பெண்களே கவனியுங்கள்

பெண்ணே!
இங்கே கவனி...

உனக்காய் போராட
இங்கு...
பாரதியுமில்லை
பாரதிதாசனுமில்லை,

காந்திகூட
இச்சாபத்தியத்தின் அடிமையே!

சிசுவதையில் தப்பித்தாய்
பரிணாம வளர்ச்சியில்
பெரிதாய் விளைந்திருக்கிறது
பாலியல் வன்கொடுமை..,

பத்திரமாயிரு!

பலர் பேச்சில்
சந்தனம் கமழும் - உள்ளம்
கூவத்தில் ஊறியிருக்கும்..,
பாதை தவறினால்
பாதாளமே வாழ்க்கையாகும்,
பார்த்துப்பழகு!

நிகழ்கால ஏகபோகத்தில்
திளைத்துவிடாதே!
எதிர்காலம்...
ஏகாதிபத்தியத்தின்
கைப்பிடியில்!

ஏட்டெழுத்தில்
சுருக்கமாய் கூறுகிறேன்
உனக்கொரு
எதிர்கால ஜாதகம்
கேட்டுக்கொள்..!

ஆணாதிக்கம்
கிளைப்பரப்பும் - அதில்
பெண் சுதந்திரம்
பல நூற்றாண்டுகள்
பின்சென்றிருக்கும்..!

சட்டமெல்லாம்
சமத்துவம் பேசாது!
சமாதிகளே சட்டத்தின்
சமத்துவமாக மாறும்!

நாட்டின் வளங்களோடு
நாளை நீயும் ஏற்றுமதியாவாய்!
நாட்டின் வளர்ச்சிக்கு
எதுவும் சரியே..,

இரண்டாம் இனமாய்
பத்திரமாக பாதுகாக்கப்படுவாய்!
இனப்பெருக்கத்திற்க்காக மட்டும்..,

நவீன ஆராய்ச்சிக்கு
நீயேகூட எலியாக மாறலாம்!
ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை..,

வேற்றுலகவாசியின்
வருகை நிகழும்..,
விருந்திற்க்குத் தயாராயிரு..!

பசுவதைக்கூடமெலாம் பெண்வதைக்கூடமாகும்..!
இடப்பற்றாக்குறையே
வதைக்கு காரணமாகும்..!

ஏவுகனை ஏவ
உன் ரத்தம் தேவைப்படும்..,
தோற்றுவிட்டால்...
அடுத்த முயற்சிக்கு
உன் உயிரே இலக்காக
நிர்ணயிக்கப்படும்..!

நீதிகேட்டு நீ வீதிக்கு வந்தால்
நாடுமட்டுமல்ல...
சில கிரகங்களுக்கும்
கடத்தப்படுவாய் - கட்டுப்பாடே
உன் கல்வியாக மாறும்..!

நிகழ்கால சுதந்திரத்திற்க்குள்
எதிர்கால அடிமையாகிவிடாதே!
இப்பொழுதே வீதிக்கு வா..!

கொஞ்சம்பொறு...

தனியே வந்துவிடாதே!
உடனடியாக உன்மீது பாயும்
விபச்சார வழக்கு!

ஓரினமாய் எழுந்துவா!
எதிர்கால
பெண்ணுரிமைக் காக்க
நிகழ்கால
சரித்திரம் படைத்திடு!

எழுதியவர் : யாழ்வேந்தன் (16-Feb-18, 5:15 pm)
பார்வை : 1071

மேலே