ஆகுநாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா – மூதுரை 5
நேரிசை வெண்பா
அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா. 5 – மூதுரை
பொருளுரை:
நன்கு கிளைத்து வளர்ந்த தோற்றத்தால் நீண்டு உயர்ந்த மரங்கள் எல்லாம் பழுக்கும் பருவம் வராமல் பழங்கள் பழுக்காது;
அதுபோல, அடுத்து அடுத்து முயற்சி செய்தாலும் நடைபெற்று முடியும் காலம் வந்தாலன்றி மேற்கொண்ட காரியங்கள் முடியாதாம்.
எனவே, எந்தச் செயலும் காலம் அறிந்து தொடங்க வேண்டும்.