ஹைக்கூ பாவை நூல் ஆசிரியர் கவிஞர் நக துறைவன் நூல் விமர்சனம் கவிஞர் இரா இரவி

ஹைக்கூ பாவை!
நூல் ஆசிரியர் : கவிஞர் ந.க. துறைவன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

இருவாட்சி (இலக்கியத் துறைமுகம்),
41, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர், சென்னை – 600 011. பக்கம் : 48, விலை : ரூ. 30


******
நூல் ஆசிரியர் இயற்பெயர் ந.கணேசன்; புனைப்பெயர் ந.க.துறைவன் என்ற பெயரில் பல ஆண்டுகளாக பல்வேறு இதழ்களில் எழுதிவரும் படைப்பாளி. பாரத் சஞ்சார் நிறுவனம் வேலூரில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். வேலூர் பெருமைகளில் ஒன்றானவர். மரபு, புதிது, ஹைக்கூ என மூன்றுவகைப்பாக்களும் எழுதுபவர். பன்முக ஆற்றலாளர், பக்திமான் என்பதால் மார்கழி நூறு என்று ஹைக்கூ நூற்றாண்டில்'ஹைக்கூ நூறு 'வடித்துள்ளார்.

மார்கழி மாதத்து நினைவுகளை மனதிற்குள் கொண்டு வந்து நிறுத்தி வெற்றி பெற்றுள்ளார். எனக்கு கடவும் நம்பிக்கை இல்லை. இருந்தபோதும் மிகவும் ரசித்துப் படித்தேன். நாங்கள் கேட்க வேண்டிய கேள்விகளை ஆன்மீகவாதியே கேட்டு இருப்பது சிறப்பு.

பாம்பணையில் பள்ளிகொண்டு
பார்வையிட்டாயா பரந்தாமா?
சென்னையில் பெருவெள்ளம்!

சென்னையில் பெருமழையில் மக்கள் துன்பப்பட்ட போது வரவில்லையே பரந்தாமா என்று தன் ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளார்.

குளிக்கும் படித்துறையில்
பெண்களின் சிரிப்பலைகள்
வெட்கத்தில் செந்தாமரைகள்!

செந்தாமரை வெட்கப்படுமா? என எதிர்கேள்வி கேட்கக் கூடாது, கவிஞனின் கண்களுக்கு செந்தாமரையின் வெட்கம் புலப்படும். அதனைக் காண கவிக்கண் வேண்டும்.

காவல் பொம்மைகள்
தலையெலாம் எச்சங்கள்
கழுவி விடுகின்றன பனித்துளிகள்!

காவல் பொம்மைகளை கவிக்கண்ணால் கண்டு ரசித்து ஹைக்கூ வடித்துள்ளார்.

பூ காய்கறி வாழையென
சுமந்து நகர் வந்த தாய்மாரின்
உழைப்பை உணர்வாயோ கோவிந்தா!

ஏழைப்பெண்கள் வாழ்வில் ஏற்றம் காண இயலவில்லையே என்றா வருத்தத்தை கோவிந்தாவிடம் கோரிக்கையாக வைத்துள்ளார்.

எதற்காக வெட்டவெளி பாதையில்
பனியில் நின்றிருக்கிறாய்
சளி பிடிக்கப் போகிறது ஆஞ்சநேயா!

அனுமனுக்கே வெட்டவெளியில் நின்றால் சளி பிடிக்கும் என்று ஆன்மீகவாதியே வருத்தப்படுவது சிறப்பு.

விடியல் பனிக்குளிர்
மலர்ந்த பூக்களின் அழகு
இரசிக்கும் வண்ணத்திகள்!

சப்பானியக் கவிஞர்கள் போல இயற்கையை பாடுவதில் தமிழகக் கவிஞர்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை மெய்ப்பிக்கும் விதமாக மார்கழி மாதத்தில் இயற்கையை ரசித்து ரசித்து வடித்த ஹைக்கூ நூறு இன்ப ஆறு!

வண்ணத்துப்பூச்சிகளுக்கு, ‘வண்ணத்திகள்’ என்ற புதிய சொல்லாட்சியைப் பயன்படுத்தி இருப்பது சிறப்பு.

யார் கண்டுகளிக்கவோ?
பனிக்காலை வனவெளியில்
தோகை விரித்தாடுகிறது மயில்!

ஆண்மயிலுக்குத் தான் தோகை உண்டு. கானகத்தில் அருகே இருந்த பெண்மயில் கண்டுகளிக்கவே ஆண்மயில் தோகை விரித்து ஆடும். ஓரமாக இருந்த பெண்மயில் கவிஞரின் கண்களுக்குத் தென்படவில்லை போலும்.

