தமிழ் மொழி நண்பர்கள்

தமிழ் மொழி நண்பர்கள்

மருத மலை கற்பூர ஆரத்தி முருகனுக்கு காட்டப்பட்டது. முருகன் முகம் என்னை பார்த்து புன்முறுவல் காட்டுவது போல எனக்கு தோன்றியது. கண் மூடி ஒரு நிமிடம் அமைதியாக நின்றேன். பக்கத்திலிருந்த என் மனைவி கற்பூர ஆரத்தியை எடுக்க என்னை தட்டியவுடன் நான் கண் விழித்து கற்பூர ஆரத்தியை எடுத்து கண்ணில் ஒற்றினேன். அரசியலையும் விட்டாயிற்று, அடுத்து என்ன வேலை கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறாய் இறைவா? மனதுக்குள் வேண்டிக்கொண்டு மனைவியுடன் வெளியே வந்தேன். செல் போன் கிண் கிணித்தது. பேசியவள் என் மகள். அப்பா உங்களைத்தேடி உங்கள் நண்பர் “சென்னியப்பன்” என்பவர் வந்திருக்கிறார் என்றாள். அவரை வீட்டிலேயே இருக்கச்சொல். இப்பொழுதே கிளம்பி வருகிறோம், மனைவியுடன் கார் இருக்குமிடம் நோக்கி சென்றேன்.
“பல்கலைக்கழகம்” தமிழ் ஆராய்ச்சித்துறை வகுப்பில் பேராசிரியர் “இலக்கிய வரலாறு” பாடத்தை முடித்து விட்டு மெல்ல வெளீயேறினார்.அத்துடன் வகுப்பும் முடிவதால் நானும் சென்னியப்பனும் கல்லூரியிலிருந்து வெளியேறி ஹாஸ்டல் செல்லும் பாதையில் நடக்க ஆரம்பித்தோம். சுற்றிலும் மாணவ மாணவிகள் தன் கல கலப்பு பேச்சால் சூழ்நிலையை சுறு சுறுப்பாக்கினர். மாலை வேறு ஆகி விட்டதால் வீடு சேரும் வேகம் மாணவர்களிடையே காணப்பட்டது. நானும் சென்னியப்பனும் தமிழின் மீது பற்றுக்கொண்டு இளங்கலை முதல் இப்பொழுது வரை ஒன்றாக படித்துக்கொண்டு வருகிறோம். இருவரும் ஒன்றாக இருந்தாலும் எதிர் எதிர் கருத்து கொண்டவர்கள். நான் எதிலும் தீவிரமாக செயல்படுபவன். சென்னியப்பன் நிதானமாக செயல்படக்கூடியவன். ஆனாலும் அவரவர் கருத்துக்களை மதித்து நல்ல நட்புடன் நடந்து கொண்டோம். அன்றைய கால கட்டத்தில் “தமிழின் பெயரால் தீவிர அரசியல் புயல் தமிழ் நாட்டில் வீசிக்கொண்டிருந்தது. நான் தமிழின் மீது தீவிர ஆர்வம் கொண்டிருந்தேன். சென்னியப்பன் கூட “தாய் மொழி” வேறாக இருந்தாலும் தமிழின் மீது இவ்வளவு ஆர்வமாக இருக்கிறாயே? என்று கிண்டல் செய்வான். ஆனால் சென்னியப்பன் வித்தியாசமானவன், தமிழின் மீது பற்று கொண்டாலும் மற்ற மொழிகளை கற்று கொள்வதில் ஆர்வம் கொண்டவன். இப்பொழுது கூட ஹாஸ்டல் போன பின் தனது மலையாள நண்பர்களுடன் மலையாள இலக்கியத்தை பற்றி பேச போய் விடுவான். அதே போல் எந்த மொழி நண்பர்களையும் விட மாட்டான். அந்தந்த மொழிகளின் இலக்கியத்தை பற்றி அவர்களிடம் தெரிந்து கொள்ள ஆசைப்படுவான். நான் கூட அவனை கிண்டல் செய்வேன். உனக்கு கடைசியில் தமிழே மறந்து விடும் என்று. நாங்கள் எதிர்காலத்தில் தமிழ் வளர்ச்சிக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று பேசிக்கொள்வோம்.
