கண்ட நாள் முதலாய்-பகுதி-30

....கண்ட நாள் முதலாய்....

பகுதி-30

அரவிந்தனும் துளசியும் அந்த இடத்தில் இருந்து வெளியே வரவும்,அர்ச்சனா அவ்விடத்திற்கு வந்து சேரவும் சரியாக இருந்தது..

"அட கடவுளே..நீங்க இரண்டு பேரும் இங்கதான் இருந்தீங்களா..??இவ்வளவு வருசத்தில இந்தத் தோட்டம் ஏன் இவ்வளவு பெரிசா இருக்குன்னு இன்னைக்குத்தான் ரொம்ப பீல் பண்ணேன்..."

"உங்க இரண்டு பேரையும் தோட்டம் பூராத் தேடியே என் கால் இரண்டும் நொந்து போச்சு.."

"அப்படியாச்சும் உன் குண்டுப் பூசணிக்காய் உடம்பு குறையுதான்னு பார்ப்போம்..."என்று அரவிந்தன் அர்ச்சனாவை வம்பிழுக்க,

"யாருடா குண்டுப்பூசனிக்காய்...?"என்றவாறே பொங்கி எழுந்த அர்ச்சனாவும் கீழே கிடந்த குச்சியொன்றைத் தூக்கிக் கொண்டு அவனைத் துரத்தத் தொடங்கிவிட்டாள்..

அவளது அடியிலிருந்து தப்பி அங்குமிங்குமாய் ஓடிக் கொண்டிருந்தான் அரவிந்தன்....அவன் சிறுபிள்ளை போலே அர்ச்சனாவோடு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்ததையே விலகி நின்று ரசித்துக் கொண்டிருந்தாள் துளசி...

அவளை மறந்து அவள் அரவிந்தனையே பார்த்துக் கொண்டிருந்தாள்....அவனது இதழ்களில் எப்போதும் குடியிருக்கும் புன்னகை அவளுள் ஏதேதோ மாற்றங்களை எல்லாம் பண்ணத் தொடங்கியிருந்தது...

அவள் அவனது சின்னச் சின்ன அசைவுகளையும் ரசித்துக் கொண்டிருக்க,அதை அவள் அறியாமலேயே பார்த்து மனதிற்குள் புன்னகைத்துக் கொண்டிருந்தான் அரவிந்தன்...

அப்போது அரவிந்தனைத் துரத்தித் துரத்திக் களைத்துப்போன அர்ச்சனாவும்,

"இதுக்குமேல என்னால முடியாதுடா சாமி...ஆளை விடு.."என்று அருகில் இருந்த மரக்குற்றியில் அமர்ந்து கொண்டாள்...

"அப்படி வா வழிக்கு...யாருக்கிட்ட..??.."என்றவாறே சட்டைக் காலரைத் தூக்கிப் பெருமைப்பட்டுக் கொண்டான் அரவிந்தன்...

"ரொம்பத்தான் ஓவரா ஆடாதீங்க தம்பி...சாப்பாடு மட்டும் உள்ள போகட்டும்...அப்புறமா உன்னைக் கவனிச்சுக்கிறேன்.."

"அதையும் பார்க்கலாம்...ஆமா இன்னைக்கு என்ன இடையிலேயே மட்டம் போட்டுட்டியா...??.."

"எல்லாரும் உன்னை மாதிரியே இருப்பாங்களா...இன்னைக்கு ஈவினிங் லெக்சேர்ஸ் கான்சல் ஆகிட்டுது...அண்ணியோட சமையல் வாசம் வேற அங்க வரைக்கும் வீசிச்சுதா..?அதான் ஓடோடி வந்துவிட்டேன்..."

"பார்த்து பார்த்து நிறைய ஐஸ்ஸை உன் அண்ணி தலையில வச்சிடாதம்மா...அப்புறம் உன் அண்ணிக்கு சளி பிடிச்சிடப்போகுது..."

"அவன் கிடக்கிறான் அண்ணி...நீங்க வாங்க...நாங்க போய் சாப்பிடலாம்..."

"என்னை விட்டிட்டு என் பொண்டாட்டி வரமாட்டா...நீ வேணும்னா இடத்தைக் காலி பண்ணு..."

"இங்க பார்றா...ரொம்பத்தான் பெருமைப்பட்டுக்காதையுங்கோ சேர்...என்னோட அண்ணி நான் கூப்பிட்டா வருவாங்க...என்ன அண்ணி கரெக்டுதானே...??.."

துளசிக்கும் அப்போது அரவிந்தனை வம்பிழுக்க வேண்டும் போலே இருந்தது...

