காமமும் மருத்துவமும்---------------நடேசன்

ஆண் பெண் இருவரினதும் காம உணர்வை அடக்க காலம் காலமாக எல்லாச் சமயங்களும் முயற்சித்தன. இந்த முயற்சிகள் ஆண்கள் மீது புத்திமதியாகவும் பெண்கள் மீது தண்டனையாகவும் வைக்கப்பட்டது. சிறிது மீறியவர்கள் விபசாரிகள் ஓடுகாலிகள் என முத்திரை குத்தப்பட்டார்கள். இது கிழக்கத்தைய நாகரிகத்தில் மட்டுமல்ல மேற்கிலும் நடந்தது. கிறீஸ்துவ சபைகள் இதை முன்னின்று நடத்தின. இவை சமூக நியதியாகி பின்பு கலாச்சாரம் பண்பாடு என வந்து இறுதியில் சட்டமாகிவிட்டது. காமத்தை அடக்குதல் மூலம் மனிதன் தன்னை அறிகிறான். ஞானியாகிறான் என பல காலமாக கருதினார்கள். இந்த நிலையில் சிக்மண் பிரைட் (Sigmund Freud)மனித பண்புகள் காமத்தின் அடிப்படையில் எழுந்தவை என எதிர்வாதமான கருத்தைக் கூறினார். இது சம்பந்தமான தத்துவத்தை இங்கு விவாதிக்க நான் வரவில்லை. அதற்கான அறிவும் எனக்கில்லை.

இந்த காமத்தோடு சம்பந்தப்பட்ட மூன்று முக்கிய மருந்துகள் இருபதாம் நுhற்றாண்டின் இறுதிப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இவைகளின் சமூகத் தாக்கத்தைப் பற்றிய சில கோடுகளை வரைய விரும்புகிறேன். தகவல்கள் எராளமாக இணையத்தில் உள்ளன. ஆனால் இந்தத் தகவல்களை ஒழுங்காக ஒன்று சேர்க்கும் போதே விடயங்கள் புரியத் தொடங்கும். என்னிலும் பார்க்க இந்தக் கட்டுரையை மனித மருத்துவர் எழுதி இருந்தால் நன்றாக இருக்கும். தமிழ் மொழி இந்த விடயத்தில் ஏழ்மையானது .

நான் கீழே சொல்லப் போகும் மூன்று மருந்துகளில் ஏதாவது ஒன்றை இந்தக் காலத்தில் எவரும் பாவிக்காமல் தவிர்க்க முடியாது. மேற்கு நாடுகளில் அறிமுகமானாலும் இப்பொழுது உலகம் முழுக்க பாவிக்கப்படுகிறது. இவைகளின் காப்பு உரிமை ஆரம்பத்தில் இவற்றை தயரரித்த கம்பனிகளுக்கு தற்போது இல்லாமல் போய்விட்டது. பல புதிய கம்பனிகள் இவைகளின் நகல்களைச் செய்து மலிவாக விற்கத் தொடங்கி விட்டன. 1970 அமெரிக்காவில் இலி லில்லி அண்ட் கம்பனியால் ((Eli Lilly and Company) அறிமுகப்படுத்தப்பட்ட புரசாக் (Prozac) என்ற மருந்து மனிதர்களின் மன அழுத்தத்திற்கு (depression) மருந்தாக வந்தது. மேற்குலகத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விடுதலை தரும் மாமருந்தாகியது. இந்த மருந்தை பாவித்தவர்களுக்கு பின் விளைவாக காம உணர்வால் ஏற்படும் உடலுறவுக்கான விருப்பம் ஆண்களிலும் பெண்களிலும் அற்று விடுகிறது. மூளையே காமத்தின் மையம். உடலுறவுக்கான நினைப்பு மூளையில் இருந்து வருகிறது அதன் செயல்பாட்டு சாதனம் இடுப்புக்கு கீழே இருக்கிறது. இந்த மருந்தினால் காமத்திற்கான ஆவல் மூளையில் இருந்தாலும் செயல்பாட்டிற்கான சமிக்ஞை கிடைக்காது போய்விடுகிறது. இந்த புரசாக் மருந்தை அமெரிக்காவில் கெந்தக்கியில் (Kentucky) மாநிலத்தில் ஒரு மாதம் பாவித்த ஜோசப் வெஸ்பேர்கர் ( (Joseph Wesbecker)) எட்டுப் பேரை கொலை செய்து 12 பேரை காயப்படுத்தினார் இதைவிட இந்த மருந்தை பாவித்த பலர் தற்கொலை செய்தார்கள். இதன் பின்பு இந்த மருந்து கொலைகார மருந்து என நீதிமன்றத்தில் வழக்கு நடந்து மருந்துக் கம்பனி பணத்தை நட்டஈடாக கொடுத்த பின் இதனது பக்க விளைவுகள் பிரபலமாகியது. எனது ‘உன்னையே மயல் கொண்டு நாவலில் இந்த மருந்தை மன அழுத்தத்திற்காக பாவிக்கும் பெண்ணாக ஜுலியாவை படைத்துள்ளேன்;. இதில் முக்கியமான விவாதத்துக்குரிய விடயம் இந்த மருந்துகள் வன்முறை, தற்கொலை போன்ற விடயங்களை மனித மனங்களில் ஏற்படுத்தியதுதான். இது மருந்தின் நேரடிச் செயலா அல்லது காம உணர்வை இல்லாமல் ஆக்கியதால் வன்முறை தற்கொலை முதலானவற்றை நாடச்செய்ததா? இங்கே சிக்மண் பிரைய்டின் கருத்துக்கு இடமுள்ளதா? மேலும் காம உணர்வை அடக்கச் சொல்லி சமயங்கள் மட்டுமல்ல பயங்கரவாத இயக்கங்களும் வலியூறுத்துகின்றன.