மார்கழி குளிர்
பதுங்கி உறங்குகிறது
போர்வைக்குள் குழந்தை!

மார்கழி மாதக் குளிரில் குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் காலையில் எழ மனம் இருக்காது. குழந்தையையும் அதன் உறக்கத்தையும் காட்சிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளார்.

பள்ளியெழுச்சிப் பாடி எழுப்பினாலும்
குளிருக்குப் பயந்து மீண்டும்
துயில் கொள்கிறார் எம்பெருமான் !

குழந்தைகள், பெரியவர்கள் மட்டுமல்ல, கடவுளுமே குளிருக்குப் பயம் கொள்கிறார் என்று ஆன்மிகவாதியே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் எள்ளல் சுவையுடன்.

குளமெல்லாம் பிளாட்டாகி விட்டது,
எங்கே மார்கழி நீராடுவாய்
மாலே மணிவண்ணா! கண்ணா!

குளமெல்லாம் ஆக்கிரமிப்பாகி கல்கட்டிடங்களாகிக் காட்சி தரும் அவலத்தை கடவுளிடம் முறையிடுகின்றார் கவிஞர்.

எங்கே பிறந்தாய் என்று சந்தேகம்?
இன்னும் தீர்ந்தபாடில்லை
தீர்வு சொல்ல வருவாயா ராமா?

இராமர் பிறந்த இடம் தொடர்பான வழக்கு இன்னும் முடிந்தபாடில்லை, தீர்ப்பு வந்தபாடில்லை, சமரசமும் ஏற்படவில்லை. ராமருக்குக் கோயில் அயோத்தியில் கட்டுவோம் என்று சிலர் இன்னும் அரசியல் செய்து வருகின்றனர். பாபர் மசூதியைத் திரும்பவும் அதே இடத்தில் கட்டுவோம் என்று அவர்கள் சொல்லி வருகின்றனர். பிரச்சனை முடிந்தபாடில்லை.

இராமனையே அழைக்கின்றார் தீர்வு சொல்ல வருக என்று. ஒருவேளை இராமர் வந்தாலும் என்ன சொல்வார் என் பெயரில் வன்முறைகள் வேண்டாம், எனக்கு இந்தியா முழுவதும் 7000 கோயில்கள் உள்ளன, போதும், புதிதாக ஒரு கோயில் வேண்டாம் என்றே சொல்வார். எந்தக் கடவுளும் வன்முறையை விரும்ப மாட்டார் என்பதை எல்லோரும் உணர வேண்டும். மதவெறி மாய்ந்து மனிதநேயம் பிறக்க வேண்டும் எனபதே மனிதகுல ஆர்வலர்களின் விருப்பமாகும். இவ்வாறு பல சிந்தனைகளை விதைத்தது ஒரு ஹைக்கூ.

கோதை பிறந்த ஊர் வில்லிப்புத்தூர்
கம்பீரக் கோபுரச் சின்னம் தான்
தமிழக அரசின் இலச்சினை !

தமிழக அரசின் இலச்சினையாக வில்லிபுத்தூர் கோவில் கோபுரம் இடம்பெற்றுள்ள பொதுஅறிவுத் தகவலையும் ஹைக்கூவில் வழங்கி உள்ளார். இதைவிட பெரிய கோபுரங்களான திருச்சி ஸ்ரீரங்கம் கோபுரமோ, மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் தெற்குக் கோபுரமோ இடம்பெறாமல் இவற்றை விட சிறிய கோபுரமான வில்லிபுத்தூர் கோபுரம் இடம்பெற்று இருப்பது விந்தை தான். நல்ல வாய்ப்பு தான்.

வன்முறை நீங்கி அமைதி நிலவட்டும்
அன்புமயமாய் பிரபஞ்சம் செழிக்கட்டும்
இன்ப நலம் பெற்று வாழட்டும் உலகம்!

இலக்கிய ஆர்வலர்கள் அனைவரின் விருப்பமும், உலகில் சாதிமத, இன சண்டைகள் அடியோடு ஒழிய வேண்டும். போர் என்பது இனி வரவே கூடாது. உலகம் முழுவதும் அமைதி நிலவ வேண்டும். கவிஞர் ந.க. துறைவன் அவர்களின் ஆசை நிறைவேற வேண்டும். சாந்தி! சாந்தி! சாந்தி!


நன்றி

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (20-Oct-17, 9:01 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 117

சிறந்த கட்டுரைகள்

மேலே