"ஆமா...ஆமா...நீ வா அர்ச்சனா...நாம போய் சாப்பிடலாம்...யாரு வந்தா நமக்கென்ன..??..."என்று அரவிந்தனை ஓரக்கண்ணால் நோட்டமிட்டவாறே கூறினாள்...

"அப்படிப் போடுங்க அண்ணி....இப்போ என்ன சொல்லி சமாளிக்கப் போறிங்க சேர்...??.."

ஆனால் அவனோ அலட்டிக் கொள்ளாமல்,துளசியின் தோளைச் சுற்றிக் கைகளைப் போட்டவன்..

"துளசி எவ்வழியோ...இந்த அரவிந்தனும் அவ்வழியே.."என்றவாறே துளசிக்கு மட்டும் தெரியும் படியாக கண்ணடித்துக் கொண்டான்...

அவனது கையணைப்பில் துளசி எதை உணர்ந்தாலோ,அவள் அவனிடத்தில் இருந்து விலகிக் கொள்ள முயலவில்லை...முகத்தில் புன்முறுவல் பூக்க பார்வையாலேயே அவனை வருடிக் கொடுத்துக் கொண்டாள்...

"ம்க்கும்"என்று தொண்டையைச் செருமி அவர்களை நடப்பிற்கு கொண்டு வந்த அர்ச்சனா,

"உங்க ரொமான்ஸ்க்கு கொஞ்ச நேரத்திற்கு ஒரு என்ட்டு காட்டை போட்டிட்டு என் பக்கமும் கொஞ்சம் கருணை காட்டினா நல்லாயிருக்கும்...பசி வயித்தைக் கிள்ளுது..."

"ஹா...ஹா....சரி வாங்க போகலாம்..."

அவர்கள் மூவரும் வீட்டினுள் நுழையவும் அர்ஜீனும் படிகளில் கீழிறங்கி வந்து கொண்டிருந்தான்...அரவிந்தனின் கையணைப்பில் துளசியைக் கண்டவனின் உள்ளம் வெடித்துச் சிதறியது...உள் எழுந்த வலிகள் அனைத்தையும் தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டவன்,உணவருந்த அனைவரோடும் அமர்ந்து கொண்டான்...

துளசி அனைவருக்கும் பரிமாற ஆயத்தமாகவும்,

"நீயும் உட்காரும்மா...எல்லாரும் சேர்ந்தே சாப்பிடலாம்..."

அனைவரும் தமக்குத் தேவையானதை தாமே எடுத்துக் கொள்ள,துளசியும் தன் உணவினைப் போட்டுக் கொண்டு அரவிந்தனின் எதிரே அமர்ந்து கொண்டாள்...

எதிரே அமர்ந்திருந்த துளசிக்கு கண்களாலேயே சைகை காட்டியவன்,அவள் சமைத்த உணவினை ருசி பார்க்கும் வேலையில் இறங்கினான்...ஒரு பிடியினை எடுத்து வாயில் வைத்தவன் அதன் சுவையில் ஓர் நிமிடம் தன்னை மறந்துதான் போனான்...

அவன் மட்டுமில்லை மொத்தக் குடும்பமுமே அவளின் கைப்பக்குவத்தில் வியந்துதான் போனார்கள்...அனைவருமே அவளைப் பாராட்டித் தள்ள...ஓரக் கண்ணால் அரவிந்தனைப் பார்த்து "எப்படி.."என்று புருவத்தை உயர்த்திக் கேட்டவள்,இல்லாத காலரை தூக்கி விட்டுக் கொண்டாள்...

அவனும் பதிலிற்கு கையை மடக்கி "சமையல் சூப்பர்"என்று சைகை காட்டியவன்,கண்களாலேயே அவளோடு கதை பேசத் தொடங்கினான்..

மொத்தக் குடும்பமும் அவர்களின் காதல் விளையாட்டைக் கண்டாலும்,கண்டும் காணாதது போல் அவரவர் சாப்பாட்டிலேயே கண்ணாயிருந்தார்கள்...ஆனாலும் ஒருவருக்கொருவர் கண் ஜாடை காட்டி அவர்களுக்குள்ளேயே புன்னகைத்துக் கொள்ளவும் தவறவில்லை...

ஆனால் அங்கிருந்த ஒருவனால் மட்டும் அதை ரசிக்க முடியவில்லை....சொல்ல முடியாத வலி அவனது மனதினைக் கிளற பாதியிலேயே சாப்பாட்டை முடித்துக் கொண்டு எழும்பினான் அர்ஜீன்...

"என்னடா எழும்பிட்ட...கோப்பையில வச்சதெல்லாம் அப்படியே இருக்கு..??.."

