புதிய போர்வீரன்

 அன்றுபோலவேதான் இன்றும்
நீ சிரித்துக் கொண்டிருக்கிறாய்
புகைப்படத்தில்

உன் வசீகர முகத்திற்கு
கூடுதல் அலங்காரமாய்
என்னிடமிருந்து நீ
எடுத்துக்கொண்ட
பூவும் பொட்டும்.

அயர்ந்த தூக்கத்தில் வரும்
ஐந்து நிமிடக் கனவாய்
முடிந்துவிட்டது
நம் இல்லற வாழ்க்கை

செவ்விதழ் சிறுஇதழ் என
வர்ணித்தாயே இந்த இதழ்கள்
சிரிப்பை மறந்து
சில மாதங்களாகிவிட்டன

இந்நாட்டுக்கு இன்னுயிர்
ஈந்தாய் அல்லவா எல்லையில்
அதற்குக் கைம்மாறாய்த்தான்
இச்சமுதாயம் எனக்களித்துள்ளது
புத்தாடை வெள்ளையில்

மாங்காய் தின்னக் காலம்
வந்ததென கடிதம் நான்
எழுதிக்கொண்டிருக்கையில்
தந்தி வந்தது மாமா
நீ இறந்தாய் என்று

இராணுவ மரியாதையுடன்
உனக்கு அஞ்சலி
ஒரே ஒரு நாள் மட்டும்
அவமரியாதை அவலங்கள்
இனி எனக்கு தினம்தினமும்

சீதேவி என்ரவர்கட்கும்
இன்று நான் சகுனத்தடையாம்
தங்கமே என்றவர்கள்
தரித்திரம் என்கிறார்கள்

உப்பில்லா உணவு
உணர்சிகளைத்தான் அடக்கும்
உன் நினைவுகளை
என்ன செய்யும்?
நீர்ப்பாசியாய் உன் நினைவுகள்
நிச்சயம் முடிப்பேன் உன் கனவுகள்

இன்னும் நான்
வாழ்ந்துகொண்டிருப்பதே
இன்னுமொரு போர்வீரனை
என் வயிற்றில்
சுமந்துகொண்டிருப்பதால்தான்

எழுதியவர் : செவல்குளம் செல்வராசு (18-Feb-18, 10:47 pm)
பார்வை : 418

மேலே