வண்டு - கலி விருத்தம்
முருக்கலர் போற்சிவந்(து) ஒள்ளிய ரேனும்
பருக்கா(டு) இல்லவர் பக்கம் நினையார்
அரும்பிள மென்முலை அம்சொல் அவர்தாம்
வரிச்சிறை வண்டின் வகையும் புரைப. 62 வளையாபதி
பொருளுரை:
கோங்கரும்பு போன்ற இளமையுடைய மெல்லிய முலையினையும் அழகிய சொற்களையும் உடைய அக்கணிகை மகளிர், ஆடவர் முண்முருக்கமலர் போன்று சிவந்து ஒளியுடைய உடம்பினை உடையரேனும் பொருட்பெருக்கம் இல்லாத வறியவர்களிடம் கருத்து வைத்தலிலர் ஆகலின், அக்கணிகை மகளிர் வரிகளமைந்த சிறகினை உடைய வண்டினங்களையும் ஒப்பாவர் எனப்பட்டது.
விளக்கம்:
முருக்கு – முண்முருங்கை, ஒள்ளியர் – ஒளியுடையர், முருக்கலர் - மேனிக்கு நிறவுவமை. பருக்காடு – பருத்தல், பெருக்கம், பருக்காடு - காடு,
கணிகை மகளிர் பொருளில்லார் பேரழகுடையரேனும் கருதியும் பாரார் ஆதலால், பூவாத கொடிகளை நோக்காத வண்டுகளையும் ஒப்பாவர்.