ஏவுகணை நாயகன்

அகல்வான் உதிக்கும் ஆதவனாய்
மண் பிறந்து
கடமை செய்திட
தொப்புல் கொடி அறுத்து
இளஞ் சூரியனான்
இவ்வுலகில் வந்துதித்தாய்...

பனிமலராய்
மனம் படைத்து
நறுந்தேனாய்க்
குணம் நிறைத்து
மனிதம் எனும் வேரூன்றி
புனிதனாய் அவதரித்தாய்...

வில்லில் புறப்படும்
கணையின் வேகம் கொண்டாய்
கல்லையும்
சொல்லால் கரைத்திடும்
பகழியின் முனை போல்
நல்லறிவோடு
தெளிந்த சிந்தனையும் கொண்டாய்...

உயர்பதவி
வந்தாலும் தன்நிலை மாறாது
மக்களின் சேவகனாய்
உலா வந்தாய்...
நாட்டின் வளர்ச்சிக்கே
தினம் கனா கண்டாய்...

மாணவர்களின் இதயத்தில்
மங்காத இடம் பிடித்தாய்
ஆணவம் இல்லாது
எளிமையை
வாழ்வில் கடைப்பிடித்தாய்...

நெஞ்சத்தைப் பூட்டியதில்லை...
இலஞ்சத்தைக் கேட்டதில்லை...
கொள்ளையடிக்கும்
மழலையாய் உன் சிரிப்பு...
வெள்ளையடித்த
மனமே உன் சிறப்பு...

மணந்திடாது இருந்தாலும்
வாழ்வில் நீ மணந்திட்டாய்...
மேடை மலர்களால் அல்ல
வாடை மலர்களாய்...

பாரத ரத்னா
உனைப் பெருமைப் படுத்தியது...
யாவரும்
பாராத ரத்தினமாய்
நின் புகழ் ஒளி வீசுது...
வாழிய வாழியவே
பார் போற்றும் நின் புகழ்
வாழிய வாழியவே...


...இதயம் விஜய்...

எழுதியவர் : இதயம் விஜய் (16-Jan-18, 3:49 pm)
பார்வை : 70

மேலே