குழந்தை தொழில் ஒழிப்பு

என்னவோ எழுத...3

என்னவோ எழுத எத்தனித்தேன்
எதுவும் பிடிபடவில்லை
எதற்கிந்த எழுதுகோல்
எரிதழலில் வீழ்புழுவெனும் வாழ்வினிலே...?!

குழந்தையும் தெய்வமும் ஒன்றென்றே
பாரங்களைச் சுமக்கட்டு மென..தெய்வக்
குழந்தை மேல் சுமை யேற்றும்
(அ)மங்கலம் நிறைநாடுனைக் கடித்தேனா...

எழுத்தாய் வடித்த நற்கருத்துக்களை
ஏடெடுத்துப் படித்து வாழ்வை
ஏற்றம் கொள்ளச் செய்யாமல்
ஏடெடுக்கும் பிஞ்சுக் கையில்
எச்சில் இலை எடுக்கவும்
ஓடு சுமக்கவும்
தீப்பெட்டி ஒட்டவும்
பீடி சுற்றவும்
வாடி சுள்ளி பொறுக்கவுமென
பற்பல வேலை கொடுத்து வாங்குவதேன்
குழந்தைதெய்வத்திடம் அருள் உயிரை....??
ஓஓஓஓஓ...
பிட்டுக்கு மண் சுமந்த பரமன் நாடதனால்
துட்டுக்கு மனப்புண் சுமத்துகிறாய்
குழந்தைதெய்வத் திடமென்று
எள்ளி நகைத்தேனா...

தெய்வக்குழந்தைத் தொழிலாளர் ஒழிப்பில் முழுமையுறா
தொய்வுப் பிரம்படி பட்டும் ..திரிபுரம்
எரித்த வார்சடையனாகி நாடே உனை
எரிக்க நாள் குறித்தேனா...

ஐந்தில் வளைந்தால் தான் வளையுமென
பாடச் சுமை ஏற்றி ...குழந்தை
முதுகை வளைக்கின்ற கறிக்கு தவாத
ஏட்டுச்சுரைக் கல்விநாடுன் மூக்குடைத்தேனா...

மழலைத்தெய்வம் மண்ணில் பிறந்த நாள்தொட்டே
மாடாய்பாடச் சுமை சுமக்க ... சந்திதோறும்
மழலையர் ஆங்கிலப்பள்ளி நொடியில் முளைக்கும்
மாண்புமிகு நாடுன் முகங்கிழித்தேனா...

என்னவோ எழுத எத்தனித்தேன்
எதுவும் பிடிபடவில்லை
எதற்கிந்த எழுதுகோல்
எரிதழலில் வீழ்புழுவெனும் வாழ்வினிலே...?!

எழுதியவர் : யாரோ (30-Dec-17, 9:42 am)
சேர்த்தது : முத்துக்குமார்
பார்வை : 910

மேலே