நம்நாட்டு விடுதலைப் புலிகளும் இந்த சிக்மண் பிரய்ட்டின் கருத்தை புரிந்துகொண்டவர்களா?

அடுத்த மருந்து லிப்பிட்டோர் (Lipitor) இரத்த அழுத்தம் கூடியவர்களின் கொலஸ்ரோலை குறைப்பதற்காக வைத்தியர்களால் கொடுக்கப்படும். மாத்திரை. இது ஸ்ரரின்(Statin) வகையறா மருந்து. ஈரலில் கோலஸ்ரோல் தயாரிப்பை கட்டுப்படுத்தும். 1985ஆம் ஆண்டு பைசர்(Pfizer) கம்பனியால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மருந்து 2008 இல் 12.4 பில்லியன் டொலருக்கு விற்பனையாகியது. கடந்த வருடம் இறுதி வரையூம் இந்த மருந்தின் தனி உரிமை பைசர் கம்பனிக்கே இருந்தது. இந்த மருந்துக்கு உடல் உளைவு, நித்திரை, இன்மை வயிற்று நோ என பல பக்க விளைவுகள் சொல்லப்பட்டிருக்கும்.

சொல்லப்படாதது ஒன்று இருக்கிறது அது என்ன?

இந்தக் கதை பதிலாகும் எனது வீட்டில் லாண்ஸ் கேப் செய்த இத்தாலியன் ஒருவனை ஒரு நாள் மதுச்சாலையில் சந்தித்த போது எனக்காக இரண்டு பியர் வாங்கிய பின்பு ஆண்களுக்குரித்தான, பெண்கள் பற்றிய பேச்சு வந்தது. சிறிது நேரத்தில் அவன் அழுதுவிட்டான். வெறியில் அழுகிறான் என நினைத்து அவனை அலட்சியப்படுத்தினேன். மேலும் சில அந்தரங்க விடயங்களை பேசிய போது அழாத குறையாக தனது கவலையை சொன்னான். நாற்பத்தைந்து வயது அவனுக்கு. முப்பத்தைந்து வயதான மனைவி இருக்கிறாள். அவன் காலை நேரத்தில் தலைவலி எனச் சொல்லியதும் வைத்தியர் பரிசோதித்து விட்டு இரத்த அழுத்தம் என கண்டு பிடித்தார். இரத்த அழுத்தத்திற்கும் கொலஸ்ரோலுக்கும் தொடர்பு உள்ளது என்று கூறி லிப்பிரோரில் போட்டதும் அவன் மனைவியின் பக்கம் போகவில்லை. போனாலும் முத்தத்திற்கு அப்பால் தாண்ட முடியவில்லை. அவனது முப்பத்தைந்து வயது மனைவி சில நாட்களின பின் சந்தேகத்துடன் இவனுக்கு ஏதாவது கள்ளத் தொடர்பு உள்ளதா என சந்தேகித்தது மட்டுமல்ல விவாகரத்து வரைவும் விடயம் போய் விட்டது. என்னிடம் என்ன செய்வது என்றான். இது இந்த லிப்பிற்ரோரின் சதி வேலையாக இருக்கலாம் என்று அவனுக்குப் புரிந்தது. ஆனால் அவனை மனைவி நம்பத் தயாரில்லை. வைத்தியர் கூட அதை ஏற்க மறுக்கிறார் காரணம் அவர் படித்த புத்தகங்களில் இது இல்லை.அவனைப் பொறுத்தவரை உயிரா மனைவியா என்ற நிலைக்குத் தள்ளப்பட்டான்.

