பசுமை பாரதம்
பசுமை விடியல் - ஒரு அறிமுகம்
பூமியில் காணப்படும் செடி, கொடி, மரங்கள் முதல் மிருகங்கள், பறவைகள், பூச்சி இனங்கள் போன்றவற்றுடன் மனிதனும் இணைந்த இணைப்பே பல்லுயிரியம் (Bio diversity) எனப்படுகிறது. இவை அனைத்தும் சரிவிகிதத்தில் இருக்கவேண்டும்.
ஆனால்...
மனிதனை தவிர மற்றவை தங்கள் பங்கை சிறப்பாக செய்து வரும் போது 'ஆறறிவு படைத்த மனிதன்' தன் சுயநலத்திற்காக கண்டபடி அனைத்தையும் அழித்துக்கொண்டு வருகிறான். சமன்பாட்டில் குறைவு ஏற்படும் போது இயற்கை குழப்பம் அடைந்து பல மாறுபாடுகளை ஏற்படுத்துகிறது. அதுதான் ஓசோனில் ஓட்டை, புவி வெப்பமடைதல் என்று தொடரும் பல்வேறு ஆபத்துகள்...
உலகில் கார்பன் வாயுவின் அளவு கூடிக்கொண்டே செல்கிறது...இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்...ஆனால் பெரிய நாடுகள் எல்லாம் தங்களை எவ்வாறு பொருளாதாரத்தில் வளர்த்துக்கொள்வது, வளர்ந்த நாடாக பேர் எடுப்பது எப்படி என்ற கவனத்தில்தான் இருக்கின்றன...!
மக்களை பற்றி நாடு அக்கறை கொள்வது ஒரு பக்கம் இருக்கட்டும் ஆனால் மக்களாகிய நமது அக்கறை என்ன ? நம் வீட்டில் ஒரு ஓட்டை என்றால் அப்படியே விட்டு விடுவோமா? அது போலத்தான் நாம் வாழும் பூமி. பூமி ஓசோன் படிவத்தில் ஓட்டை விழுந்திருக்கிறது அதனால் பூமியின் வெப்பம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நம் குழந்தைகளும், அவர்களுக்கு அடுத்த சந்ததியினரும் நன்றாக வாழ நல்ல தூய்மையான பூமியை விட்டுச்செல்ல வேண்டாமா ?! அதற்கு இதுவரை செய்தவை போதாது இன்னும் அதிகமாக, இன்னும் உற்சாகமாக முழு முன்னெடுப்புடன் திட்டமிட்டு செயல் படுத்தபட வேண்டும்...!
இதை குறித்து எனக்குள் ஒரு பெரிய கனவு இருக்கிறது...எந்த ஒரு கனவும் பிறருக்கு பயன் தரக்கூடியதாக இருந்தால் அதை விட வேறு என்ன இன்பம் இருக்க முடியும்...?! என் கனவும் அது போன்ற ஒரு கனவுதான்...!
கனவை நனவாக்க ஒரே அலைவரிசை கொண்ட உள்ளங்கள் இணைந்தது தற்செயல் ...! இதோ இன்று இணையத்தின் மூலம் எங்கள் கரங்களை கோர்த்து இருக்கிறோம்...!
இனி இந்த பசுமை விடியல் எனது மட்டுமல்ல...நமது !!
ஒருநாள் நம் தேசம் பசுமையில் கண் விழிக்கும்...இது வெறும் ஆசை அல்ல...திடமான நம்பிக்கை !!