வளர்மதி டீச்சர்

வளர்மதி டீச்சர்

வண்டியை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு படியேறி “தலைமயாசிரியர்” என போர்டு போட்ட என் அறைக்குள் நுழைந்தேன். அலுவலக உதைவியாளர் மணி “குட் மார்னிங்க் சார்” என சொல்ல மெல்ல தலையசைத்து என் நாற்காலியில் உட்கார்ந்தேன். மணி கொஞ்சம் பேனை போடு என்று சொல்லி விட்டு சுழலும் காற்றாடியின் காற்றை அனுபவித்து ஸ்…அப்பாடி வாய் விட்டு சொன்னேன். வாசலில் நிழலாடியது, மெல்ல தலையை திருப்பி வாசலை பார்த்தேன்.
கல்பனா டீச்சர் நின்று கொண்டிருந்தார்கள். உள்ளே வங்க டீச்சர். கல்பனா டீச்சர் கொஞ்சம் பெரிய உருவம்,சிவந்த நிறம் கொஞ்சம் மாணவ்ர்களிடம் டிசிப்ளின் எதிர்பார்ப்பவர், ஆகையால் ஏதேனும் மாணவனை பற்றி புகார் சொல்ல வந்திருப்பார் என நினைத்தேன். என் எதிரில் வந்து உட்கார்ந்தவர் சார்….என்று இழுத்தார் சொல்லுங்க டீச்சர் என்ன விசயம்? நம்ப வளர்மதி டீச்சர்..கொஞ்சம் மென்று முழுங்கினார் சார் நான் சொன்னேன்னு சொல்லாதீங்க, அவங்க தினமும் இரண்டு பை நிறைய திண்பண்டங்களை ஸ்கூலுக்கு கொண்டு வந்து விக்கிறாங்க, இதனால ஸ்டூடண்ட்ஸ் கூட்டம் அதிகமாகுது, எல்லாத்துக்கும் டிஸ்டர்ப் ஆகுது. இதை நீங்க கொஞ்சம் கவனிக்கணும் தயவு செய்து நாந்தான் ரிப்போர்ட் பண்ணிணேன்னு தெரிய வேண்டாம், மீண்டும் ஒரு முறை தன்னை தப்பித்துக்கொள்ள வழி வகை செய்து கொண்டார்.
சரிங்க டீச்சர் நான் எப்படி அவங்களை நீங்க விக்க கூடாது அப்படீன்னு சொலறது? என்ன சார் நீங்க ஒரு ஹெட் மாஸ்டர், ஸ்கூல் டிஸ்டர்ப் ஆகுது அப்படீன்னு சொல்றதுக்கு உங்களுக்கு உரிமையில்லையா?. இதே டீச்சர் போன மாதம் ஒரு அரை மணி நேரம் அதிகமாக வேலை சொல்லிவிட்டேன் என்பதற்காக ஹெட் மாஸ்டர்ன்னா டூட்டி டைமுக்கு மேலயும் வேலை கொடுக்கறதுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு? என்று சண்டை போட்டவர்கள், அடுத்தவர்களுக்கு வேலை ஏவும்போது மட்டும் உங்களுக்கு உரிமையில்லையா? என்று தலை மேல் ஐஸை கொட்டுவார்கள். இது எல்லா மனிதனின் இயல்புதான் என்று மனதில் நினைத்துக்கொண்டு சரிங்க டீச்சர் நான் பார்த்துக்கொள்கிறேன் சொல்லி அவர்களை அனுப்பி வைத்தேன்.
