முதுமொழிக் காஞ்சி 35
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
செய்யாமை மேற்கோள் சிதடியிற் றுவ்வாது. 5
- துவ்வாப் பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
நிறைந்த ஓசையுடைய கடல் சூழ்ந்த உலகத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் சொல்வது என்னவென்றால் செய்யத்தகாதனவற்றை மேற்கொண்டு செய்யத் தொடங்குவது மையற்றன்மையின் நீங்கி யொழியாது.
பதவுரை:
செய்யாமை - தாம் செய்யத்தகாத காரியங்களை,
மேற்கோள் - செய்வோமென்று மேற்கொள்வது,
சிதடியின் - மூடத்தன்மையின், துவ்வாது - நீங்கி யொழியாது.
செய்யத்தகாத காரியங்களைச் செய்வதாக மேற்கொண்டு தொடங்குவது மூடத்தன்மையின் வேறாகாது.
'செய்தக்க வல்ல செயக்கெடும்: செய்தக்க
செய்யாமை யானுங் கெடும்.'
'பேதைமையு ளெல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல்.' - திருக்குறள்.
சிதடி - (சிதடு - பேதைமை) - அறிவிலி. 'சிக்கர் சிதடர்' எனச் சிறுபஞ்சமூலத்தில் வருகின்றது.