நீங்கள் யார்

இடைவிடாத சுவாசம் உள்ளிழுத்து வெளியிட்டு உடலைப் பற்றிக்கொண்ட உயிருக்கு உறுதுணையாக ஒவ்வொரு அணுவும் ஒற்றுமை கொள்கையில் அதனதன் பணியை அதது ஆற்றுதலில் மடிதலும், உயிர்த்தலும் தொடரும் மகத்துவம் அறிவாயோ பிரிவினை வாதம் பற்றிக்கொண்ட பேராசை மானிடா?

கையில் உள்ள அணுக்களெல்லாம் உன்னைப் போல் பிரிவினை வெறிக்குள் சிக்கினால் உனக்கேது கை?

இதயத்தில் உள்ள அணுக்களெல்லாம் உன்னைப் போல் பிரிவினை கீதம் பாடினால் உனக்கேது இதயம்??

கையின்றி உடலியங்கும்.
இதயமின்றி உடலியங்குமோ??

உலகைப் பிரித்தாலும் வெறியர்களே!
உண்மையை என்றறிவீர்களோ?

உங்கள் சிந்தனைக்குத் தடையாய் இருப்பதே பணமென்ற படை...

கோவிலில் மட்டுமே கடவுளுண்டு என்பது போலே,
கல்லூரியில் மட்டுமே கல்வியறிவு கிட்டுமென்ற மூடநம்பிக்கையில் சிக்கித் தவிக்கும் உங்களைவிட வேறு மூடர்களை எங்கு சென்று தேடுவதோ??

உழைத்தால் பணமென்ற காகிதம் கிடைக்கும்...
உழைப்பதற்குத் தொழிற்சாலைகள் கட்டலாம்...
பணம் கொடுத்தால் வேண்டிய பொருள் கிடைக்கும்...
விற்பதற்கு கடை கட்டலாம்...
ஆனால், கடவுள், கல்வியறிவு இவை இரண்டுக்கும் வரையறையேது??
வரையறை இல்லாததை அறைக்குள் அடைகாக்க நினைக்கும் நீங்கள் யாரென்று புரிகிறதா???

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (17-Oct-17, 2:43 pm)
Tanglish : neengal yaar
பார்வை : 1096

மேலே