ஆனந்த யாழினை மீட்டு

ஆனந்த யாழினை மீட்டு - அதில்
அன்பென்னும் நாதத்தைத் தந்தியில் பூட்டு !
கானத்தில் சொக்கிடும் உள்ளம் - அங்குக்
காட்டாறாய்ப் பாய்ந்திடும் சங்கீத வெள்ளம் !

தாளத்தைத் தட்டியே பாடு - தக
தாம்திமித் தோமென்ற சந்தத்தில் போடு !
மேளத்தின் சத்தத்தைக் கேட்டு - நீயும்
மேடையில் ஆடியே அற்புதங் காட்டு !

மோகனம் வாசிக்கும் போது - ஏன்
மோனத்தில் மூழ்கினாள் பக்கத்தில் மாது !
தாகத்தில் நொந்திருப் பாளோ - அவள்
தண்ணீர ருந்திடக் காத்திருப் பாளோ ?

கொஞ்சும்புல் லாங்குழல் ஓசை - சுகம்
கூட்டிட உள்ளத்தில் பொங்கிடும் ஆசை !
வஞ்சிய வள்நெஞ்சில் ஏக்கம் - கண்ணன்
வந்ததைக் கண்டதும் கண்களும் பூக்கும் !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (3-Jan-18, 10:17 pm)
பார்வை : 182

மேலே