கிளார்க் குருநாதன் சிரித்தார். என்ன சார் நீங்க்களே சிரிச்சுக்கறீங்க? இல்லை இந்த டீச்சர் முந்தா நேத்து வளர்மதி டீச்சரோட ஒரு மணி நேரமா சிரிச்சு பேசிகிட்டு இருந்தாங்க, இப்ப இவங்களே வந்து அவங்களை பத்தி கம்பிளெயிண்ட் கொடுக்கறாங்க.நான் நினைக்கிறேன் அவங்க கிட்டே கடன் கிடன் கேட்டிருப்பாங்க அவங்க இல்லையின்னு சொல்லியிருப்பாங்க, உடனே இந்தம்மா அவங்களை போட்டு கொடுக்க வந்துட்டாங்க. தன் கற்பனையை ஓட விட்டு சொன்னார். அப்படித்தான்னு நாம் சொல்ல முடியாது குரு சார்…. ம்..மத்த டீச்சர்ஸ் யாரும் இதை பத்தி கம்பிளெயிண்ட் பண்ணறதில்லையே? நான் கூட பார்த்துகிட்டுதான் இருக்கேன். சரி குழந்தைகள் வெளியே போய் ஈ மொய்ச்சதை சாபிடறதுக்கு உள்ளே சுத்தமானதை சாப்பிடட்டுமே. சரி குரு சார் இந்த வளர்மதி டீச்சர் வீட்டுல ரொம்ப கஷ்டமோ? என்று கேட்டேன். எனக்கு அவங்க குடும்பத்தை பத்தி ஒண்ணும் தெரியாது சார், மணி உனக்கு தெரியுமா? அவனும் தனக்கு ஒண்றும் தெரியாது என்று தலையை ஆட்டினான்.
மாலை ஐந்து மணிக்கு மேலேயிருக்கும் நான் மாணவர்களின் வருகை பதிவேடுகளை பார்த்துக்கொண்டிருந்தேன்.எப்படியும் இந்த வேலைமுடிய ஒரு மணி நேரமாவது பிடிக்கும். கிளார்க்கும் தனக்கு சம்பள பட்டியல் போடும் வேலை இருப்பதால் தானும் ஒரு மணி நேரம் கூட இருப்பதாக சொல்லி வேலை செய்து கொண்டிருந்தார். மைதானத்தில் இன்னும் ஒரு சில மாணவர்கள் விளையாண்டு கொண்டிருக்கும் சத்தம் கேட்டு கொண்டிருந்த்து. எனக்கு வளர்மதி டீசரை பற்றி கல்பனா டீச்சரின் புகார் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.
மறு நாள் காலை நான் வரும் போதே என் அறைக்கு முன்னால் கூட்டமாக இருந்தது. உள்ளே வளர்மதி டீச்சர் எனக்காக காத்திருந்தார்கள் சார் இந்த ஸ்கூல் காம்பவுண்டுக்குள்ள செல்போன் வச்சிருக்க கூடாதுண்ணு நான் பல முறை சொல்லியாச்சு, பசங்க கேக்கற மாதிரி தெரியலை, அதான் நேத்து நாலு பசங்க கிட்ட இருந்து செல் போனை புடுங்கிட்டு அவங்க பேரண்ட்சை வர சொல்லி அனுப்பி வச்சுட்டேன். அவங்க வந்திருக்காங்க, நீங்க விசாரிங்க, சொல்லி முடித்தார். டீச்சர் முதல்ல உட்காருங்க என்று எதிரில் போடப்பட்டிருந்த நாற்காலியை காட்டி அதில் உட்கார வைத்து விட்டு மணி கொஞ்சம் வெளியே இருக்கறவங்களை கூப்பிடு என்றேன்.வந்தவர்கள் பரிதாபமாய் இருந்தார்கள்.தினமும் கூலி வேலைக்கு செல்பவர்கள் போல் இருந்தார்கள். அவர்களுக்கு எதற்கு கூப்பிட்டிருக்கிறார்கள் என்பது கூட தெரியவில்லை ஆனால் மாணவர்கள் கொஞ்சம் கூட பயப்பட்டவர்கள் மாதிரி தெரியவில்லை.அவர்களுக்கு அடிக்க மாட்டார்கள் என்பது நன்கு தெரியும். ஏனென்றால் அரசாங்கமே அவர்கள் பக்கம்தானே.
