பிழைக்க தெரிந்த காதல்

பிழைக்கத்தெரிந்த காதல்

காதலை பற்றி என்ன நினைக்கிறாய்? திடீரென்று பாலு கேட்டவுடன் காபி குடித்துக்கொண்டிருந்த எனக்கு புரை ஏறியது. தலையில் தட்டிக்கொண்டேன். உடனே பாலு பார்த்தாயா நான் சீரியசாக கேட்டால் நீ சிரிக்கிறாய் அதனால்தான் புரை ஏறியது, என்று குற்றம் சாட்டினான். அதெல்லாம் இல்லை பாலு திடீரென்று நீ கேட்டதுக்கும் எனக்கு புரை ஏறியதுக்கும் எந்த சம்பந்தமுமில்லை, சமாளித்தேன். சரி..சரி நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதிலே சொல்லவில்லை, ஞாபகமூட்டினான். பாலு நாம வேற ஏதாவது பேசுவோமா? என்றேன். பாலு கோபித்துக்கொண்டான், பார்த்தியா நான் கேட்ட கேள்விக்கு பதிலே வரவில்லை. எனக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை. பாலு நாம வேற ஏதாவது பேசுவோமா என்று சொன்னதை வைத்தாவது புரிந்ததா? அல்லது புரியாதது போல கேட்கிறானா? சரி இவனிடமிருந்து விடுபடவேண்டும், காபி சாப்பிடலாம் என்று இந்த இரவு நேரத்தில் கூப்பிடும் போதே வராமல் இருந்திருக்க வேண்டும். வந்து வகையாக மாட்டிக்கொண்டேன். சரி பாலு நான் என்ன சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்? நேரிடையாகவே கேட்டேன். அசரவில்லை அவன், நீ உன் மனசுல இருக்கறதை சொல்லு நான் தப்பா நினைச்சுக்க மாட்டேன் என்றான். பாலு பைத்தியக்காரத்தனமான வேலைக்கு பேர்தான் காதல். இந்த மாதிரி தத்துப்பித்துன்னு கேள்விய கேட்காம உன் புரொமோசனுக்கான எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணற வேலைய பாரு சொல்லி விட்டு காபிக்கு காசு எடுக்க பர்சை திறந்தேன். சட்டென்று என் கையை பிடித்துக்கொண்டு, அவசரப்படாதே முதல்ல. என்னை பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டான். வசதியாக மாட்டிக்கொண்டேன் என்று மட்டும் புரிந்தது. கிளம்பும் போதே ரூம் மேட் சேகர் சிரித்தான். எனக்கு அப்பொழுது விளங்கவில்லை. இப்போது புரிந்தது. சரி பாலு சீக்கிரம் சொல்லு இப்பவே மணி ஒன்பது ஆகுது தூங்க போகணும், நாளைக்கு நேரமா கிளம்பணும். தூக்கம் வருவது போல கொட்டாவி விட்டேன், அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை அவன்.நீ எதை வைத்து காதலை பைத்தியம் என்கிறாய்? எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. இதற்கெல்லாமா பாடம் நடத்திக்கொண்டிருக்க முடியும்? ஏதோ தோன்றியது சொன்னேன் அவ்வளவுதான்.ஆமா நீ யாரையாவது காதலிக்கிறாயா? கேட்டேன்.