ஒரு நாள் என் உறவினர் கொடுத்த ஆலோசனைப்படியும் அவரின் வற்புறுத்தலினாலும் ஒரு முடிவு எடுக்க வேண்டியதாயிற்று. அதை என் நண்பனிடம் சென்று “சென்னியப்பா” நாளை நம் பல்கலை முன்னால் நடக்க போகும் போராட்டத்திற்கு என்னை தலைமை ஏற்க சொல்லியிருக்கிறார்கள் நானும் ஒப்புக்கொண்டுவிட்டேன் என்றேன். நான் ஏன் போராட்டத்தில் பங்கு கொள்கிறேன் என்பதை ஒவ்வொன்றாக எடுத்து கூறினேன். அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்து விட்டு அமைதியாக “சினிவாசா” மொழி நமக்கு முக்கியம்தான், ஆனால் போராட்டம் மட்டுமே அதற்கு தீர்வாகிவிடாது, மேலும் இப் போராட்டம் வேறோரு இலக்கை நோக்கி செல்கிறது இந்த அரசியலில் உன்னால் தாக்கு பிடிக்க முடியாது. புரிந்து கொள் என்றான். நான் வழக்கம்போல என் கருத்தில் தீவிரமாக இருந்ததால் அந்த பேராட்டத்தில் கலந்து கொண்டேன். மறு நாள் போராட்டம் வன்முறையாக மாறிற்று. போலீஸ் தடியடி, கலவரம் கைது போனறவைகள் அரங்கேறியன. போராட்டத்தின் நோக்கம் மாறிற்று. நான் மற்றும் என்னுடன் கலந்து கொண்ட மாணவர்கள் பல்கலைகழகத்திலிருந்து நீக்கப்பட்டோம். ஆனால் எங்களை போராட்டம் நடத்த சொன்ன இயக்கம் எங்களை அரவணைத்துக்கொண்டு தகுந்த பதவிகளை வழங்கிற்று.
என் வாழ்க்கை மாறிற்று. இப்பொழுது நான் நல்ல தமிழ் மேடை பேச்சாளராகி விட்டேன். காலங்கள் உருள ஆரம்பித்து விட்டன. இப்பொழுது எங்கள் இயக்கம் தமிழ் நாட்டை ஆளும் இயக்கமாகிவிட்டது. நானும் அதன் அங்கமாகி இன்று மந்திரி என்ற ஸ்தானத்தை அடைந்து விட்டேன். ஒரு முறை மந்திரி என்ற முறையில் ஒரு தமிழ் இலக்கிய விழாவிற்கு என்னை தலைமை விருந்தினராக அழைத்திருந்தார்கள். இப்பொழுதெல்ல்லாம் மேடை தமிழை தவிர இலக்கிய தமிழை மறந்திருந்தேன். இருந்தாலும் மந்திரி அல்லவா ! அந்த விழாவை ஆரம்பித்து வைத்து விட்டு அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கேட்பதற்காக மேடையை விட்டு இறங்கி கீழே உட்கார்ந்தேன். அப்பொழுது சென்னியப்பனை மேடையில் அழைத்தார்கள். அவன் என்னை நோக்கி வந்து கை கூப்பி விட்டு மேடை ஏறினான். அடடா ! இவனை மறந்து விட்டேனே, இருந்தாலும் இவன் என்னை கவனித்திருக்கிறான். நிச்சயம் என்னை பார்த்து பொறாமை பட்டிருக்கமாட்டான். ஆனால் நான் மனதுக்குள் “பார்த்தாயா” என் வளர்ச்சி எதுவரை வந்துள்ளது என்று கர்வப்பட்டது. சென்னியப்பன் தமிழ் இலக்கியத்தோடு மற்ற மொழி இலக்கியத்தை ஒப்பிட்டு பேசினான். நல்ல ரசனையாக இருந்தது. அதற்குள் எனக்கு தொலை பேசி அழைப்பு தலைமை செயலகத்திலிருந்து வந்ததால் நான் கிளம்ப வேண்டியதாயிற்று.
மீண்டும் ஒரு கால சுழற்சி எங்கள் இயக்கம் ஆட்சியை இழந்தது. எனக்குட்பட்ட தொகுதியிலேயே எனக்கு போட்டிகள் வந்தன. என்னை விட சிறந்த பேச்சாளர்கள் உருவாகி விட்டனர். பழைய “மேடைத்தமிழ்” பேச்சு மறக்கப்பட்டு புது மாதிரியான மக்களை மயக்கும் பேச்சுக்கள் தோன்ற ஆரம்பித்து விட்டன. என் மேடைத்தமிழ் மக்களுக்கு போரடிக்க ஆரம்பித்து விட்டது. இந்த உண்மை உணர்வதற்குள் நான் என் அரசியல் வாழ்க்கையின் அடி மட்டத்திற்கு வந்து விட்டேன். இப்பொழுது என்னை யாரும் அரசியல் மேடைக்கு கூப்பிடுவதில்லை. நானும் மெல்ல மெல்ல அரசியலை விட்டு ஒதுங்க ஆரம்பித்தேன்.