இதுக்கும் ஏழாவது தான் படிக்கிறார்கள். அவர்கள் தகப்பனார்களிடம் அவர்களை கூப்பிட்டதற்கான காரணத்தை டீச்சரை விட்டே விளக்க சொன்னேன். அவர்கள் கடைசியாக சொன்ன பதில் எங்களுக்கு ஒண்ணும் தெரியாதுங்க, வேலைக்கு போகலையின்னா சம்பளம் கிடையாது. இதை மட்டும் அனைவரும் ஒப்புவித்தார்கள் நான் அவர்களிடம் இனிமேல் “செல்போனை” உங்க பசங்க வச்சிருந்தாங்கன்னா ‘செல்போனை’ போலீசுகிட்ட ஒப்படைச்சிடுவோம். என்று ஒரு மிரட்டி மிரட்டி விட்டு அவர்களிடம் போனை கொடுத்து, இதை நீங்களே வச்சுங்குங்க, பசங்க கிட்ட கொடுக்காதீங்க. சொல்லி அவர்களை அனுப்பி வைத்தேன். என்னுடைய அறையை தாண்டி சிறிது தூரம் போவதற்குள் அவர்களிடமிருந்த செல்போனை அந்த மாணவர்கள் பிடுங்கி செல்வதை ஜன்னல் வழியாக பார்த்தேன். என்ன செய்வது? வருத்தப்பட்டுக்கொண்டேன்.
இந்த முடிவை வளர்மதி டீச்சரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை நீங்களே இப்படி இருந்தால் எப்படி ஸ்டூடண்ட்ஸ் எங்களை மதிப்பாங்க? நீங்கள் செல்போனை கொடுத்திருக்க கூடாது. கோபமாக கூறினார். விடுங்க டீச்சர் நாம் என்ன செய்யமுடியுமின்னு நினைக்கறீங்க? “செல்ல” வாங்கி வச்சுகிட்டா மட்டும் இவனுங்க கேப்பானுங்களா? இப்ப பாத்தீங்கல்ல, அவங்கப்பாகிட்டே இருந்து ‘செல்ல’ புடுங்கிட்டு போறதை. டீச்சர் இதை கேட்க தயாரில்லை. நான் ஒத்துக்க முடியாது சார் செல்ல ஒரு முறை பசங்க கிட்டே புடுங்கி வச்சுகிட்டா அவனுங்க இனிமேல் ஸ்கூலுக்கு கொண்டு வரமாட்டானுங்க. எனக்கு ஆயாசமாக இருந்த்து டீச்சர் “செல்ல” நாம வச்சிருந்தா அதைய நாம காவல் காத்திகிட்டு இருக்க முடியாது. டீச்சர் மீண்டும் மீண்டும் இதையே பேச எனக்கு பொறுமை போய் சட்டென்று நீங்க மட்டும் ஸ்கூல்ல திண்பண்டம் விக்க கூடாதுன்னு தெரிஞ்சும் விக்கறீங்களே? வாயிலிருந்து கட்டுப்படுத்த முடியாமல் வந்து விட்ட்து. டீச்சர் ஒரு கணம் திகைத்து விட்டார். அவர் இப்படி சொல்வேன் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். நான் விக்கறது தப்புன்னு நினைச்சீங்கன்ன நான் இன்னையோட விக்கறதை நிறுத்திக்கரேன். சடாரென எழுந்து சென்று விட்டார். என்னையே நொந்து கொண்டேன்.
