பூத்தாடும் புத்தாண்டே வருக

கண்ட கனவுகள் கண்முன்னே கூடிவர
எண்ணம் சிறக்க இன்பம் பெருக
வண்ணம் நிறைந்த வாழ்க்கை மலர
மண்ணும் செழிக்க வருவாய் புத்தாண்டே!

படர்ந்த துன்பங்கள் பறந்து ஓடிட
கடந்து வந்த கவலைகள் மறைந்திட
உடைந்து போன உறவுகள் சேர்ந்திட
மடமையும் மறைந்திட வருவாய் புத்தாண்டே!

ஏழ்மை நீங்கி ஏற்றம் அடைந்திட
பாழ்நிலம் முழுவதும் பசுமை அடைந்திட
ஊழ்வினை விடுத்து உயர்வும் அடைந்திட
வாழ்வியல் மேம்பட வருவாய் புத்தாண்டே!

இளமை பொங்கி இனிமை ஓங்கிட
வளர்பிறை போல அறிவும் வளர்ந்திட
தெளிவான அறிவுடன் திறமை மிகுந்திட
வளமும் பெருகிட வருவாய் புத்தாண்டே!

சோகம் மறைந்து துணிவும் பெற்றிட
வேகம் நிறைந்து வெற்றி கிடைத்திட
மேகமழைப் போல மகிழ்வை பொழிந்து
தேகம் நனைக்க வருவாய் புத்தாண்டே!

செல்வம் பெருகி வருமை தீர
இல்லாமை என்ற நிலையும் மறைய
நல்வினை புரிந்து நன்மை பெற்றிட
வல்லமை தந்திட வருவாய் புத்தாண்டே!

ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்

எழுதியவர் : வேல்பாண்டியன் கோபால் (14-Jan-18, 5:40 pm)
சேர்த்தது : வேல்பாண்டியன்
பார்வை : 4872

மேலே