இதற்கிடையில் ஒரு நாள் பத்திரிக்கையில் செய்தி ஒன்று வந்திருந்தது. சென்னியப்பனுக்கு மலையாள இலக்கிய உலகில் சிறந்த மொழி மாற்ற நாவலுக்கான பரிசு அறிவிக்கப்பட்டிருந்த்து. இதே போல் பல மாநில இலக்கிய உலகம் இவனை அழைத்து கெளரவைத்திருந்ததை செய்திகளாக பத்திரிக்கைகளில் தெரிந்து கொண்டேன். எனினும் நான் அவனை தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனால் முடியவில்லை. இப்பொழுது ஏதோ ஒரு நாடு அவனை அழைத்திருப்பதாக செய்தி !.
எனக்காக காத்திருந்தான் சென்னியப்பன்.இருவரும் சந்தித்து பல வருடங்கள் ஆகி விட்டன. அதற்குள் எத்தனை மாற்றங்கள். உருவத்திலும் சரி வாழ்க்கையிலும் சரி. இருவரும் கை கோர்த்துக்கொண்டு பழைய கதைகள் பேசினோம். என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் அவனை அறிமுகப்படுத்தி இடையில் ஏற்பட்ட பிரிவுகளை சொல்லி வருத்தப்பட்டோம். இருவரும் சாப்பிட்டவுடன் அவனை மேல் மாடிக்கு கூட்டி சென்றேன். சிறிது நேரம் கண்ணயரட்டும் என்று.
அவனோ மேலே வந்தவுடன் சினிவாசா எனக்கு ஒரு உதவி செய்வாயா? என்று கேட்டான். நான் வியப்புற்றேன். நான் பதவியில் இருக்கும்போது அவன் நினைத்திருந்தால் எத்தனையோ உதவிகள் கேட்டிருக்க முடியும். அப்பொழுதெல்லாம் கேட்காத உதவி இப்போது என்ன கேட்கிறான்? சொல் சென்னியப்பா செய்கிறேன். நீ மீண்டும் உன் தமிழ் இலக்கியத்துக்குள் வரவேண்டும் என்றான். நான் புரியவில்லை என்றேன். நான் அரசு கலை கல்லூரியில் தமிழ் துறைக்கு தலைவராகிவிட்டதால் என்னால் மலேசிய தமிழ் இலக்கிய சங்கம் சார்பில் கொடுத்த “அறுபடை வீடுகளாக முருகன் கோயில்களில் ஏற்பட்ட தமிழ் வளர்ச்சி” என்னும் ஆராய்ச்சிக் கட்டுரையை சமர்ப்பிக்க முடியாமல் உள்ளது. தயவு செய்து நீ இந்த பொறுப்பை ஏற்றுக்கொள், இதற்கான அனைத்து செலவுகளையும் அரசாங்கமே ஏற்றுக்கொள்ளும் என்ன சொல்கிறாய்? தவறாக நினைக்காதே, நீ இப்பொழுதெல்லாம் தீவிர அரசியலில் ஈடுபடுவதில்லை என்று கேள்விப்பட்டுத்தான் இந்த உதவியை கேட்கிறேன் என்ன சொல்கிறாய்? செலவுகளை பற்றி நான் கவலைப்படவில்லை. நல்ல வசதியுடன் உள்ளேன். ஆனால் இந்த ஆராய்ச்சிக்கு என் கல்வித்தகுதி ஒத்து வருமா? இந்த ஆராய்ச்சிக்கு கல்வித்தகுதியை அவர்கள் வற்புறுத்தவில்லை, என்றாலும் நீ உன் ஆராய்ச்சி படிப்பை முடித்து விடு. ஏனெனில் எதிர்காலத்தில் நம் தமிழுக்கு ஏதேனும் செய்ய வேண்டும்.
“மருதமலை முருகனின் புன்னகை முகம்” உனக்கொரு வேலை வைத்திருக்கிறேன் என்று சொல்வதாக புரிந்து கொண்டு கண்களை மூடி அவனை மனதுக்குள் தியானித்தேன்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (2-Nov-17, 11:15 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 327

மேலே