மறு நாள் பகல் பதினோரு மணியிருக்கும் வெளியே ஒரே இரைச்சலாக இருந்தது. மாணவர்கள் போவதும் வருவதுமாக இருந்தார்கள். மணியை விசாரிக்க சொன்னேன். சார் வளர்மதி டீச்சர் திண்பண்டம் எதுவும் கொண்டு வரலையாம் பசங்க வெளியில போய் வாங்கிட்டு வர்றாங்க. மெல்ல வெளியே வந்தேன். காம்பவுண்டுக்கு வெளியே பள்ளியை ஒட்டிய கடைகளில் கூட்டம் அலை மோதியது. சுத்தமில்லா பண்டங்களை வாங்குவதற்கு குழந்தைகள் போட்டி போட்டன. சே..இந்த வள்ர்மதி டீச்சர் ஏன் இப்படி…? ஒரு வாரம் ஓடி விட்டது. இப்பொழுது வளர்மதி டீச்சர் திண்பண்டங்களை விற்பதில்லை என்பதை குழந்தைகள் புரிந்து கொண்டன. அதனால் பள்ளிக்கு பக்கத்தில் புதிது புதிதாக கடைகள் முளைத்தன. ஈ மொய்க்கும் திண்பண்டங்கள் விற்கப்பட்டன. அது போக பஸ் போகும் பாதையாதலால் வண்டிகள் சென்று கொண்டே இருந்தன. இதனால் வரும் புகையும், மண்ணும் திண்பண்டங்களில் படிந்து கிடந்தது.. அதை பற்றி குழந்தைகள் யாரும் கவலைப்படவில்லை.அவர்களை சொல்லி என்ன பயன்? பசிக்கு எதையாவது சாப்பிடவேண்டும் என குழந்தைகள் ஏங்குவது இயல்புதானே எனக்கு யாரை குறை சொலவது என்று புரியவில்லை.ஆக் மொத்தம் பாதிப்பது குழந்தைகள் உடல் நலம்தான். வளர்மதி டீசருக்கு இது ஏன் புரியவில்லை?
மதியம் இரண்டு மணிக்கு மேல் இருக்கும் அப்பொழுதுதான் சாப்பிட்டு முடித்து இருக்கையில் அமர்ந்திருந்தேன். பூமிநாதன் சார் மெல்ல உள்ளே வந்தார். அவர் மாணவர்களுக்கு அறிவியல் பாடம் எடுப்பவர். என்ன விசயமாய் என்னை பார்க்க வந்திருப்பார் என்று எண்ணமிட்டவாறு வாங்க பூமிநாதன் சார் வரவேற்றேன். என் எதிரில் உட்கார்ந்தவர் சார் வளர்மதி டீச்சரை திண்பண்டம் விக்க கூடாதுன்னு சொல்லிட்டீங்கலாம், கல்பனா டீச்சர் சொன்னாங்க. எனக்கு கல்பனா டீச்சரின் அரசியல் புரிந்தது. அதிலிருந்து நழுவ வேண்டும் என்று அப்படியா சொன்னாங்க, ஒரு வேளை அவங்க விக்கறதுனால இவங்களுக்கு ஏதாச்சும் நன்மை இருக்கா? மெல்ல தூண்டில் போட்டேன். என்ன சார் சொல்றீங்க. நம்ம ஸ்கூலுக்கு பக்கத்துல இருக்கற நாலு கடையும் அவங்களதுதான் சார். அது போக இரண்டு கடைகளை வாடகைக்கு விட்டுருக்காங்க.
இப்பொழுது எனக்கு புரிந்தது. ஏன் சார் இந்த வளர்மதி டீச்சருக்கு கவர்ண்ட்மென்ட் சம்பளம் பத்தலையோ? இதையெல்லாமா ஒரு டீச்சரா இருந்துட்டு செய்யறது? அடுத்த தூண்டில் போட்டேன். ஐயோ சார் அது அந்த டீச்சருக்கு இல்லெங்க, அவங்க அனாதை ஆசிரமத்துல வளர்ந்தவங்க. அங்க இவங்களை மாதிரி வேலை செய்யறவங்க தன்னோட சமபளத்தை அந்த நிர்வாகத்து கிட்டே கொடுத்து அவங்க கொடுக்கற பணத்துலதான் இவங்க செலவு பண்ணூவாங்க. அது போக அங்க இருக்கற வயசானவங்க செய்யற திண்பண்டங்களை எடுத்துட்டு வந்துதான் விக்கறாங்க. அதனால சுத்தமா இருக்கும். இது தெரிஞ்சதுனால நாங்களும் வீட்டுக்கு வாங்கிட்டு போவோம். அது போக…... என்று சொல்லிக்கொண்டே போனார். எனக்கு மனசு வலிக்க ஆரம்பித்தது.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (27-Jan-18, 2:37 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 199

மேலே