கைப்பொருள் சுருங்குபு இல்லார் சொல் - வளையாபதி 66

கலி விருத்தம்

சொல்லவை சொல்லார் சுருங்குபு சூழ்ந்துணர்
நல்லவை யாரும் நனிமதிப் பாரல்லர்
கல்வியும் கைப்பொருள் இல்லார் பயிற்றிய
புல்லென்று போதலை மெய்யென்று கொள்நீ. 66 வளையாபதி

பொருளுரை:

தம் கையிற் பொருள் குறைந்து இல்லையான நல்குரவாளர் செயற்கரிய செய்து புகழுடையர் ஆயினும் அப்புகழை யாரும் அவையில் பாராட்டிப் பேசார்;

பொருளியல்பினை ஆராய்ந்து அறியுமியல்பு உடைய நல்ல அவையகத்தார் தாமும் மிகவும் மதிப்பாரல்லர்;

அந் நல்குரவாளர் பலகாலும் பயின்ற கல்விதானும் சிறப்புறாமற் பொலிவற்றுப் போமென்பதனை நீ வாய்மை யென்றே அறிந்து கொள்வாயாக!

விளக்கம்:

சொல்-புகழ். கைப்பொருள் சுருங்குபு இல்லார் எனக் கூட்டுக. பொருளியல்புகளை ஆராய்ந்து உணரும் நல்லவையார் தாமும் மதியார் எனவே ஏனையோர் மதியாமை கூறவேண்டுமோ?

இனி, ஏழை சொல் அம்பலம் ஏறாது என்னும் பழமொழிக்கிணங்க நல்குரவாளர் கூறுகின்ற மொழியை அவையினர் ஏற்று எடுத்துச் சொல்லார் எனினுமாம்.

இக் கருத்தினை,

இல்லாரை யெல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாருஞ் செய்வர் சிறப்பு. 752 பொருள்செயல்வகை

எனவருந் திருக்குறளானும்,

நல்லாவின் கன்றாயின் நாகும் விலைபெறூஉங்
கல்லாரே யாயினுஞ் செல்வர்வாய்ச் சொற்செல்லும்
புல்லீரப் போழ்தி னுழவேபோன் மீதாடிச்
செல்லாவா நல்கூர்ந்தார் சொல். 115 மெய்ம்மை

எனவரும் நாலடியானும்,

இனி நல்கூர்ந்தார் கல்வியும் சிறவாதென்பதனை,

எனைத்துணைய வேனும் இலம்பாட்டார் கல்வி
தினைத்துணையுஞ் சீர்ப்பா டிலவாம்- மனைத்தக்காள்
மாண்பில ளாயின் மணமக னல்லறம்
பூண்ட புலப்படா போல். 10 நீதிநெறிவிளக்கம்

எனவரும் குமரகுருபரவடிகளார் பொன்மொழியானும்,

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும். 1046 நல்குரவு

எனவரும் திருக்குறளானும் உணரலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (21-Dec-17, 12:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 57

சிறந்த கட்டுரைகள்

மேலே