நான் இந்த கேள்வியை கேட்கவேண்டும் என்று எதிர்பார்த்தவன் போல் ரொம்பவும் வெட்கப்பட்டுக்கொண்டான்.இந்த பைத்தியக்காரன் கண்டிப்பாய் இதில் ஈடுபட்டிருப்பான், இல்லாவிட்டால்,மூன்று மாதம் வரை புரோமோசன் பரீட்சை என்று அலைந்து கொண்டிருந்தவன் இப்பொழுது காதலை பற்றி பேசுகிறான். சரி யாரை காதலித்து தொலைக்கிறாய் மனதுக்குள் கேட்டுக்கொண்டு, “கிறாய்” என்று முடித்தேன். உடனே அவன் வெட்கப்பட்டுக்கொண்டே இப்போது சொல்ல மாட்டேன் எல்லாம் முடிந்தபின் சொல்கிறேன், பிகு செய்து கொண்டான். சரி தொலையுது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டுஉன் காதல் வெற்றி பெற வாழ்த்துக்கள் கை குலுக்கி விட்டு சரி போகலாமா? எழுந்தேன்,பாலு சந்தோசத்துடன் எழுந்து அவனேகாபிக்கு பணம் கொடுத்தான். ஒரு மாதம் ஓடி விட்டது, இப்பொழுதெல்லாம் பாலுவை பார்க்க முடியவில்லை, அவரவர்களுக்கு அவரவர் வேலை. நாங்கள் பக்கத்து பக்கத்து அறைகளில் வசித்தாலும் ஒருவரை ஒருவர் பார்ப்பது அதிசயம். ஒவ்வொருவருக்கும் வேலை நேரம் மாறுவதால் சந்திக்க முடிவதில்லை. ஏதேச்சையாக ஒரு நாள் பாலுவை பார்த்த பொழுது முகத்தில் தாடி மீசையுடன் சோகமாக தெரிந்தான். நானே வலிய போய் அவனிடம் என்ன பாலு எப்படியிருக்கிறாய்? என்று கேட்டேன். ம்..ம்..பரவாயில்லை, பதில் சோகத்துடன் வந்தது, என்ன பாலு உடம்பு சரியில்லையா? அக்கறையுடன் கேட்டேன் அதெல்லாம் ஒன்றுமில்லை அப்புறம் பார்க்கலாம் கையை குலுக்கி விட்டு விறு விறுவென சென்று விட்டான். பிற்பாடு அவன் நன்பர்களிடம் விசாரித்ததில் உத்தியோக உயர்வுக்கான தேர்வில் கோட்டை விட்டு விட்டானாம்.
மீண்டும் பாலுவை பார்த்த பொழுது மூன்று மாதங்கள் ஓடியிருந்தது. பையன் பழைய உற்சாகத்தில் இருந்தான். அவனே தேடி வந்து கை குலுக்கினான். எப்படி இருக்கிறாய் என்றேன். நன்றாக இருக்கிறேன் என்றவன் வா காப்பி சாபிடலாம் என்றான். முன்னெச்சரிக்கையுடன் வருகிறேன், ஆனால் காதலை பற்றி கேட்க கூடாது என்றேன். உடனே அவன் வெட்கப்பட்டுக் கொண்டு எனக்கு இன்னும் இரண்டு மாதத்தில் கல்யாணம் என்றான். அப்படியா ரொம்ப சந்தோசம், அவன் கையை பற்றி குலுக்கினேன். என்ன காதல் கல்யாணமா? அவனிடம் கேட்டேன். சே..சே.. பொண்ணு எங்க பக்கத்து ஊர்தான், நல்ல வசதி, நல்ல கலர், எல்லோரும் ரொம்ப நல்லவங்க என்று அடுக்கிக்கொண்டே போனான். நில்..நில் அப்ப உன் காதல் என்னாச்சு? கேட்டேன்.
ஓ..அந்த பொண்ணுக்கும் அடுத்த மாசம் கல்யாணம். மாப்பிள்ளை “பாரின்ல” இருக்கறாரு, இயல்பாய் சொன்னான்.ஏண்டா வருத்தமா இல்லையா? என்று கேட்டேன்.
சே..சே..அவங்க கல்யாணத்துக்கு கூட பத்திரிக்கை கொடுத்தாங்க, கண்டிப்பா போவேன். உனக்கு புரியாது இதுக்கு பேர்தான் காதல்.
சத்தியமாக புரியவில்லை

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (14-Dec-17, 11:33 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 265

மேலே