உன் குரல் கேட்டால் கவிஞர் இரா இரவி

உன் குரல் கேட்டால் ! கவிஞர் இரா .இரவி !
உன் குரல் கேட்டால் நான் திரும்பவும்
உயிர்த்தெழுவேன் உயரம் தொடுவேன் !

அலைபேசியில் ஒலி வரும்போதெல்லாம்
அழைப்பது நீயோ என்று எடுப்பேன் !

எடுக்கும் ஒவ்வொரு முறையும் ஏமாற்றமே
எனக்கு மிஞ்சியது ஏக்கமே எஞ்சியது !

நான் உன்னை அழைத்துப் பேசலாமென்றால்
நின் எண் என் வசம் இல்லை ஆனால் !

உன்னிடம் உண்டு எனது எண்
நீ நினைத்தால் ஒரே ஒரு முறை !

மறக்க நினைத்தாலும் முடிவதில்லை
மனதில் நினைவுகள் வந்து மோதுகின்றன !

மூச்சு உள்ளவரை உன் நினைவு
மூளையின் ஒரு ஓரத்தில் இருக்கும் !

பசுமையான நினைவுகள் எனக்கு
பகலிலும் வந்து போகின்றன !

கல் நெஞ்சம் கேள்விப் பட்டதுண்டு
கள்ளி உனக்கோ இரும்பு நெஞ்சம் !

இரும்பு கூட தீயிலிட்டால் வளையும்
என்னவளே நீ எப்போது வளைவாய் !

என்றாவது நீ அலைபேசியில் அழைப்பாய்
என்ற நம்பிக்கை எனக்கு என்றும் உண்டு !

இரக்கம் கொண்டு என்னை அழைக்கலாம்
ஒரே ஒரு முறை அழைத்திடுவாய் !

ஒரே ஒரு முறை உன் குரல் கேட்டால்
உள்ளமும் உடலும் பூரிப்பு அடையும் !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (11-Nov-17, 10:35 pm)
பார்வை : 131

மேலே