக்கட்டுமே என்று மாதவனை நடிக்க வைத்தோம்.

பெண்களில் உத்வேகம் அளித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களில் முதன்மையானவர் ஜெயலலிதாதான். அவரை மிகவும் வலிமையானவராகப் பார்க்கிறேன். அவருடைய பேசும் விதம் மட்டுமன்றி அனைத்து விதத்திலுமே வலிமையானவர். அவரோடு அமர்ந்து காபி குடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். வலிமையான பெண் என்றவுடன் ஜெயலலிதா முகம் மட்டுமே ஞாபகம் வருகிறது.

'மகளிர் மட்டும்' படத்தில் பைக் ஒட்டுவதைப் பார்த்துவிட்டு மகள் தியா மிகவும் பெருமைப்பட்டாள். தன்னை பள்ளியிலிருந்து அழைத்து வர, பைக்கில் வாருங்கள் என்று கேட்டார். அவரை 2 முறை பைக்கில் சென்று அழைத்து வந்தேன்.

எனக்கு முழுமையான வில்லியாக நடிக்க ஆசைதான். நான் மட்டுமல்ல நல்ல கதைகளுக்காக நிறைய நாயகிகள் காத்திருக்கிறார்கள். சமீபகால நடிகர்களில் விஜய் சேதுபதியின் நடிப்பு மிகவும் பிடித்திருக்கிறது. எப்போதுமே பிடித்த நடிகர்கள் என்றால் மாதவன் மற்றும் அரவிந்த்சுவாமி.

மணிரத்னம் அலுவலகத்திலிருந்து தொலைபேசியில் பேசினார்கள். உங்களிடம் கதை சொல்ல வேண்டுமாம் என்று கார்த்திதான் என்னிடம் சொன்னார். உடனே சென்று கதையைக் கேட்டேன். மிகவும் பிடித்திருந்தது ஒ.கே சொல்லிவிட்டேன்.

ஒரு நல்ல ஆக்‌ஷன் கதையில் நடிக்க வேண்டும் என்ற ஆசையிருக்கிறது.

எங்கள் இருவரில்(சூர்யா) யார் முதலில் காதலைச் சொன்னோம் என்று ஞாபகமில்லை. ஆனால், நீண்ட காலமாக நண்பர்களாக தொடர்பிலேயே இருந்து காதலித்து திருமணம் செய்து கொண்டோம். சூர்யா நடித்ததில் 'பிதாமகன்' ரொம்பப் பிடிக்கும்.

இவ்வாறு ஜோதிகா தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் லைவ்வில் ஜோதிகா அளித்த பதில்களின் முழுமையான வீடியோ தொகுப்பு:

எழுதியவர் : (22-Sep-17, 8:54 am)
பார்வை : 46

சிறந்த கட்டுரைகள்

மேலே