கற்புடைமகளிர் - கலி விருத்தம்
ஒத்த பொருளால் உறுதிசெய் வார்களை
எத்திறத் தானும் வழிபட்(டு) ஒழுகலின்
பைத்தர(வு) அல்குல்பொன் பாவையின் நல்லவர்
பத்தினிப் பெண்டிர் படியும் புரைப. 59 வளையாபதி
பொருளுரை:
நச்சுப் பையினையுடைய பாம்பினது படம்போன்ற அல்குலையுடைய பொன்னாலியன்ற பாவை போலும் அழகையுடைய கணிகை மகளிர் தம்தகுதிக் கேற்ற பொருள் கொடுத்துத் தமது வாழ்க்கையினை நிலைபெறுத்துகின்ற ஆடவர்களை எல்லா வழிகளானும் வழிபட்டு நடத்தலாலே கற்புடை மகளிர் தன்மையையும் ஒப்பர் என்பதாம்.
விளக்கம்:
கணிகை மகளிர், தாம் விரும்புகின்ற பொருளைத் தமது தகுதிக்கேற்ப வழங்குகின்ற ஆடவர்களை எவ்வாற்றானும் வழிபாடுசெய்து பேணி யொழுகுதலாலே அவர்கள், கற்புடை மகளிரையும் ஒப்பர் எனப்பட்டது.