ஆளில்லா மங்கைக்கு அழகு இன்னா – மூதுரை 3
நேரிசை வெண்பா
இன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்
இன்னா அளவி லினியவும் - இன்னாத
நாளல்லா நாட்பூத்த நன்மலரும் போலுமே
ஆளில்லா மங்கைக் கழகு. 3 - மூதுரை
பொருளுரை:
இன்பம் தரும் இளமைப் பருவத்தில் ஒருவர்க்கு வறுமை வந்து சேர்ந்தால் அது துன்பத்தைத் தருவதாகும். துன்பம் தரும் முதுமையில் இனியவையாகிய பொருள்களும் துன்பத்தைத் தருவனவாம்.
அவை அனுபவித்தற்கு உரிய கணவன் இல்லாத மங்கையின் அழகு சூடுதற்குரிய காலமல்லாத காலத்தில் மலர்ந்த நல்ல மலரைப் போன்றதாகும்.
வறுமைக் காலத்தில் இளமையும், முதுமையில் செல்வமும் துன்பம் விளைவிப்பன ஆகும்.