அடுத்த மருந்து வயாகரா(Viagra) இது சிறிய தசைகளை ரிலாக்ஸ் பண்ணவைப்பதால் ஆண்குறிக்கு அதிக இரத்தத்தை வழங்கும். இந்த நீல வைரத்தை அறிமுகப்படுத்தியது 1998 இல் அதே பைசர் கம்பனிதான். இந்த வயாகரா மன அழுத்தத்தில் இருக்கும் ஆண்களின் வீரியத்தை கூட்டும் என்ற கோசத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது இப்பொழுது பெண்களுக்கும் உதவுகிறது இதை விட விமானத்தில் பிரயாணம் செய்பவர்களுக்கு கால்களில் ஏற்படும் இரத்த உறைவைத் தடுக்கும் என கண்டு பிடித்திருக்கிறார்கள். விமானத்தில் பிரயாணம் செய்பவர்கள் அதற்காக வயாகராவை விழுங்கிவிட்டுச் சென்றால் பட்டினியாகத்தான் பிரயாணம் செய்யவேண்டும். அதற்கு மேல் எப்படி இருக்கும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டு விடுகிறேன். இதில் கடைசி இரு மருந்துகளும் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் பாவிப்பது. மேலும் பெரும்பான்மையானவர்கள் தாம்பத்திய உறவின் விளிம்பு நிலை மக்கள். வைத்தியர்களும் ஆடு,மாடுகளுக்கு நிறை கூடுவதற்கு உணவு கொடுப்பது போல் மருந்துகளை கொடுத்து விடுவார்கள். இரண்டு மருந்தையூம் தயாரித்த கொம்பனியூம் இதைப் பற்றி பேசாது. வழக்கமாக ஐரோப்பியர்களுக்கு சராசரியாக 60 வயதில் இரத்த அழுத்தமும் 70 வயதிற்கு இதயவலியும் வரும்போது தென் ஆசியர்களுக்கு 45 இல் இரத்த அழுத்தமும் 55இல் இதயவலியும் வந்து விடுகிறது. இந்த நிலையில் வைத்தியர்களுக்கோ பைசர் கம்பனிக்கோ நான் எதிரியில்லை ஆனால் ஆண் வர்க்கத்தினர் பலர் பீஷ்மாச்சாரியராக இருப்பதற்கு அவர்களது சபதம் அல்ல உண்மைக் காரணம் வேறு என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

இந்தக் கட்டுரையை எழுதிவிட்டு தலையங்கம் வைப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டேன். இந்தக்கட்டுரைக்கு இலக்கியவாதிகளாக காமத்தைப் பற்றி எழுதியவர்களான பழையதலைமுறையினரான ஜானகிராமன் லா.ச..ரா அல்லது புதிய தலை முறையினரான சாருநிவேதா ஜெயமோகன் எஸ். ராமகிருஷ்ணன் அல்லது ஈழத்து எஸ்.பொ உமா வரதராஜன் போன்றவர்கள் எப்படி அழகாக தலையங்கம் வைத்திருப்பார்கள் என்ற பதிலை அறிந்துகொள்ள அவர்களது தீவிர வாசகர்களிடம் இருந்து எதிர்பாக்கிறேன். என்னைப் பொறுத்தவரை இந்த தலையங்கம்தான் எழுதுவதிலும் கடினமானதாக இருக்கிறது.

எழுதியவர் : (19-Oct-17, 9:59 pm)
பார்வை : 107

சிறந்த கட்டுரைகள்

மேலே