உள்ளத்திற் கஃதே உயர்வு

உள்ளம் முழுதும் உறைந்திருக்கும் அன்பினை
உள்ளம் திறந்தே யுரைத்திடுவீர் - உள்ளத்தால்
கள்ளமின்றி எந்நாளும் காதலை செய்திடுவீர்
உள்ளத்திற் கஃதே உயர்வு
---------------------------
கள்ளவிழி கொண்டு கவர்ந்தென் மனதினைக்
கொள்ளைய டித்த குலமகளாம் - வள்ளியவள்
கொள்ளையின் பத்தைக் கொடுத்திடுவாள் எந்நாளும்
உள்ளத்திற் கஃதே உயர்வு
---------------------------
வள்ளுவர் சொல்லிய வாழ்வின் அறத்தினை
உள்ளத்தில் வைத்தே உயர்ந்திடுவோம் - உள்மனதில்
உள்ளக் கருத்தை உலகிற்கு சொல்லிடுவோம்
உள்ளத்திற் கஃதே உயர்வு
---------------------------
கொள்கையெனச் சொல்லிதாம் கொண்ட பொருட்களை
உள்ளுக்குள் வைத்தா லுதவாதாம் - உள்ளதை
அள்ளிக் கொடுத்தே அரவணைத்து வாழ்ந்திடுவீர்
உள்ளத்திற் கஃதே உயர்வு
---------------------------
பள்ளி யிலேநாம் பயின்றால் கிடைப்பது
உள்ளத்தி லூறும் ஒழுக்கமாம் - உள்ளுயிர்
உள்ளவரை நாமும் ஒழுக்கமாக வாழ்ந்திடுவோம்
உள்ளத்திற் கஃதே உயர்வு
---------------------------
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (14-Jan-18, 5:27 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 137

மேலே