முதுமொழிக் காஞ்சி 15
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஏற்ற முடைமை எதிர்கோளி னறிப. 5
- அறிவுப்பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
ஒருவன் ஆராய்ந்து துணியவல்லவன் என்பதனை அவன் முற்கொண்டு பாதுகாக்கும் காப்பால் அறிவர்.
எற்றம் - உய்த்தல். எதிர்கோள் - (எதிர்த்தல் – முற்படுதல், முற்கொண்டு பாதுகாக்கும் காப்பு.
பதவுரை:
எற்றம் உடைமை - ஒரு காரியத்தை ஒருவன் ஆராய்ந்து முடிக்க வல்லவன் என்பதை,
எதிர்கோளின் - இடையூறுகள் வருவதற்கு முன்னே அவன் செய்யும் பாதுகாவலால்,
அறிப - அறிவர்.
ஒருவன் காரிய முடிக்கவல்லவன் என்பதற்கு, அக்காரியத்தில் வருதலான இடையூறுகளை யறிந்து அவன் செய்யும் பாதுகாப்பே அறிகுறி என்பதாம்.
'எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய்' 429 அறிவுடைமை
'வாரி பெருக்கி வளம்படுத் துற்றவை
ஆராய்வான் செய்க வினை. 512 தெரிந்து வினையாடல்'
'ஏற்றமுடைமை' என்று பாடங்கொண்டு, ஒருவன் குடிப்பிறப்பு முதலிய உயர்வுடையன் என்பதை அவன் தன்னிடம் வருவாரை எதிர்கொண்டு செய்யும் உபசாரத்தால் அறிக என்றும் பொருளுரைப்பர்.
அவ்வுபசாரங்கள் 'இருக்கை யெழலும் எதிர்செலவும் ஏனை விடுப்ப ஒழிதலோ டின்ன - குடிப்பிறிந்தார் குன்றா வொழுக்கமாக் கொண்டார்' (நாலடியார்) என்பதனால் அறியப்படும்.