"இல்லைமா போதும்...நானும் கிளம்ப வேண்டிய நேரம் வந்திட்டுது...போய் ரெடியாகிட்டு வாறேன்..."என்றவாறே அங்கிருந்து அகன்றுவிட்டான்...

அவன் கிளம்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று சொன்னவுடனே மற்றவர்களும் பாதியிலேயே உணவினை முடித்துக் கொண்டார்கள்...இருந்த உற்சாக மனநிலை போய் அனைவர் மனங்களிலும் சோகம் வந்து ஒட்டிக் கொண்டது...

அனைவரும் கீழே அர்ஜீனுக்காய் காத்திருக்க,அரவிந்தனும் அர்ச்சனாவும் அவனைத் தேடி மேலே சென்றார்கள்...அவன் அறையினைத் தட்டி உள்ளே நுழைந்து கொண்டதுமே அர்ச்சனா விக்கி விக்கி அழத் தொடங்கிவிட்டாள்...

"ஏய் லூசு...எதுக்குடி இப்போ இப்படி அழுகிற...?உன் மூஞ்சிய எல்லாம் சும்மாவே பார்க்க முடியாது...இதில இப்படி வேற அழுதன்னா சொல்லவே வேண்டாம் போ..."என்று அவளை சிரிக்க வைக்க முயன்றவன்,அதிலும் தோல்வியையே தழுவிக் கொண்டான்...

அவளை ஆறுதல்படுத்தியவாறே கண்ணீரைத் துடைத்துவிட்டவன்,

"என்ன நீ..நான் என்னமோ புதுசா போற மாதிரி அழுதுகிட்டு இருக்க,நான் இப்படி அடிக்கடி போறதுதானே...இதுக்குப் போய் யாராச்சும் அழுவாங்களா...?..."

"தெரியலடா...எப்பவுமே நீ போனா,இரண்டு கிழமையோ ஒரு மாசமோ,உடனேயே திரும்பி வந்திடுவ...ஆனால் இந்த முறை அப்படியில்லையே...நீ என்னமோ எங்களை விட்டு ரொம்ப தூரமாய் போற மாதிரி இருக்குடா..."

"இங்க பார்றா...என் தங்கச்சி கூட பெரிய மனுசி மாதிரி பேசுறதை..."

"எனக்கும் இருபத்தியிரண்டு வயசு ஆச்சு...நான் ஒன்னும் சின்னக் குழந்தையில்லை.."

"ஹா...ஹா....உனக்கு எவ்வளவு வயசானாலும் நீ என்னைக்குமே எங்களுக்கு குழந்தைதான்..."

"ஒரு வருசம் முடியுறதுக்குள்ள ஓடோடி வந்திடுறேன்...என்னாலையும் உங்க எல்லாரையும் விட்டிட்டு ரொம்ப நாளைக்கு இருக்க முடியாது.."என்று சொன்னவின் கண்களும் கலங்கத்தான் செய்தது..

ஒருவழியாக அர்ச்சனாவைச் சமாளித்து சிரிக்கச் செய்தவன்,அனைவரிடமிருந்தும் விடைபெறத் தயாரானான்...

"என் மனசில இருக்கிறதையும் அர்ச்சனாவே சொல்லிட்டாள்...அவளால சொல்ல முடிஞ்சதை என்னால சொல்ல முடியலடா...அது ஒன்னுதான் வித்தியாசம்...மற்றபடி உன்னை நாங்க எல்லாருமே ரொம்ப மிஸ் பண்ணுவோம்..சீக்கிரமா வேலையை முடிச்சிட்டு கிளம்பி வந்திடு..."என்றவாறே அர்ஜீனை அணைத்துக் கொண்டான் அரவிந்தன்...

அதன் பின் கீழே வந்து அனைவரிடமும் விடைபெற்றுக் கொண்டவன்...தயாராகயிருந்த காரினில் ஏறி அமர்ந்து கொண்டான்...கார் வீட்டின் வாசலைத் தாண்டும் வரை திரும்பி அனைவருக்கும் கையசைத்துக் கொண்டே வந்தவன்,

"கூடிய சீக்கிரமே என் மனசில இருக்கிற எல்லாத்தையும் மறந்திட்டு பழைய அர்ஜீனா மாறி வருவேன்..."என்று மனதில் நினைத்துக் கொண்டான்...அவனது மனம் புதிய மாற்றங்களை நோக்கிய பயணத்தை தேடி பயணிக்கத் தொடங்கியது...


தொடரும்....

எழுதியவர் : அன்புடன் சகி (11-Nov-17, 3:04 am)
பார்வை : 661

மேலே