முதுமொழிக் காஞ்சி 26

குறள் வெண்செந்துறை

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
முறையில் அரசர்நாட் டிருந்து பழியார். 6

- பழியாப்பத்து, முதுமொழிக் காஞ்சி

பொருளுரை:

நடுவு நிலையில் ஆட்சி செய்யாத அரசருடைய நாட்டில் இருந்து அவ்வரசர் நடுவு செய்யாமையை யாவரும் பழியார்.

பதவுரை:

முறைஇல் – நீதி முறை இல்லாத,

அரசர் நாடு – அரசருடைய நாட்டில், இருந்து - வசித்திருந்து,

பழியார் - அவ்வரசர் நீதிமுறை செலுத்தாமையை எவரும் பழித்துரையார்.

கொடுங்கோலரசருடைய நாட்டில் வசிப்பவர் அக்கொடுங்கோன்மையைப் பழித்துரைத்தால் அவவ்வரசருடைய கொடுமைக்கு உள்ளாவராதலின் அது செய்யார்.

நடுவுநிலைமை - 'பகை, நொதுமல், நண்பு என்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்ப நிற்கும் நிலைமை' என்றும்,

நடுவு - 'ஒருவன் பொருட்குப் பிறன் உரியனல்லன் என்னும் நடுவு' என்றும் உரைப்பர் பரிமேலழகர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Feb-18, 11:17 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 83

மேலே