தலைமேல் என் தாரகை
உருபெறும் வரையில்
கண்ணே உனைசுமக்க...!
கருவறை எனக்கில்லை..
கடவுளை நான்சபிக்க..!
இறையருள் வரமே
இல்லறத்து உரமே....உனை
தோள்மீது சுமந்தே
நாள்எல்லாம் மகிழ்கிறேன்...!
உன்பிஞ்சு பாதங்கள்
என்மார்பில் வைரங்கள்...!
தலைமேல் மழலைதெய்வம்
தரைதொடா உவகையில் நான்...!
பிஞ்சுபாதம் என் நெஞ்சுமேலே-இன்னும்
கொஞ்சம் உரசிட கூடாதா?
நெஞ்சம் நிறைந்த பாரமெல்லாம்
பஞ்சென பறக்குது போதாதா?
தலைமேல் சாய்ந்தாடும்
தங்க தாமரையே...!
உந்தை உள்ளம் கரையுதடி
உன்சிறு கால்விரல் அழகினிலே..!
சின்னப்பூ தோள்மேல் சிரிக்கையிலே
தந்தைஎன் முகத்திலே மத்தாப்பு
பெத்துவளர்த்த என்ஆத்தாவா உன்னை
தூக்கி நடப்பதேபெரும் மகிழ்வு...!